Tuesday, January 29, 2013

















இறுதி யுத்தம்… முள்ளிவாய்க்கால்… முள்வேலி முகாம்



யோ.கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு” ஒரு எனும் சிறுகதைத் தொகுதி குறித்து விமர்சனக் கருத்துரை ஒன்றை முன்வைக்க முயலும்போது அவருடனான உரையாடல் தருணங்கள் இடைவெட்டுவதைத் தவிர்க்க இயலாதோ என்று சந்தேகம் எழுகிறது. படைப்பு ஒன்றை, ஆசிரியர் பற்றிய முன்னனுமானங்கள் ஏதுமின்றி அணுகுவது அவசியம் என்பது பெரும்பாலும் சரியானதுதான். இந்தப் பதிவைக் கூடியவரை ஆசிரியரைக் கடந்து சிறுகதைகளை மட்டுமே முன்னிறுத்தி அலசுவதற்கு முயல்வேன். பிரதி வெளிப்படுத்தும் ஆசிரியர் அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்கலாம்.
தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை பலப்படுத்துவதோடு, தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தைத் துரிதப்படுத்த யோ.கர்ணன் போன்றவர்களது முழுமையான யுத்தசாட்சியமே விஞ்ஞானபூர்வமானதாகவும், அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் அமையும் எனக்கூறும் நிலாந்தன் இவ்வாறு கூறியிருந்தார்: “கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட ஈழப்போர் உயிருள்ள வெளிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்திமிக்க அரசுகளின் சற்றலைற் கமராக்களைத் தவிர வேறெந்த வெளிச்சாட்சிகளும் அங்கீகரிக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்தகளத்தில் நின்ற உட்சாட்சிகளே. இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தன்னிலை மறந்து தனது செயல்களைத் தானே தனது கைபேசி கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது. மற்றத்தரப்பு தியாகிகளும், கைதிகளும், அகதிகளும் ஆகியது. இவர்களின் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார். பெரும்போக்காகவுள்ள யுத்தசாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்தசாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்.”
மேற்படி நிலாந்தனின் குறிப்பு நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. வடலி வெளியீடான இந்நூல் ஆசிரியர்-படைப்பாக்கம் குறித்து இத்தகவலை மட்டுமே தந்துள்ளது. மற்றும்படி நேரடியாகவே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்க ஏற்றதாகவே நூல் உள்ளது. என்வரையில், கர்ணனைச் சந்திப்பதற்கு முன்னரே அவரது சிறுகதைகளை அவ்வப்போது வெளியான சஞ்சிகைகளில் படித்தபோது, கள அனுபவங்களோடு எழுதப்பட்டது குறித்த தகவலையும் இணைத்து வாசித்திருக்கிறேன். வெளிச்சாட்சிகள் இறுதி யுத்தத்தில் இடம்பெற அனுமதிக்கப்படாதது பேரினவாத ஆட்சியாளர் கைங்கரியம் என்றால், கள அனுபவங்கள் மக்கள் நலநாட்டத்தோடு வெளிவர ஏற்ற சாட்சிகள் இல்லாது ஆக்கப்பட்டது, தலைமையேற்ற சக்தியின் பாசிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியம் என்பதாக ஆதிக்கவாத நோக்கு மட்டுமே பேசுபொருளாக உள்ள ஈழத் தமிழ்ச் சூழலில் மக்கள் விடுதலை உணர்வோடு இணைந்த தேசிய இனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கையைக் கேட்பது அருந்தல். அத்தகைய மிகக் குறைவாயே உள்ள குரலில் ஒன்றாக கர்ணனின் இந்தச் ‘சாட்சியம்’ அமைந்துள்ளது.
கள அனுபவங்கள் என்ற பேரில் வலதுசாரிப் பிற்போக்கு நிலைப்பட்ட பதிவுகள் வெளிப்படும் தமிழ்ப் பாசிசம் ஆளும்போது அதற்குத் துதிபாடி பேரினவாதம் மேலாண்மை பெற்ற நிலையில் புலிகளை வரிக்குவரி தாக்கும் அனுபவமீட்புகளும் வந்தபடிதான். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்றில்லாமல் உண்மையான விடுதலை நாட்டத்தோடு போராட்டத்தில் இணைந்து, திசை கெட்டழியும் போக்கில் செயற்பாடுகள் தறிகெட்டுப்போவதைக் கண்டு ஆதங்கப்பட்டு, வீழ்ச்சியை மறுமதிப்பீடு செய்ய முனையும் மனப்பாங்கு கைவரப்பெற்ற படைப்புள்ளம் ஒன்றே சரியான ஆக்கங்களை வெளிப்படுத்த இயலும்.
இந்தச் சமகாலத்தில் இத்தகைய ஆரோக்கியமான விமர்சன நிலைப்பட்ட வேறொரு சிறுகதைத் தொகுதி மற்றும் நாவல் என இரு படைப்பாளிகளைப் படிக்க முடிந்துள்ளது. அவைகுறித்து பேசுமுன்னர் கர்ணன் பற்றிப் பேச அவசியம் உள்ளது. மிக நெருக்கமான அனுபவ எல்லையைத் தொட்டமையும் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் தனது கருத்தியலை விருத்தி செய்யும் போக்கில் முன்னேறுவதையும் இவரிடம் அதிகமாக காண இயலுமாயுள்ளமையால் இவரது “சேகுவேரா இருந்த வீடு” எனும் சிறுகதைத் தொகுப்புக் குறித்து சில வார்த்தைகள். இந்தத் தலைப்புக் கதை ‘தோழர்களை’ போராளிகளாக தமிழ்த் தேசிய வரலாறு பெற்றிருந்த இருபத்தேழு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை பெற்றுவந்த மாற்றங்களைக் கூறுவது. தம்பி சேகுவேரா என்ற பேரோடு இயக்கமானதால் இழந்த வீட்டை இறுதிவரை மீட்கமுடியாத அண்ணனின் குடும்பம் படும் பாடுகள் அந்தக்கதை. சீதனமாக அந்த வீட்டைப் பெறவேண்டியவள் காணாமல் போவது எமது வரலாற்றின் குறியீடுமாகும்.
அந்தக் கதையை அடுத்து இடம்பெறும் “ஐயனின் எஸ்.எல்.ஆர்.” தோழர்களில் ஒரு பிரிவு அரசு சார்பு இயக்கமாக சமாதான காலத்தில் யாழ் மண்ணில் இருந்த சூழலுக்குரியது. முன்னர் புலிப் போராளியைக் காதலித்து, இதே இயக்கத்தால் கைதுசெய்து ‘வைத்திருக்கப்பட்டு’ விடுதலையான பின் வெளிநாடு சென்று 15 ஆண்டுகளின் பின், இந்தச் சமாதான காலத்தில் ஊர்வந்த பெண், ‘தோழர்’ போராளியோடு உரையாடுவது உச்சக் கட்டம். அந்தத் தோழர் தனது தலைமை திருமணமே செய்யாது மக்களுக்காக வாழ்வது பற்றிப் பேசும்போது அவள் சொல்வாள், நான் மட்டும் அப்போது அபோஸன் செய்யாதுபோனால் உன் தலைவரின் வாரிசு என் வயிற்றில் வளர்ந்திருக்கும் என்று. கால ஓட்டத்தில் போராட்டப் போக்கு மாற்றங்களின் நிதர்சனத்தை உள்ளவாறே சொல்லிச் செல்வதற்கு அப்பால், அரசியலற்று எரிந்த கட்சி – எரியாத கட்சி என்கிற மனப்பாங்கில் புலிகளால் விரட்டப்பட்டு அரசோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்ட இயக்கத்தை ‘ஒட்டுக்குழு’ என அடையாளப்படுத்த முற்படுகிறவர்களிலிருந்து வேறுபடுகிற அதேவேளை, அவர்களின் புனிதப்படுத்தல் முயற்சியையும் இவ்வகையில் அம்பலப்படுத்துகிறார் இக்கதைசொல்லி.
அதேவேளை போராட்டத்தின் அனைத்தையுமே புனிதப்படுத்தும் தூய தமிழீழத் தேசியர்களின் மாயக்கற்பனைகளையும் தகர்த்து யதார்த்த இருப்பை உள்ளது உள்ளபடி, இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறார். சேறும் சகதியும், வேர்வையும் வெறுப்புகளும், வாழத்துடிக்கும் அவதிகளும் மரண ஓலங்களும், இலட்சிய உந்துதலும் காட்டிக்கொடுப்புகளும் என அனைத்துப் பக்கங்களையும் உண்மை மனிதர்களின் முகங்கள் வாயிலாகவே காட்டிச் செல்கிறது “சேகுவேரா இருந்த வீடு”. மேற்குறித்த இரு கதைகளையும் அடுத்ததும், இறுதிக்கதையுமான “இரண்டாவது தலைவர்” எனும் சிறுகதை இது தொடர்பில் கவனிப்புக்குரியது. இயக்கத்தில் இரண்டாவது தலைவர் யார் என நச்சரித்த இளம் போராளி, அரசியல் ‘மாஸ்ட்டரால்’ கடுமையாக எச்சரிக்கப்படுவான். அவன் கடற்போராளியாகி உயர்நிலை அடைந்தபோதும் இரண்டாம் தலைவர் பற்றிய கேள்விகளோடுதான் தாய்லாந்து ஆயுதக்கொள்வனவுக்குச் சென்ற காலத்தில் சர்வதேசத்தொடர்பில் இயங்கும் கே.பி. என்ற இரண்டாம் தலைவரைச் சந்திக்கிறான். எல்லாம் முடிந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியேறிய நாளில் வந்து வாழ்த்துத் தெரிவித்த அடையாளம் மறந்த அதே இரண்டாம் தலைவரை அறியும்போது அவன் மட்டுமன்றி வாசக உள்ளங்களும் அதிர்ச்சிக்குள்ளாகும்.
ஆதிக்கவாத தமிழ்த் தேசியத்தின் இன்னொரு முகம் இது. கே.பி. என்கிற தனியாளின் ‘துரோகம்’, அல்லது அதை அம்பலப்படுத்த அவசியமற்ற காலப்பொருத்தமற்ற கதைசொல்லியின் முயற்சி என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசியலற்ற வெறும் யுத்த சன்னதத்தின் அவல முடிவு இது என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு விருப்பமற்று, நாம் விரும்பாத விடயம் உண்மையேயாயினும் நாம் கவனங்கொள்ளப்போவதில்லை என்கிற எமது பொதுப்புத்தி பட்டும் தெளியாத மனப்பாங்கைக் காட்டுவது. ஈழப்போராட்டம் முழுமையிலுமே இத்தகைய தீக்கோழி மனோபாவம் எம்மிடம் செயற்பட்டதன் பேறு இன்றைய அவல முடிவுக்குக் காரணம் என்பதை உணர்வது அவசியம். இந்த மனக்கோளாறுடன் கர்ணனின் கதைகளைப் படிப்பவர்கள் அசூசைக்குள்ளாவது தவிர்க்க இயலாததே. உண்மையைக் காண அச்சமற்று, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான மார்க்கத்தைக் கண்டறிய முயல்கிறவர்களுக்கு இக்கதைத் தொகுதி மிகப் பெரும் பொக்கிசமாய்த் தெரியும். சிறிய நிலப்பரப்பில் சிக்குண்டு கொடுக்குப்பிடிக்குளிருந்து மீழத்துடித்த இறுதிக்கணத்தில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் தவிப்புகளும், மனிதம் பேண முயலும் கணங்களும், இலட்சியப்பற்றும் எனப் பல்வேறு தருணங்கள் இங்கு பேசுபொருளாகியுள்ளன.
“திரும்பி வந்தவன்” என்கிற முதல் கதை, இயக்கத்துக்குப் போய், இறுதிக்கட்டத்தையும் கண்டு புனர்வாழ்வுபெற்றுத்திரும்பிய போராளிக்கு திருமணப் பேச்சின் சலனம் தனது ஆண்மைச் சாத்தியத்தைப் பயிற்சிபெற வழிப்படுத்துவதைக் கூறுகிறது. வவுனியாவில் அதன்பொருட்டுவந்த பாலியல் தொழிலாளிப் பெண், தனது தாயை அத்தொழில் காரணமாக இயக்கப் போராளியாக இருந்தபோது அவன் மரணதண்டனைக்குள்ளாக்கியதைக் கூறி, விட்டுவிடுபடி கேட்டுக்கொண்டதில் அதிர்ச்சிக்குள்ளாவதைக் காட்டும். மூன்றாவது கதை, “திரும்பி வந்தவள்”. ஆணாதிக்க சமூகத்தில் அந்தப் போராளிக்கு இருந்த வாய்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது திரும்பி வந்தவளின் கதை. அவளைக் காதலித்தவன், லண்டனில் புலிக்கொடி ஏந்திச் சர்வதேசங்களுக்கு எல்லாம் காட்டும் போராட்டத்தை முன்னணியில் நின்று நிகழ்த்தியபோதிலும், இயக்கத்திலும் இராணுவ முகாமிலும் இருந்தவளைத் திருமணம் செய்ய முன்வராததைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதைக் காட்டும். அவளது கண்ணீர், லண்டன் போராட்டத்தின் பத்திரிகைப் படத்திலுள்ள புலிக்கொடியைக் கரைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேப்பருடனுள்ள அவளது உணர்வுகளை முழுதாகப் புரிந்து கொள்ளும் சிறுவன் பார்வையில் நகரும் கதை, அண்ணன் அவளை ஏற்க மறுக்கும் நிதர்சனம் குறித்த விளக்கம் முழுமை பெறாத தவிப்பைக் காட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் ஒடுக்குமுறையின் அடிப்படை தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருகதைகளும் அமைந்துள்ளன.
“தமிழ்க் கதை” அகதிமுகாம் அவலத்தை மட்டுமல்லாமல், இனக் குரோதத்துக்கு அப்பாலான தந்தையாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் பதிலடியைக் காட்டும்; தாயின் மரணம், தெரியாத சிறுமியின் மரணம் என்ற கொடூரங்களோடு இருப்பிடம் திரும்புகிறவனை “அரிசி” கிழையும் அக்காவின் இருப்பு நாட்டம் வாழ்க்கைக்கு அழைப்பதாக அமையும். “கதைகதையாம் காரணமாம்” விசாரணையாளரிடம் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் போராளியைக் காட்டும். “வேதாளத்திற்குச் சொன்ன கதை” அத்தகைய விசாரணையில் புதைக்கப்பட்ட இயக்கப் பணத்தைப் பங்குபோடக் கேட்கும் தேசபக்த விசாரணையாளனைக் காட்டுவது. “சீட்டாட்டம்” அரசியலற்ற இயக்க வங்குரோத்தைப் பொதுமகன் பார்வையில் காட்டும். “சோசலிசம்” அதை இன்னொரு வடிவில் பேசும். “பாவமன்னிப்பு” சகபோராளிகளைக் காக்கத் தன்னை அர்ப்பணித்த உயர் பண்பாளனைக் காட்டும். “பாலையடிச் சித்தர்” வாய்ச் சவடால் வீரரின் சரணடைவையும், போராளியின் நிதர்சனத்துக்கு திரும்பும் நிர்ப்பந்தங்களையும் பேசும்.
பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன. வறட்டுத்தனமான தந்தையை வஞ்சிக்கும் வகையில் இயக்கமெனக் கணவன் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெண் சிங்களப் படையினரோடு உறவாடுவது வெறும் அதிர்ச்சிப் பாத்திரம் மட்டுமல்ல, அவதிவாழ்வின் இன்னொரு மறுபாதி.
எரிந்த கட்சி – எரியாத கட்சி (போலியான மக்கள் ஆதரவைப் பெற புலிப் புகழ் பாடுவது, வஞ்சிக்கப்பட்டோமே என்ற கோபத்தில் புலி எதிர்ப்பை மட்டும் பேசுவது) என்ற ஏதாயினும் ஓர் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது, வரலாற்றுச் செல்நெறியின் மிகப்பிரதான கணத்துக்கான பல்வேறு தருணங்களைக் கர்ணன் அற்புதமாகக் கலைத்துவப் படுத்தியுள்ளார். இவை சிறுகதைகள் என்ற போதிலும், பல்வேறு பாத்திரங்கள், வேறுபட்ட குணாம்சங்கள், எதிர்-எதிர் நலன் என்பன பேசு பொருளாக அமைகையில், குறித்த களமும் காலமும் காட்டப்படும் வகையில் நாவலுக்குரிய வாசிப்பு அனுபவத்துக்கு நெருங்கிவர வாய்ப்பைத் தருகிறது. இருப்பினும் நாவல் ஒன்றில் இவை ஒருங்கமைக்கப் படும்போது விரிந்த அனுபவச் செழுமையும் தேடலும் தெளிவும் சாத்தியமாகும். கர்ணனின் கருத்தியல் தெளிவைக் காணும்போது அவரால் அத்தகைய நாவல் ஒன்றைத் தர இயலும் என்றே தோன்றுகிறது. தருவார் என்றே நம்புவோம். அதற்கான புறச் சூழலை எமது பண்பாட்டு நகர்வு ஏற்படுத்துமா, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் குறுகிய மனப்பாங்கால் எதிர்நிலையை ஏற்படுத்துவோமா என்ற கேள்வியும் எழாமலில்லை. எமது பங்குக்கு குறுங்குழு வாதங்களைத் தகர்த்துப் புதிய பண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்த இச்சவாலை முகங்கொடுக்க ஏற்ற களமாகவும் ஆக்கிக் கொள்ளலாமல்லவா? ஆக்குவோம்!
ந.இரவீந்திரன்
எதுவரை -இதழ் 08

Wednesday, January 2, 2013

கலந்துரையாடல் -இனி அவன்


கடந்த முழுமதி(போயா) தினமான 27.12.2012 இல் கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் காலை பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் இனி அவன் ( Him, Here After - 2012) போன்றன..அசோக்க ஹந்தகம இயக்கத்தில் வெளியாகியிருந்த "இனி அவன்" தமிழ்த் திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கான அமர்வு அது. ச.சிவகுருநாதன், அனோமா இராஜகருணா (சினிமா நெறியாளர்) ஆகியோர் ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி தமிழிலும் சிங்களத்திலும் உரைமாற்றம் செய்யப்படும் எனக்குறிப்பிட்டவாறே கணிசமாக இரு மொழியினரும் கலந்துகொண்டனர்(இந்நிகழ்வுக்குரிய கனதியில்). சமகாலத் தமிழின் கணிப்புக்குரிய மூத்த திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அசோக்க ஹந்தகம இத்திரைப்படத்தை எடுத்த சூழலை விளக்கினார். சிங்களத்தில் ஏற்கனவே தான் முன்னெடுத்த சினிமா-நாடக-தொலைக்காட்சித்தொடர் என்பன வாயிலாக எதிர்னோக்கிய கண்டன விமர்சனங்களைக் கூறினார். இலங்கை சிங்களவர்களுக்கு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் பணிக்கப்பட்ட புண்ணியபூமி என்ற ஐதீகத்தைப் பாலூட்டும் பருவம் முதல் ஊட்டி, சமகால அரசியல் முன்னெடுப்புகளினூடே ஏனைய இனத்தவர்களால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என வளர்க்கப்பட்டு வருகிறவர்களிடம், மாற்று உரையாடலை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய இடர்ப்பாடே இது. இது பல்லின-பல்கலாசார நாடு என்பதை உணர்த்த முற்படுகிறவர்களே ஓரங்கட்டப்படுகையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயம் பற்றிப்பேச முனைவது தற்கொலைக்கு சமன் என்பதைச் சொல்லத்தேவையில்லை. அதன்பேறாக காத்திரமான முறையில் சுயநிர்ணயம் குறித்த உரையாடல் அங்கு இன்னமும் சாத்தியமற்றுள்ளது. அதனை ஏற்படுத்துவதற்கு முன் தேவையாக ஏனைய சிறு தேசிய இனங்களோடு உரையாடுவது அவசியமே.
எம்மிடம் உள்ள இனவாதம் அங்குள்ள இனவாதிகளை வலுப்படுத்தி, சிங்கள மக்களுக்கு நிதர்சன நிலையை விளக்க எந்த முயற்சியையும் எடுக்க இயலாத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தமிழர் மத்தியிலுள்ள இன்றைய சமூகப் பிரச்சனைகளில் எமக்குள்ளேயான ஏமாற்றும் சுரண்டலும் கபடங்களும் இனங்காட்டப்பட்டு, அவை மோதித் தகர்க்கப்படுவது ஊடாகவே ஏனைய அரசியல் நகர்வை நாட இயலும் என உணர்த்த முற்படுவதாக இந்தப் படைப்பாக்கம் அமைந்துள்ளது. முன்னாள் போராளி இயல்பு வாழ்வை அவாவியபோதிலும், அயல்சமூகமும் சமூகவிரோத சக்திகளும் அதற்கு இடம்தராத நெருக்கடி பேசுபொருள். அவனது முன்னாள் காதலி இயக்கத்துக்கு உள்வாங்கப்படாதிருக்க படுகிளவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்; அவசர மணாளன் ஒருநாள் உறவில் பிள்ளையைக் கையில் கொடுத்துவிட்டு மரணித்ததால், இப்போது அவனால் ஏற்கக்கூடிய நிலையில். அவனைத் தனது கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தமுனையும் சமூகவிரோதக் கனவான், பாதிப்புகள் பலவற்றைக் கண்ட பெண், போராட்டத்தை வைத்து வெளிநாட்டு வாழ்க்கைச் சுகபோகங்களையும் கண்டு இங்குள்ள வாய்ப்புகளையும் பெற முயலும் பச்சோந்தியாயுள்ள முன்னாள்போரளியின் பழைய சகபாடி என்போர் கதையின் ஏனைய பிரதான பாத்திரங்கள்.
நாயகனின் மனைவியாகிய பெண் இயல்பு வாழ்வுக்கு மாறுவதில் பெரிதாக எந்தப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை; கொடுமைகளுக்காளான மற்றப் பெண் இன்னமும் வறுமையோடு. அவளது கணவனின் செக்குறுட்டி வேலைதான் இவனுக்கு கைமாறியது. அதனாலே தன் வாழ்வுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும் என இவனை நெருக்க, இவனோடு சமூக விரோதக் கும்பலின் அனைத்துவகைச் சுரண்டலுக்கும் உள்ளாகிறாள். மேற்படி கருத்தாடலில், இப்பெண்ணைக் காட்டுவது வாயிலாக தமிழ்ப் பெண்களெல்லாம் சோரம்போய் வாழ முற்படுபவர்கள் எனக் காட்ட முற்படுகிறீர்களா எனக் கேட்கப்பட்டமை ஆச்சரியமாக இருந்தது. வகைமாதிரிப் பாத்திரங்களில் உள்ள அளவில் இது காட்டப்பட்டதில் எந்தத் தப்புமில்லை.
அவ்வாறே முன்னாள் போராளியான நாயகன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியூடாக, சிங்களப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தும் மீண்டும் புலி அச்சுறுத்தல் வரலாம் என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்களா என்றெழுப்பப்பட்ட கேள்வியும் நியாயமானதாய்ப்படவில்லை. கூடியவரை இயல்பு வாழ்வை அவாவி, அதற்கு சொந்தச் சமூகமே தடையாகும்போது அந்தத் துப்பாக்கியைத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க முற்படுவது மட்டுமே காட்டப்பட்டது. சமூக விரோத நடத்தைக்கு உள்ளாக்கப்படுகையிலும் அதனை அவன் நினைவுகொள்ளவில்லை. வேறு எந்த அரசியல் உரையாடல்களும் பேசப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த அரசியல் பிரச்சனையை முற்றாகக் கைவிட்டு இயல்பு வாழ்வை முழு அளவில் விரும்புகையில் எதிர்நோக்கும் பிரச்சனையே பேசப்படுகிறது. ஒருவகையில் இனப்பிரச்சனையின் இருப்புக்கான அடிப்படையைச் சிங்கள முற்போக்கு சக்திகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்ற குறைபாடுதான் இங்கே வெளிப்படுகிறதே அல்லாமல், மீண்டும் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதம் எழலாம் என்ற எந்த அடையாளமும் காட்சிப்பட்டிருக்கவில்லை.
தமிழ் முற்போக்கு சக்திகளும் இப்பிரச்சனைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகுவதையே இது காட்டியுள்ளது. நாம் எம்மத்தியிலான பிற்போக்கு வலதுசாரி பாசிச இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை மீட்டு, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுகுறித்த முழுமையான புரிதல் கொள்ளாதபோதிலும் அதனைப் புரிந்துகொண்டு அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகள் மேற்கிளம்பிவருகின்றமையை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் தமிழ்-முஸ்லிம்-சிங்கள கருத்தியலாளர்கள் கொண்டிருந்தபோதும், ஆரோக்கியமான கருத்தாடலில் பொதுநோக்கில் ஒன்றுபடக் களம் உள்ளது என்பதை இந்தக்கருத்தாடல் எடுத்துக்காட்டியிருந்தது. தலைமையேற்ற கே.எஸ்.சிவகுமாரன் இதுகுறித்து நியாயமான பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். அவரும் ஏற்பாட்டளரான சிவகுருநாதனும் இதன்பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நடிகர்கள் : இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான நிரஞ்சனி சண்முகராஜா, ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன், சுபாஷின் பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இயக்கம் - திரைக்கதை : அசோகா ஹந்தகமா. ஒளிப்பதிவு : சன்னா தேசப்ரியா இசை : கபிலா பூகாலராச்சி.
இந்தப் புதிய வருடம் இனவாதங்களைக் கடந்து தீர்வை எட்ட முயலும் சக்திகளுக்கான களத்தைத் திறந்துவைத்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வாக இதனைக் கருதலாம். புதிய தொடக்கமாக, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புத்தூக்கத்துடன் இந்தக் களத்தில், புதிய வருடத்தில் முன்னேறுவோம்.
                                                                                                                                                                            

*** படைப்பு தன்னளவில் எதை வெளிப்பட்டுத்துகிறது என்பதே முக்கியத்துவமுடையது; அதை எந்த நோக்கத்துக்காக வெளிப்படுத்த முயன்றார் படைப்பாளி என்பதைவிடவும். அவரது நோக்கத்தை மீறி தவறான வெளிப்பாட்டுக்கு இடமுண்டு. இதனை அக்கருத்தாடலின் போது எனது கருத்தாகக் கூறியிருந்தேன். எத்தனை அழிவுகளையும் கடந்து எம்முன் உள்ள சவால்களை முகம்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கருப்பொருள், தெரியப்பட்ட திரைக்கதையின் தவறுகளால் பார்வையாளரிடம் வெற்றிபெற இயலாது போகும் என்பதற்கு "இனி அவன்" எடுத்துக்காட்டாகியுள்ளது. அந்தத் தவறை மீறித் தமிழ்த் தேசியவாத உணர்வு ஏற்படுத்தும்(அல்லது சிங்களப் பார்வையில் தவறாக சித்திரிக்கப் படுகிறது என்ற புரிதலில்) விமர்சனமாக முன்வைக்கப்பட்ட இரு கருத்து நிலைகள் (ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பன குறித்தவை) பொருத்தமற்றன என்பதை மேலே குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள இனவாத சக்திகள் சம அளவான தவறுகளை விதைத்து முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளோம். அழிவும் மூன்று (சம்பந்தமற்றிருந்த மலையக மற்றும் சிறுபான்மை) இனங்கள் அனைத்துக்கும் சம அளவில் ஏற்பட்டுள்ளன. தவறுக்கு ஒரு இனத்தை மட்டும் குற்றம் கூற முடியாதது போன்றே, பாதிப்பும் எமக்கு மட்டுமே அதிகம் என்றும் எந்த இனத்தவரும் சொல்லிவிட இயலாது. இனவாதத்தைக் கடத்தல் தொடர்பிலான படைப்பாக்கத்தில் ஒரே வடிவம் பொருத்தமற்றது. இதுகுறித்து அன்றைய கருத்தாடலில் நான் கூறிய கருத்து சரியாக வெளிப்படாமல் போயுள்ளது. அங்கே பின்னர் வெளிப்பட்ட கருத்திலிருந்தும், இங்கே ரஞ்சகுமார் கருத்தும் இதனை உணர்த்துகிறது. சிங்கள இனவாதத்தை எதிர்க்கையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் குற்றம்காண இடமிராது. அதுவே தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்துகையில், பேரினவாதத்தால் ஒடுக்கப்படுவதைக் கவனம் கொள்ளாமல் தனித்துத் தமிழ் இனவாதத் தவறை மட்டும் சித்திரித்தால் பாரதூரமான தவறேற்பட இடமுண்டு. இதுவே "இனி அவனில்" ஏற்பட்டது. இதனைச் சிங்களப் படைப்பாளி என்றில்லாமல் தமிழ்ப் படைப்பாளி செய்திருப்பினும் குறைபாடக இனங்காணப்பட்டிருக்கும். இதுவே முஸ்லிம்கள் குறித்துப் பேசும்போது அவர்கள் இரு பேரினவாதங்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பின்னணி இல்லாது காட்டின் மிகப்பெரும் தவறாகும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். புள்ளி ஒன்றாக இருப்பினும் வந்தடையும் திசைகள் வேறாக உள்ளதைக் கவனம்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறேன். அன்று மட்டுமில்லாமல், இங்கே நீங்கள் உற்சாகமாக வெளிப்படுத்தும் உணர்வுநிலையும் இனவாதங்கள் கடந்து விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேற எம்மத்தியில் ஆர்வம் வலுத்துவருவதைக் காட்டுகிறது. புதிய தளத்தில் சந்திப்போம்.

*** இன்றைய பொதுப்போக்கில் வெற்றிபெற்ற பேரினவாதம் தனது ஆதிக்க மேலாண்மையை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே. ஆயினும் அதனை ஏற்கமறுத்து, அதற்கெதிராக தனது படைப்புகளை வெளிப்படுத்தும் அசோக்க ஹந்தகம தமிழில் பேசிய (கமரா வாயிலாக காட்டிய) காட்சிப்படிமங்களில் இருந்த தவறுக்கு அப்பால்போய், அனைத்தையும் பேரினவாத நோக்கு என வாசிப்பது தவறல்லவா? அன்றைய கருத்துப்பரிமாறலில் இந்தக் குறைபாட்டுடனான பார்வை வெளிப்பாடு இருந்தபோதிலும், உணர்ச்சிவசப்பட்ட இனவாத வக்கிரம் இருக்கவில்லை. அதற்கான அடிப்படைக் காரணமே, ஹந்தகம பேரினவாதத்துக்கு எதிராக உள்ள படைப்பாளி என்பதுதான். அவர்மீதான சந்தேகம்(படைப்பாக்கம் பற்றிய எதிர் விமர்சனம்) எல்லை கடந்து போகவில்லை என்றவகையில், அந்தப்பொருளே அதிகம் பேசப்பட்டாலும், இனவாதம் கடந்த உரையாடல் களம் அது என்பது முதன்மை பெறுகிறது. Ranjakumar Somapala S ரஞ்சகுமார், ஏனைய பேரினவாதிகளோடு ஹந்தகமவை ஒரே வரிசையில் வைக்கும்படி உங்களைத் தூண்டும் விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டுள்ளீர்கள்; என்வரையில் இத்திரைப்படத்தில் சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் நிராகரிக்கக்கூடாதது என்பதற்காகவே இப்பதிவுகள். ஏதோ ஒருவடிவில் ஏதோ ஒருவடிவில் நீங்களே படத்தைப் பார்த்தால் என் கருத்தை ஏற்பீர்கள்.

Saturday, December 22, 2012

முன்னோடி ஆளுமைகள் குறித்து சில ..

                                                                                     - ந இரவீந்திரன் -
சென்ற வாரம் ஞாயிறு அன்று(16.12.2012) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லெனின் மதிவானத்தின் 'ஊற்றுக்களும் ஓட்டங்களும்(மீனாட்சி அம்மாள் முதல் மார்க்சிம் கோர்க்கி வரை)' எனும் நூல் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த நிகழ்வு குறித்து பேசுவதற்கு நிறைய உண்டு. அது குறித்து பின்னால்.
நூல்வெளியீட்டில் வௌ;வேறு நிகழ்வுகளோடு, எனது ஆய்வுரையும் இடம்பெற்றிருந்தது. அந்த எனது உரையில் ஏற்பட்ட கருத்துபேதம் தொடர்பாக இங்கு உரையாடுவது அவசியம் எனக் கருதுகிறேன். எனது கருத்து தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளமை, நண்பர்களது தப்பபிப்பிராயத்தைப் போக்குவது தொடர்பிலானது என்பதோடு எமது சமகாலப் போக்குத் தொடர்பில் அவசியப்படும் விவாதப் பொருள் என்பதினாலும் ஆகும்.
மேற்படி நூலில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் குறித்த கட்டுரைகள் இரண்டு உள்ளன் நூலின் பெரும்பகுதி அவர்களது கருத்துகளை முன்னிறுத்தி லெனின் மதிவானம் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. நூல் அச்சுக்குப் போவதற்கு முன் சிவத்தம்பி அவர்களது கருத்துகள் தொடர்பில் எனது வேறுபாட்டை மதியிடம் கூறியிருந்தேன். அவருக்கும் பேராசிரியர் மீது அடிப்படையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் நூலில் அவரை முன்னிறுத்தும் விடயங்களில் அதனளவுக்கு அவர்மேல் தனக்குள்ள மரியாதையை மதி கூறியிருந்தார். குறிப்பாக மலையகத்தை ஆளுமையுடன் எழுச்சிகொள்ளச் செய்ய அவர் ஆற்றிய பங்களிப்பில் மிகுந்த மதிப்புணர்வைக் கொண்டிருப்பது தெரிந்தது.
அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டதால், அவரது கருத்து நூலில் ஏற்படுத்தும் வேறுபட்ட பார்வை என்பதை அப்போதைக்கு அழுத்தாதிருந்தேன். இப்போது ஆய்வுரை என வந்தபோது அதனைச் சொல்லாதிருக்க இயலவில்லை. எப்படி சர்ச்சைக்காகவே ஏதும் கருத்தை முன்வைப்பதில்லையோ,அவ்வாறே விரும்பப்பட மாட்டது என்பதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாதிருந்ததில்லை என்றவகையில் அன்று அதுகுறித்துப் பேசியிருந்தேன். எனது உரையை முழுமையாக பதிவு செய்கிறபோது அதன் விபரத்தைக் காண இயலும். இங்கு சுருக்கமாக் சோசலிச யதார்த்தவாதம் சோசலிச நாடுகளில் பேசப்பட்டிருக்க வேண்டியது, நாங்கள் இங்கே முன்வைத்திருக்கக் கூடாது என்று பின்னாலே சிவத்தம்பி பேசியிருந்தபோதிலும், முன்னதாக அதுசார்ந்து அவர் வெளிப்படுத்திய கருத்து அடிப்படையில் மதி சிறுகதைகள் தொடர்பில் கூறியுள்ள கருத்தில் எனக்கு வேறுபட்ட அபிப்பிராயம் உள்ளது என்றேன். இயற்பண்புவாதம், யதார்த்தவாதம் தொடர்பான வரையறைகளோடு கைலாசபதி முன்னிறுத்திய பார்வையே சரியானது எனக் கருதுவதையும் கூறியிருந்தேன்.

கூடவே, பேராசிரியர் சிவத்தம்பி எவ்வளவு பெறுமதியான பங்களிப்பை வழங்கியுள்ளாரோ, அவ்வளவுக்குக் குளறுபடிகளையும் பண்ணி வைத்துள்ளார் என்றேன். இந்தக் கருத்தே நண்பர்களிடையே அபிப்பிராயபேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படிச் சொல்லமுடியுமா, அவர் எவ்வளவு பெரிய ஆளுமை, இது அவரைக் கொச்சைப்படுத்துவது போன்றல்லவா இருக்கிறது என்பதாக விவாதிக்கப்பட்டுள்ளது. என்னோடு நேரடியாக உரையாட இயலாததால், மதியுடன் இது தொடர்பாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். இந்த விமர்சனத்துக்கு அப்பால் எனக்கு சிவத்தம்பி மீது இருக்க அவசியமான மதிப்புணர்வு உள்ளமையையும், அவரோடு நான் பல சந்தர்ப்பங்களில் அளவளாவியதையும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருவரும் ஒன்றாகச் சென்று சந்தித்துள்ளோம்) லெனின் மதிவானம் விளக்கியிருக்கிறார்.
இதனை அவர் விட்டுக்கொடுத்திருக்க இயலாது; சில நாட்களுக்கு முன்னர்தான் சிவத்தம்பியை மதிக்கத் தக்க ஒரு மார்க்சியர் என என் அபிப்பிராயத்தை மதியிடம் கூறியிருந்தேன். அது இன்னொரு எமது மகத்தான ஆளுமை தொடர்பில் வந்த விவாதத்துடன் சம்பந்தப்பட்டது. தோழர் சண்முதாசன் புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான ஒரு பெரும் தலைவர். அவர் இயங்கியல்-பொருள் முதல்வாத அடிப்படையில் இயங்கியவர் என்ற வகையில் விமர்சனங்களுக்கு அச்சப்பட அவசியமில்லாதவர்; அவ்வாறே வழிபாட்டையும் ஏற்க மறுப்பவர். அவர் வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மூன்றுலகக் கோட்பாட்டை கையாண்டவிதமும், சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுத்தமையும் காரணமாக 1978 இல் கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டமையை லெனின் மதிவானம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டபோது, 'அதெப்பிடி சண் பற்றி இப்படிச் சொல்லலாகும்...உமக்கு சண்ணும் மார்க்சியவாதி, சிவத்தம்பியும் மார்க்சியவாதியா' என்பது போன்ற குரலில் மறுப்புரைகள் வெளிப்பட்டன.
இந்த வழிபாட்டு அபிப்பிராயம், அடிப்படையில் தமது தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் முயற்சியே அல்லாமல், சண்ணுக்கு மதிப்புச் சேர்ப்பதல்ல. நாங்கள் சண் மீது விமர்சனத்தை முன்வைக்கும் அதேவேளை, இவர்களையும் விட அதிகமாயே சண்மீதான அபிமானங்கொண்டுள்ளோம். அவர் முன்னெடுத்த சோசலிச சமூக உருவாக்கத்துக்கான போராட்டத்தின் இன்றைய திசைமார்க்கத்தைக் கண்டறியக் கருத்தியல் தளத்தில் போராடுகிறோம் என்ற வகையில் சண்மீதான எமது மதிப்புணர்வு பொருளுள்ளது. இவர்கள் தமது வலது சாரித் தமிழ்த் தேசியத்துக்கு அனுசரணையாக சண்ணைக் குறுகத் தறிக்க முயல்வது உண்மையில் வேடிக்கையான ஒன்று. சிவத்தம்பி மார்க்சிய நோக்கில் தமிழர் பண்பாட்டுச் செல்நெறியை ஆய்வு செய்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்; அதேவேளை, வலதுசாரித் திரிபு வாதத்துக்கு ஆட்பட்டு இழைத்த தவறுகளை விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். அவ்வாறே சாதியத் தகர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட உழைக்கும் மக்களது பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கத் தலைவரான சண்முகதாசன், இடது திரிபுவாத நிலப்பாட்டைக் கொண்டிருந்த சந்தர்ப்பங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். இருவரும் வேறுபட்ட தளங்களில் பங்களிப்பை நல்கியவர்கள். பங்களிப்பின் அளவிலும் பண்பிலும், அவ்வாறே விமர்சன அம்சங்களின் குணாம்சங்களிலும் வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தத்தம் தளங்களில் மார்க்சியத்துக்கு ஆற்றிய பணியின் காரணமாக இருவரையும் மதிக்கிறோம் என்பதால், அவர்களில் எவருக்குமோ, அல்லது எமக்கோ தீட்டு ஏதும் பட்டுவிடப் போவதில்லை.
அந்தவகையில், சிவத்தம்பியை நான் கொச்சைப்படுத்துவேன் என்றிருக்க இயலாது என மதியால் அடித்துச் சொல்ல இயலுமாயிற்று. இருவரையும் மதிப்பது குற்ற விமர்சனத்துக்குரியதில்லை என்று ஓரிரு வாரங்களின் முன்னர் கூறியிருந்தேனே? இந்தக் கருத்துபேதம் ஏற்பட மற்றொரு காரணம், தமிழ்த் தேசியத்தை நான் ஏற்காமையால், சிவத்தம்பி ஏற்றமையைத் தாக்குகிறேன் என்ற நினைப்பு.
இதனையும் மறுப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவர் வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியத் தலைமையை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்; அதை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் நண்பர்கள் உடன்பாடு கொண்டனர். தமிழ்த்தேசியம் சுயநிர்ணயத்துக்காக போராட அவசியம் உள்ளதைக் கூறும் அதேவேளை, அதைப் பலப்படுத்தும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவத் தேசிய அபிலாசைகளை இனங்கண்டு, அதன் கோரிக்ககளை உட்படுத்த வேண்டும் எனும் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை பற்றி லெனின் மதிவானம் கூறியபோது அந்த நண்பர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அத்தகைய வடிவில் தமிழ்த் தேசிய ஏற்பு எமக்கு உள்ளமைய அறிந்த நிலையில் கருத்து வேறுபாடு தற்போதைக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
இங்கு பிரதான விடயம், எமது முன்னோடிகளை எப்படி உள்வாங்கப் போகிறோம் என்பதுதான். மேற்படி உரையின் தொடக்கத்திலேயே, நாம் கலை-இலக்கிய-பண்பாட்டுத் தளத்தில் அதிக உடன்பாட்டோடு தொடரும் கைலாசபதியின் விமர்சனங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்த இடத்தைச் சொல்லியிருந்தேன். அது எவருக்கும் கொச்சைப் படுத்துவதாகப்படாது; அவரை வழிபாடு செய்கிறோம் என்பவர்களுக்கு, அட அவர்மீதே விமர்சனத்தை வைக்கிறார்களே என்றுதான் படும். வேறு ஆளுமைகளில் விமர்சனத்துக்கான இடம் அதிகம் என்பதற்காக அவர்களை நிராகரிக்கிறோம் என எண்ண வேண்டியதில்லை. இப்போது பரந்த ஐக்கிய முன்னணியாக புதிய பாணி வேலை முறை ஒன்று தேவையாகியுள்ளது. அதன் புரிதலோடு, ஆளுமைகள் சார்ந்து கட்சிகட்டி மோதுவதை விடுத்து, ஒவ்வொருவரது பங்களிப்பையும் கையேற்று வளர்க்கும் அதேவேளை, விமர்சனம்-சுய விமர்சனம் என்ற கையாளுகையோடு ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம். மாஒ சொன்னவாறு பத்து வீதம் மார்க்சியத்தை முன்னெடுக்கிறவரோடும் ஐக்கியப்பட ஏற்ற வாய்ப்பைக் கண்டறிவோம் - அதற்காக விமர்சனத்தைக் கைவிட வேண்டியதில்லை. ஒன்றுபடும் நோக்கோடு விமர்சனப் போராட்டத்தை முன்னெடுத்து, முன்னிலும் வலுவான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்.
மக்கள் போராட்டங்களில் மகத்தான வெற்றிகள் சாத்தியப்பட்டன. ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவங்களை உள்வாங்கி எமக்கான கோட்பாட்டு உருவாக்கத்தைக் கட்டமைப்போம். தோல்விகளிலிருந்தும் பெறுமதிமிக்க படிப்பினைகளைப் பெறுவோம். இதன் வாயிலாக, போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம், வெற்றிவரை எனும் வரலாற்றுச் செல்நெறியைத் தொடர்வோம்.

Tuesday, December 11, 2012

தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்


தமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்                                                                                                                                                                                                                                                                                       -ந.இரவீந்திரன்

                                                               இங்கு எமது பிரதான பேசுபொருள் தமிழில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் சவால்கள் எனும்வகையில், அதற்கான வரலாற்றோட்டத்தை மிகச் சுருக்கமாகப் பார்த்து, இன்று முகங்கொள்ளும் பிரச்சனைகளை(அது கண்ணோட்டம் சார்ந்தது எனும்வகையில் அதனை) விரிவாகப் பார்ப்பது உகந்தது. மார்க்சியத் திறனாய்வு தமிழியலுக்கு வழங்கிய பங்களிப்பை முதல் பகுதி பேசும். இரண்டாம் பகுதியில் இந்தச் செல்நெறிக்கான நெருக்கடியை அலசுவோம். பிரச்சனைகளும், அதன் பேறான இடர்ப்பாடுகளிலிருந்து மீளக் கண்டடைந்து வரிக்கவேண்டிய பார்வைத் தெளிவும், அதன்வழியேயான செயற்பாட்டு வடிவமும் குறித்து இறுதியில் அலசுவோம்.
                -1-
சாதனைகள்
உண்மையில் மார்க்சிய ஆய்வுகள் தமிழியலில் பெறும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய நோக்கிலான விமரிசனங்கள் போதிய அளவு இல்லை எனும் குற்றச்சாட்டு கவனிப்புக்குரியது. இங்கு ஆய்வைக்காட்டிலும் விமரிசனமே அதிக அக்கறைக்குரியது. அதேவேளை, விமரிசனப் பார்வைக்கு உதவிய வகையில் மார்க்சிய ஆய்வுக்கண்ணோட்டமும் கவனிப்புக்குரியது.
தொ.மு.சி.ரகுனாதன், முத்தையா, வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது மார்க்சியத் திறனாய்வு பிரயோகிக்கப்படுவதற்கு முன்னர் இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அணுகுவதே திறனாய்வாகக் கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாகக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுவதும் இதன்பாற்பட்டதாய் இருந்தது. ரசிகமணி டி.கே.சிதம்பரனார் முதல் ரசிகமணி கனகசெந்திநாதன் வரை இவ்வகைத் திறனாய்வில் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர். பழம்பெரும் இலக்கியப் பனுவல்களை மட்டுமன்றி நவீன படைப்புகளையுங்கூட அவற்றின் ரசனையை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதோடு அமைதிகொள்வது இவர்களுக்குப் போதுமானதாக அமைந்தது.
இத்தகைய ரசனை மோகம் அன்று மேலோங்கிவந்த ஆதிக்கசக்திகளது இந்தியத் தேசியத்தை ஏற்புடையதாக்குவதாக அமைந்தது. இதனை முறியடிக்கும் எதிர்த்தேசிய மனப்பாங்கோடு எழுச்சியுற்ற திராவிட அரசியலும் மாற்றுப் பிரதிகளைத் திராவிட உணர்வோடு முன்வைப்பதாக அமைந்ததேயன்றி ரசனை மனப்பாங்கைக் கடந்து புதிய தளங்களுக்கு விரிவாக்கம்கொள்ள இயலவில்லை. முந்தியவர்களுக்கு கம்பராமாயணம் பிரதான பிரதியெனில் திராவிடர் இயக்கம் சிலப்பதிகாரத்தை முன்னணிக்குரிய படைப்பாக நிறுத்தியது. இவர்கள் போற்றும் நவீன படைப்புகளும் அடுக்கு மொழிகளுடன் அலங்கார நடையைப் போற்றுமளவுக்கு சமூகப் பிரச்சனைகளுக்கோ பெறுமானங்களுக்கோ அதிக அழுத்தம் கொடுத்ததில்லை(ஒப்பீட்டுரீதியில் பிராமணத் தேசியத்தைவிட திராவிடத் தேசியம் சமூக ஊடாட்டங்களை அதிகமாய் வெளிப்படுத்தியிருந்ததை வலியுறுத்துவது அவசியம்).
இத்தகைய போக்குகள் நிலவிய சூழலில் தொ.மு.சி.ரகுநாதன், முத்தையா, வானமாமலை போன்றோர் சிலம்பின் பின்புலத்தையும் - கம்பராமாயணம் இலங்கையைச் சோழர் ஆக்கிரமித்திருந்த காலப்படைப்பாக எவ்வாறு வெளிப்படக் காணலாம் என்பதையும் பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறவர்களாக இருந்தனர். பழம்பெரும் படைப்புகளையும் நவீன ஆக்கங்களையும் அவையவற்றுக்கான சமூகப் பின்புலத்தோடும் வரலாற்றுக்கட்டங்களோடும் இணைத்துப்பார்க்கும் ஆய்வு முறையியலை இந்த மார்க்சியத் திறனாய்வாளர்கள் முன்வைத்தனர். இதன்பேறாக நெசவுத் தொழிலாளர்களது வாழ்வையும் போராட்டங்களையும் பேசும் தோ.மு.சி.யின் "பஞ்சும் பசியும்" எனும் தொழிலாளி வர்க்க முதல் நாவல் தோன்ற இயலுமாயிற்று.
தமிழகத்தில் பிராமணத்தேசியம், திராவிடத்தேசியம் என்பவற்றின் வெளிப்பாடான ரசனைத் திறனாய்வுகளின் போதாமைகளை வர்க்கப்பார்வையில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் இவ்வகையில் வெளிப்படுத்தியபோது இளைய தலைமுறையினர் அதன்பால் ஈர்க்கப்பட்டு புதிய செல்நெறியொன்று வளர ஏதுவாயிற்று; இருப்பினும், வரலாற்றின் எழுச்சி நிலையில் இந்தியத் தேசியம்(பிராமணத் தேசியம்), தமிழ்த்தேசியம்(திராவிடத்தேசியம்) என்பனவே காணப்பட்டன. இதனோடு ஒப்பிடும்போது ஐம்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் தோற்றம்பெற்று வளர்ந்த மார்க்சியத் திறனாய்வு தமிழியலின் பிரதான செல்நெறியாக இங்கு வெளிப்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன் விமர்சன-ஆய்வியல் ஆளுமைகளாக வெளிக்கிளம்பிய கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழகத்திலும்கூட முதன்மைக் கணிப்புக்குரியவர்களாய்த் துலங்கினர்.
எந்தவொரு படைப்பையும் எந்தவகை(மதத்துக்குரிய பிராமணத்தேசிய அல்லது தமிழ்த்தாய் வணக்கத்துக்கான திராவிடத்தேசியப்) புனிதங்களுக்குள் மட்டுப்படுத்திப் பார்க்காமல் பாட்டாளிவர்க்க உலக நோக்கில் பகுத்தாராய்ந்து அதன் சமூக உள்ளடக்கங்களை வெளிக்கொணர்வதாக மார்க்சியத் திறனாய்வு அமைந்தது. தமிழரின் முதற் பொற்காலம் எனத் திராவிடரியக்கம் புளகாகிதங்கொண்ட சங்க இலக்கியம் என்பது, தீயிடலும் கொலைகளும் மலிந்து ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம் பெற்ற படைப்பு வெளிப்பாடு எனக் காட்டினர் மார்க்சியத் திறனாய்வாளர்கள். பக்திப் பரவசத்துக்குரியது எனப் பிராமணத்தேசியம் கொண்டாடிய திருமுறைகளும் பிரபந்தங்களும் நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம்பெறப் போராடிய சமூகமாற்ற அரசியல் பண்பாட்டு இயக்கத்தின் இலக்கிய வெளிப்பாடுகள் எனக்காட்டினர்.
பாரதி முதல் வானம்பாடிகள் வரையானோர், சோமசுந்தரப் புலவர் முதல் முருகயன் வரையானோர் தேசிய உணர்வோடு நவீன இலக்கிய வெளிப்பாட்டை வழங்கியவாறினை- பாரதிதாசன் முதல் மஹாகவிவரை தமிழ்த் தேசியத்தை முற்போக்கு அடையாளங்களுடன் வெளிப்படுத்த முனையும்போது தேசியவாத முடக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் மார்க்சியத் திறனாய்வு வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது. இந்த விமரிசனப் பட்டைதீட்டல் வாயிலாக மக்கள் இலக்கியம் விருத்திபெறுவதற்கு அடிகோலினர்.
இலங்கையில் ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற முற்போக்கு இலக்கிய இயக்கம் தமிழ்ப் படைப்புலகத்துக்குப் புதிய பரிமாணங்களை வழங்குவதற்கு இந்த மார்க்சியத் திறனாய்வு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. மார்க்சியர்கள் வெறும் வர்க்கம் பற்றி மட்டுமே அக்கறை கொள்வர் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சியர்கள் தலைமையேற்று இங்கே நடாத்தியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மைத் தமிழர் மஹாசபை என ஒரே அமைப்பாக்கம் கொள்ளலும், சாதியத் தகர்ப்பை இலட்சியமாகக் கொள்ளத்தக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கம் பெறத்தக்க தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் இங்கே உருவாக இயலுமாயிற்று. இதற்கும் சரி, எந்தவொரு சாதியும் எதிராகக் கருதப்படாமல் சாதியம் தகர்க்கப்படுவதே இலட்சியம் என வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இயலுமானதற்கும் சரி மார்க்சிய வழிகாட்டலே இங்கு அடிப்படையாக அமைந்தது என்பது அழுத்தியுரைக்க அவசியமான ஒன்று. சாதியவாதம் தலைதூக்காமைக்கு அதன் பாட்டாளிவர்க்க உலக நோக்கே அடிப்படைக் காரணமானது(அத்தகைய பார்வையற்று இந்தியாவில் பெரியாரியமும் அம்பேத்கரியமும் செயற்பட்டபோது, சாதிமுறைமையை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகத்தவறினர்; சாதியத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை பங்களிப்பை நல்கியபோதிலும், இந்த எல்லைப்பாட்டுடன் சாதியொழிப்புக்காக முனைந்தபோது) பிராமணியத்தை எதிரியாக முன்னிறுத்தவும், தவிர்க்கவியலாதவகையில் பிராமணர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படும் நிர்ப்பந்தம் நடைமுறையில் நிதர்சனமாயிற்று. ஆகவும் ஒவ்வொரு சாதியும் அருகிலுள்ள மற்றொரு சாதியை எதிரியாகக் காணும் நிலை ஏற்பட்டது. இதன்பேறாக, சாதியத் தகர்ப்புக் குறிக்கோள் திசைமாறிச் சாதியம் வலுப்பெறவே பெரியாரியமும் அம்பேத்கரியமும் வழிகோலின).
சாதியத் தகர்ப்புக்கான போராட்டங்களை இங்கே படைப்பாக்கம் செய்கையில் சாதியவாதம் மேற்கிளம்புமாயின் அதையுங்கூட மார்க்சியத் திறனாய்வு தோலுரித்துக் காட்டத் தவறியதில்லை. "பஞ்சமர்" முதல் "பஞ்சகோணங்கள்" நாவல்கள்வரை டானியல் படைப்பு முயற்சிகளில் சாதியவாதம் தலைதூக்குகிறது எனும் விமரிசனத்தை மார்க்சிய விமரிசகர்கள் முன்வைத்தனர். சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அனுபவங்களை ஒரு கொம்யூனிஸ்ட்டாக அவர்களோடு பங்கேற்று வாழ்ந்து இயங்கிப் பட்டறிவு பெற்றவன் என்கிறவகையில் பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் நாவல்களாக எழுதுகிறேனேயல்லாமல் சாதியவாத அடிப்படையில் அல்ல என மீண்டும் மீண்டும் டானியல் வலியுறுத்தத் தவறவில்லை. இருப்பினும் இந்த விமரிசனங்களில் உண்மையில்லாமலும் இல்லை; அதனை மனங்கொண்டு எவ்வகையிலும் சாதியவாதம் தலைதூக்காதவகையில் தனது சொந்தக்கிராமத்தின் சமூக அசைவியக்கப்போக்கை "கானல்" எனும் நாவலாக டானியல் படைப்பாக்கித் தந்தமையை அவதானிக்கலாம். அவரது உன்னத பங்களிப்பாக அந்த நாவல் அமைந்துள்ளது.
இலங்கையில் இவ்வகையில் மார்க்சியத்துக்கான பரிமாணத்தை ஏற்படுத்தித் தந்த அந்த இயங்காற்றலுக்குரிய இலங்கை மார்க்சியர்கள் பின்னர் பிரதான செல்நெறியாக வளர்ந்த தமிழினத் தேசியம் பற்றிய புரிதலின்றி இருந்தனர். தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் இங்குபோல் பிரதான நிலையில் கவனிக்கப்பட்டதில்லை. இதன்பேறாக இங்கே இனத்தேசியமும், அங்கே தலித்தியமும்(சாதித்தேசியமும்) மார்க்சிய இயக்கங்களுக்கு சவாலாக மாறி, எண்பதுகளின் புதிய எழுச்சிகள் மார்க்சியத்தைக் கேள்விக்குள்ளாக்குவனவாக அமைந்தன.
மரபுப்பிடிக்குள் கட்டுப்பட்டு பழைமை பேணும் பாரம்பையத்தில் மூழ்கியிருந்த தமிழ்ச் சமூகத்தையும் இலக்கியத்தையும் அதிர்வுக்குள்ளாக்கிய மார்க்சிய இயக்கம் இவ்வகையில் "பழைமையாகும்" நிலை எண்பதுகளைத் தொடர்ந்த செல்நெறியாக ஆனது; தலித்தியம், இனத்தேசியம், பெண்ணியம் என்பன எண்பதுகளைத் தொடர்ந்து பிரதான பேசுபொருள்களாயின. அறுபதாம் ஆண்டுகளில் பழைமைவாதத்துக்கு எதிரான மரபுப் போராட்டமும் தேசிய இலக்கியமும் பிரதான இலக்கிய விவாதப் பொருள்களாகும். இதன்பேறாக வாழ்வோடு சம்பந்தமின்றி இயற்கை எழிலைப் பாடுபொருளாகக்கொள்வதும் ரசனை மனப்பாங்கில் திழைப்பதும் தகர்க்கப்பட்டு, வாழும் சொந்த மக்களைப் பேசுபொருளாக்கும் படைப்பாக்கங்கள் எழுச்சிபெற்றன. பொதுப்படையான இலக்கியம் என்பதைக் கடந்து பிரதேசிய இலக்கியங்கள் - மண்வாசனைப் படைப்பாக்கங்கள் தோற்றம்பெற்றன. இதைச் சாதித்த மார்க்சிய இயக்கமும் புதிய போக்குகளின் வீச்சில் தன்னைப் புடமிடுவது அவசியமாயிற்று.
                                                          2
                                                     நெருக்கடி
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமல்ல, உலக அளவிலேயே மார்க்சிய இயக்கம் நெருக்கடியை முகங்கொண்டது. அறுபதுகளின் இறுதிக்கூறில் பிரான்சின் மாணவர் போராட்டங்கள், பாட்டாளி வர்க்கமல்லாத தலைமைச் சக்திகள் பற்றிப் பேசுகிற நிலையை உருவாக்கிற்று. அதற்கான நீடிப்பில் இங்கே, வர்க்கங்கள் பற்றிப் பேசுவது பொருளற்றது - இனத்தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன பற்றியே இலக்கியங்களும் விமரிசகர்களும் சமூக இயக்கங்களும் கவனங்கொள்ள அவசியமேற்பட்டுள்ளது என வலியுறுத்தப்பட்டது.
எமது சமூக அமைப்பில் சாதிமுறை பெறும் முக்கியத்துவத்தை(கோட்பாட்டு அளவிலன்றி நடைமுறையிலேனும்) விளங்கிக்கொண்ட இலங்கையில் இனத்தேசியம் கவனிக்கப்படாமையும், தமிழகத்தில் சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் மார்க்சிய இயக்கங்களில் இருந்த தவறென்பதை ஏற்கனவே கண்டுள்ளோம். இதன்பேறாக, இங்கே இனத்தேசியம் யுத்த்மாக பரிணமித்தமையும் - தமிழகத்தில் தலித்தியவாதம் சாதி மோதல்களையும் சாதிக்கட்சிகளை வளர்த்தமையும் எத்தகைய வளர்ச்சிகளை ஏற்படுத்தின? முன்னர் மூன்று தசாப்தங்கள் மார்க்சியத் திறனாய்வு ஏற்படுத்திய சாதனைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு இதற்குரிய மூன்று தசாப்தங்களில் எதுவும் எட்டப்படவில்லை; மட்டுமல்லாமல் தோல்விகளும் பின்னடைவுகளுமே ஏற்பட்டன. இலங்கையில் யுத்தத்தின் தோல்வி வெளிப்படையானது. அவ்வாறே தமிழகத்திலும் தலித்தியம் தோல்வியுற்றமை குறித்து தலித் சிந்தனையாளர்களே இன்று விமரிசிக்க முற்பட்டுள்ளனர். தலித்தியத்தினால் குறைந்தபட்சம் தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த இயலவில்லை, ஓரடிகூட முன்னேற்றம் ஏற்படவில்லை, மதவாத-இனவாத சக்திகளோடு தலித் கட்சிகள் கூட்டமைப்பதைத் தடுக்க இயலவில்லை என்ற விமரிசனங்கள் தலித் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையில் நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே ஒடுக்கப்பட்ட(தலித்) மக்கள் மார்க்சிய வழிகாட்டலுடன் ஒரே அமைப்பாக ஒன்றிணைய இயலுமானதோடு, மதவாத இனவாத சக்திகள் எவற்றுக்கும் விட்டுக்கொடுக்காமல் மக்கள் விடுதலை என்ற இலக்கோடு அவை இயங்க முடிந்தமைக்கு வர்க்கப் பார்வை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது. அதேவேளை இந்த நோக்குடன், வர்க்க இருப்பு-வர்க்கப்பிரச்சனை என்பவற்றைக் கடந்து, சாதி-தேசம் என்பவற்றின் இருப்பு இன்னொருவகையானது, அவ்வாறே பெண் ஒடுக்குமுறை வர்க்க பேதங்களுடன் மேலதிகமாயுள்ள இன்னொரு பரிமாணத்துக்குரியது என்பவற்றைக் காணத்தவறுகிற அவலம் இங்கும் நேர்ந்தது. மார்க்சிய இயங்கியல்- பொருள்முதல்வாதச் சிந்தனைமுறை என்பதை மறந்து ஏதோ சில முடிந்த முடிவான பெறுமானங்கள் மார்க்சியத்திடம் உண்டு என்ற தவறான முன்முடிவு காரணமாக எமது சமூக நிதர்சனங்களைச் சரியாக இனங்காண இயலாத தடைகள் எம்மிடம் உண்டு.
வர்க்கப்போராட்டம் ஏடறிந்த வரலாறு முழுமையிலும் இருந்துள்ளது; இதனை, இழப்பதற்கு எதுவுமற்றதான பாட்டாளி வர்க்கம் முடிவுக்குக் கொண்டுவரும். பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் உழைப்பால் பெருகிய மூலதன விருத்தியே முதலாளித்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படை; அந்தவகையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திசாதனங்கள் ஒருசில முதலாளிகளால் அபகரிக்கப்பட்டுள்ள முறையற்ற சமூக நியதி இன்று நிலவுகிறது - அதனைத் தகர்த்து, சமூகப் படைப்பான உற்பத்திசாதனங்களைச் சமூகத்துக்குரியதாக்கும் பணியையே அரசுடைமையாக்கும் செயற்பாடு வாயிலாக பாட்டாளிவர்க்க அரசு நிறைவு செய்யவுள்ளது. சுரண்டல் நிலவிய காலம் முழுமையும், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை ஒடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கருவியே அரசு; அதனைத் தலைகீழாக்கி, சுரண்டலாளர்களான மிகச் சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் சார்பாக ஒடுக்கும் அரை-அரசை நடைமுறையாக்கி, சுரண்டல் முடிவுக்கு வருகிறவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து, பூரண பொதுவுடைமை சாத்தியமானதும் அரசு உலர்ந்து உதிர்ந்துபோக வகைசெய்து, மண்ணில் நல்ல வண்ணம் மாந்தர்கள் பரஸ்பர புரிந்துணர்வோடும் நல்லிணக்கங்களோடும் வாழ ஏற்றதான வர்க்கபேத ஒழிப்பு முயற்சியே பாட்டாளிவர்க்க முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தனது பங்களிப்பு எது என்பதைக் குறித்து மார்க்ஸ் பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும், தொடர்ந்த ஆய்வு முயற்சிகளில்(குறிப்பாக, மூலதனம் பற்றிய ஆழமான தேடலில்) வர்க்கப் பிளவுறாத சமூக முறை குறித்து அவர் கண்டு காட்டியுள்ளார். ஐரோப்பாவில் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுற்று ஏற்றத்தாழ்வுச் சுரண்டல் சமூக அமைப்பாக்கம் நடந்தேறியது; அவ்வாறன்றி ஆசியாவில், முன்னேறிய இனமரபுக்குழுக்கள் மலாண்மை பெற்று சுரண்டுவதற்கு ஏற்றதாக ஏனைய இன மரபுக்குழுக்கள் ஒடுக்கப்பட்டன; அதன்பேறானதே சாதிகள் என்பது மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருந்த உண்மை. வேறு சந்தர்ப்பங்களில் ஆசிய உற்பத்திமுறையின் தனித்துவப் பண்புகள் குறித்துப் பேசியுள்ளார். ஆசியாவில் மதங்கள் பெறும் முக்கியத்துவம் குறித்தும், முகமது நபியால் மதம் வாயிலாக சமூகமாற்றம் ஒன்றைச் சாதிக்க இயலுமாயிருந்தது எப்படி எனும் கேள்வியையும் எழுப்பி, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யும் அவகாசம் மார்க்சுக்கு அமையவில்லை. வர்க்கப்பிளவடைந்து,கூர்மையான அரசியல் புரட்சிகளூடாக சமூகமாற்றங்களைச் சாத்தியமாக்கி வந்த ஐரோப்பாவில் புத்திய சமூக சக்தியான பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தைச் சாதியமாக்கும் வாய்ப்பு இன்னும் இருந்தநிலையில், வர்க்கங்கள் குறித்தும் - அரசியல் புரட்சிகள் பற்றியும் மென்மேலும் ஆய்வுகளை விருத்தி செய்ய வேண்டியிருந்தமையால், சாதிகள் குறித்தோ மதங்கள் வாயிலாக(பண்பாட்டுப் புரட்சியூடாக) சமூக மாற்றச் சாத்தியம் குறித்தோ ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமற்போயிற்று. அவரது எதிர்பார்ப்புக்கு அமைவாக ருஸ்யப்புரட்சி சாத்தியமாகியிருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுமையையும் பாட்டாளிவர்க்கப் புரட்சி சோசலிசமாக மாற்றும் என்ற எதிவுகூறல் நிகழவில்லை.
பாட்டாளிவர்க்கப் புரட்சி ஐரோப்பாவில் சுரண்டலை ஒழித்துக்கட்டும்போது குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்று அங்கும் சோசலிசத்துக்கான வாய்ப்பிருப்பதைக் கூறிய அதேவேளை, முன்னதாக அந்தக் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியீட்டத்தக்க சாத்தியத்தையும் மார்க்ஸ் கூறியிருந்தார். இருப்பினும், ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்டு லெனினிசப் பரிணமிப்பைப் பெற்ற நிலையில் தேசிய விடுதலைப் புரட்சிகள் நேரடியாக சோசலிசக் கட்டுமானங்களை ஏற்படுத்த இயலும் என்ற முன்முடிவை லெனின் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்த வளர்ச்சி நிலையை மார்க்ஸ் காண இயலவில்லை. அந்தவகையில் மார்க்சியத்தின் அடிப்படை கோசமாக "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்பது அமைய, அதன்பரிணமிப்பான லெனினிசம் "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்" எனப் புதிய சூழல் மாற்றத்தில் சமூக மாற்ற சக்தியாக பாட்டாளிவர்க்கப் புரட்சியோடு தேசிய விடுதலைப் புரட்சியையும் இணைத்துக்காண வகையேற்பட்டது.
தேசவிடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிசத்தைக் கட்டமைக்கும் நம்பிக்கையோடு 1945 இல் முதல் சுதந்திரப் பிரகடனத்தை ஹோசிமின் தலைமையில் வியட்நாம் பாட்டாளிவர்க்க முன்னணிப்படை முன்மொழிந்தது; தொடர்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளால் வியட்நாம் சிக்கல்களை எதிர்நோக்கியபோது 1949 இன் மக்கள் சீனப் பிரகடனம் பல சாதனைகளை எட்ட வாய்ப்பளித்தது. உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சோசலிச சீனாவும், உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையுடையதும் முதலாவது சோசலிச நாடுமாகிய சோவியத் யூனியனும் கோட்பாட்டுப் பிளவுற்று அறுபதுகளின் நடுக்கூறிலிருந்து சோசலிச முகாம் இருமுகப்பட்டபோது மார்க்சியம் ஆரொக்கியமான வளர்ச்சியை எட்டுவதற்குமாறாக, எரிந்த கட்சி-எரியாத கட்சி விவாதத்துக்குள் மாட்டுப்பட்டுப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்தது.
உண்மையில் மார்க்சியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக சோவியத்-சீனப் பிளவு அமைந்தது. சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி வலது திரிபுவாதத்தை முன்னிறுத்தியபோது அதற்கு எதிராக மார்க்சிய-லெனினிசத்தைப் பாதுகாக்கும் கோட்பாட்டு விவாதத்தை முன்னிறுத்திய சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி காலவோட்டத்தில் அதிதீவிர அதிதீவிர இடதுசாரித் திரிபுவாதத்தைச் சரிவைச் சந்தித்தது. உலகநாடுகள் எங்கும் பாராளுமன்றம் வாயிலாக சோசலிசத்தை வென்றெடுத்தல் அல்லது வன்முறை வழிபாடு எனப் புரட்சிகர சக்திகள் பிளவுண்டு போயின. சோவியத் சார்பு-சீன சார்பு என்பன விகாரப்பட்டு ஒவ்வொருவரும் ருஸ்யப் புரட்சி அல்லது சீனப் புரட்சி பற்றிய வியாக்கியானங்களில் கைதேர்ந்தவர்களாக ஆகினரேயல்லாமல், தத்தமது நாட்டு புறநிலை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சிகள் பற்றி ஆராய்வதில் அக்கறையற்றவர்களாயினர்; அந்த நாடுகள்போல இங்கில்லையே என்ற பிலாக்கணம் வேறு. சொந்தச் சமூக சக்திகள் பற்றிய புரிதலின்றி, ஏற்கனவே நடந்தேறிய அந்த நாடுகளின் புரட்சிகள் குறித்து வித்துவக் காய்ச்சல் விவாதம் புரிவோரால் தமது சொந்த நாடுகளில் சமூக மாற்றப் புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க இயலும்? ஓரளவுக்கு சாத்தியப்பட்ட சில நாடுகளின் சாதனைகளையும் அந்த நாடுகளின் விவாதமும் போட்டாபோட்டியும் முடக்கிப்போட்டது. இன்று தென்னமரிக்க நாடுகளின் மார்க்சிய அணிகள் இப்பின்னடைவிலிருந்து மீண்டு புதிய வளர்ச்சிகளை எட்டும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளைக் காட்டி நிற்கின்றன. தவிர, மார்க்சியத்திலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் படுமோசமான பின்னடைவுகளையே தந்த அனுபவம் காரணமாக, மீண்டும் மார்க்சிய-லெனினிசத்தைச் சரியான புரிதலுடன் கற்றுக்கொண்டு தத்தமது நாட்டு நிதர்சன நிலைமைகளுக்கு ஏற்ப அதனை எவ்வாறு பிரயோகிப்பது எனும் தேடலுக்குரிய ஆரோக்கியமான நிலை உலகெங்கும் இன்று ஏற்பட்டுவரக் காண்கிறோம்.
                    -3-
  பிரச்சனைகளும் தீர்வுகளும்
மார்க்சியத்தை மிகுந்த பற்றுதியுடன் கையேற்று, இயலுமான தளங்களில் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வீறுமிக்க போர்க்குணத்தையும் அர்ப்பணிப்புகளையும் வெளிப்படுத்தியதன் வாயிலாக செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களை இலங்கை, இந்தியா போன்ற எமது நாடுகளின் மார்க்சிய முன்னோடிகள் எமக்கு வழங்கிச்சென்றுள்ளார்கள். அதன் இணை வளர்ச்சியாகப் புலமைத் தளத்திலும் இலக்கியக் களத்திலும் மார்க்சியத் திறனாய்வு ஆரோக்கியமான வளர்ச்சி நிலைகளைச் சாத்தியமாக்கியிருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்கள் எமது சமூக அமைப்பைப் புரிந்துகொள்வதில் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தியுள்ளது.
சாதிப்பிரச்சனை அடிப்படையில் தேசியப் பிரச்சனை எனக் கைலாசபதி காட்டியிருந்தார். தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்றவர்கள் அந்தச் சாதியப் பிரச்சனைக்கு எதிர்முகம் காட்டியபோது எமது தேசியம் ஆளும் சாதியினதும் ஒடுக்கப்பட்ட சாதியினதும் எனப் பிளவுபட்டிருக்கும் யதார்த்தத்தை உணர்த்தியது. ஈழத் தமிழ்த் தேசிய முன்னெடுப்பு ஆளும் சாதித் தேசியமாக(யாழ் வெள்ளாளத் தேசியமாக) வடிவம் பெற்றமையால் ஐக்கியப்படுத்த வேண்டியவர்களைப் பகைவர்களாக்கிக்கொண்டு, இறுதியில் அவலமான முடிவைச் சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாற்றுப் படிப்பினையின் பேறானதே இரட்டைத் தேசியக் கோட்பாடு.
இந்த அனுபவத்தோடு இந்திய சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை மீட்டுப்பார்க்கலாம். இந்திய கொங்கிரஸ் கட்சி உதயமானபோது, அதனைப் பிராமண தேசியமாய் ஜோதிராவ் புலேயும் அயோத்திதாசரும் அடையாளப்படுத்தியமையை இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். முப்பதாம் ஆண்டுகளில் அம்பேத்கர் முன்னெடுத்த தலித் அரசியலையும் பெரியாரின் திராவிடரியக்கத்தையும் எதிர்த் தேசியமாக விளங்கிக்கொள்வோம். இவ்வகையில் முன்னெடுக்கப்படும் இரட்டைத் தேசியக் கோட்பாடு ஆரோக்கியமான விவாதப் பொருளாக இன்று ஆகியுள்ளபோதும் நடைமுறைப் பிரயோகத்துக்கான சக்தியெனும் வகையில் மார்க்சியக் கட்சிகள் இதனைப் பாராமுகமாக ஒதுக்கிவைத்து மார்க்ஸ், லெனின், மாஓ சேதுங் போன்றோரது வசனங்களைப் பாராயணம் செய்வதிலேயே காலங்களிப்பதைக் காண்கிறோம்.
வர்க்கப்பிளவடைந்த ஐரோப்பாவின் தேசியக் கட்டமைப்பைப் போலன்றிச் சாதிச் சமூகத்தில் தேசியம் பிளவடைந்துள்ளது என்பதை மார்க்சிய மூலவர்கள் எழுதிவைத்துவிட்டு போகவில்லைத்தான்; புனிதநூலில் கண்டுள்ளவாறு ஒழுகுவதற்கு மார்க்சியம் இன்னுமொரு மதமல்ல. மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களில் நேரடியாக இல்லாத போதிலும் மார்க்சியச் சிந்தனை முறை எமது சமூகங்களில் ஆதிக்க சாதி-ஒடுக்கப்பட்ட சாதித்தேசியங்களாகப் பிளவுபட்ட யதார்த்த நிலையைக் கண்டுணர வழிப்படுத்தி, இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வந்தடைய ஆற்றுப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆசிய உற்பத்திமுறை என்பது இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டலைச் சாத்தியமாக்கி சாதி அமைப்புத் தோற்றம்பெற்றதன் பேறு என மார்க்ஸ் கண்டு காட்டியபோதே, வர்க்க ஒடுக்குமுறை மட்டுமன்றி சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுதலும் மற்றொரு நியதி என வெளிப்படுத்தியிருந்தார். சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுகின்ற ஒடுக்கப்படும் தேசம் விடுதலைப் போராட்ட வெற்றிவாயிலாக சோசலிசப் புரட்சியை சாத்தியமாக்க இயலும் என லெனின் காட்டியபோது எமது சமூக அமைப்புச் செல்நெறிகளைப் புரிந்துகொள்ளும் இன்னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் ஆய்வுக்குட்படுத்த விரும்பிய முகமது நபி குறித்த பிரச்சனை, சாதியச் சமூகத்தில் காணப்படும் இனமரபுக்குழுத் தொடர்ச்சியானது தமக்கேயுரித்தான பண்பாட்டுக் கோலங்களில் சாதிக்குச் சாதி வேறுபாடு நிலவுதல் மற்றும் பண்பாட்டு நீடிப்பு நிலவுகிற காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை எனும் வேறுபட்ட கட்டமைப்பு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே சாத்தியமாகும் சமூக அமைப்பு மாற்றங்களுக்கான வேறுபட்ட புரட்சியின் வடிவம் ஒன்று பற்றிக் கருத்துரைக்க வழிகோலியிருக்கும். அந்த முடிவினை மார்க்ஸ் கூறாதபோதிலும், அவர் எழுப்பிய வினாவும் தொடக்கிவைத்த சிந்தனை முறைமையும் எமக்கான சமூக மாற்ற வடிவம் பண்பாட்டுப் புரட்சி வகைப்பட்டது என நாம் கண்டடைய வழிப்படுத்துகிறது.
அரசியல் தீவிரத்துடன் இயங்கும் கட்சி அணிகள் கிரேக்க-ரோம் புரட்சியிலிருந்து பிரான்சிய-ருஸ்ய-சீனப் புரட்சிகள் வரையானவை குறித்த கற்றலுக்கு அழுத்தங்கொடுக்கும் அவசியம் ஏற்படுத்தியுள்ள தோற்ற மயக்கம் காரணமாக வர்க்க இருப்பை மட்டுமே பார்த்து சாதியமைப்பின் பிரத்தியேகத் தன்மை குறித்தும், இதன் மாற்றியமைத்தலுக்கு பண்பாட்டுப் புரட்சி அவசியம் என்பதையும் காண இயலாதவர்களாயுள்ளனர். புலமைத் தளத்திலும் பண்பாட்டுக்களங்களிலும் இயங்குவோருக்கு அத்தோற்றமயக்கத்திலிருந்து மீண்டு எமது நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு விளக்கம்பெற்று புதிய மார்க்கத்தை வகுத்துக் காத்திரமான செயலாற்றலைச் சாத்தியமாக்கி ஏற்படும் அதிர்வினால் கட்சிகளும் தோற்றமயக்கப் பின்னடைவைத் தகர்த்துக்கொண்டு புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் கைவரப்பெற இயலும்.
மார்க்சியக் கருத்தியல் உயிர் எனில், அதன்வழிநின்று சமூகமாற்றத்தை வென்றெடுக்கும் கட்சி அமைப்பு உடலாகும். புத்தூக்கம் பெறும் உயிர்த்துடிப்பு இல்லையெனில் உடல் செத்த பிணமாகும், அல்லது அந்நிலை நோக்கிச் செல்லும் நோய்க்கூறுக்குரியதாகும். அந்தவகையில், சேடமிழுக்கும் நோய்க்கூறுடன் வறட்டுச் சுலோகங்களைப் பாராயணம் செய்வோரை உயிர்த்துடிப்புமிக்க புதிய வளர்ச்சிக்கு இட்டுவர ஏற்ற பண்பாட்டு இயக்கங்கள் இங்கே உடனடி அவசியமாகும்.
கட்சி அமைப்புத் தொடர்பில் மார்க்சியத்துக்கு புது இரத்தம் பாய்ச்சும் தென்னமெரிக்க மார்க்சியர்கள் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து, ஏற்ற புதிய மாற்றங்களையும் சாத்தியமாக்கி வருகின்றனர். ஜாரிஸ ருஸ்யாவின் கொடுங்கோலாட்சிச் சூழலில் வடிவமைக்கப்பட்ட கட்சி வடிவம், குறைந்தபட்ச ஜனநாயகம் நிலவும் காலத்தில் அப்படியே பின்பற்றத்தக்கதல்ல என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பண்பாட்டுப் புரட்சியைப் பிரதான வடிவமாகக் கொண்டுள்ள எமது சூழலுக்கு அமைவான கட்சி அமைப்புக் குறித்து எமக்கு மேலும் விரிவான ஆய்வுகள் அவசியமாகும். அதனை நடைமுறை அனுபவம் வாயிலாகக் கண்டறிய ஏற்றதாக, சாத்தியமான புதிய பண்பாட்டுத் தளங்களைக் கட்டமைக்க ஏற்ற காலம் முழுதாய்க் கனிந்துள்ளது.ஜீவநதி 2012

Wednesday, December 5, 2012

முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு:


முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு: 

                                        -ந. இரவீந்திரன் -
இன்று(06.12.2012) பேராசிரியர் க.கைலாசபதியின் 30வது நினைவுதினம். அவர்(05.04.1933-06.12.1982) முற்போக்கு இலக்கிய இயக்கம் எழுச்சியுறத்தொடங்கிய 1953இலிருந்து தனது முற்போக்கு சமூக-இலக்கிய-அரசியல் செயற்பாட்டில் முனைப்பாக இயங்கி, அதன் வீறுமிக்க பங்களிப்புகளில் கருத்தியல்-நடைமுறைத் திசை மார்க்கத்துக்கு உன்னத வழிகாட்டலை ஏனைய முன்னோடிகளோடு வழங்கி, மாற்றுச் செல்நெறி எழுச்சியுறத் தொடங்கியபோது தனது இதய இயக்கத்தை நிறுத்திக்கொண்டவர்; மறைவின் பின்னரும் வழிகாட்டும் வகையில் வலுவான கருத்தியல் அடித்தளத்தை இடும்வகையில் அக்களத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் தலைமகனாக விளங்கியவர். வெறும் பல்கலைக்கழக பேராசிரியர் என்பதற்கு அப்பாலான அவரது சமூகமாற்றச் செல்நெறிக்கான ஆய்வுப்பங்களிப்பும், அதன் செயல்வேகத்துக்கு உந்துதல் வளங்கிய ஆளுமைகளோடு கொண்டிருந்த இரத்தமும் தசையுமான உயிர்ப்பான தொடர்பாடலினாலும் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
அவரது மறைவை அடுத்து மேற்கிளம்பிய இனத்தேசிய இயக்காற்றல் போரியல் இலக்கியத்தை வளங்கி 2009 உடன் மாற்றுக்கட்டத்தை அடைந்தது. அடுத்துள்ள இந்த மூன்று வருடங்களில் மீளாய்வுகளும் மீட்சிக்கான தேர்வுகள் எவ்வகையில் அமையலாம் என்பதான தேடலும் வலுப்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமாக அது மக்கள் விடுதலைச் செல்நெறியில் முன்னேறுவதற்கு மாறாக அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனக்குரோதங்கள் திட்டமிட்டே வளர்க்கப்படும் இன்றைய சூழலில், அந்த மூன்று தசாப்தங்களாக இனபேதங்கடந்து ஒன்றுபட்ட போராட்டங்கள்வாயிலாக அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுக்காகப் போரடிய அனுபவங்களை கைலாசின் வாழ்வும் பங்களிப்பும் ஊடாகக் கண்டுகொள்ள இயலும்.
சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் பாசிசம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக வலுவடைந்து வந்தபோது நாடுகள் தமது தேசிய சுயநிர்ணயத்தைப் பாதுகாக்கவும் அல்லது வென்றெடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. தத்தமது வரலாற்று போக்கின் நிலைக்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட தேசிய வரம்புக்கு உட்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஜனநாயக அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கவும் பேணவும் ஏற்ற முற்போ க்கு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் உலக நாடுகள் பலவற்றிலும் எழுச்சியுற்றன. இந்தியா இவ்வகையில் கட்டமைத்த செயலாற்றல் தமிழகத்தில் முற்போக்கு இலக்கிய அமைப்பு தோற்றம் பெற வழிகோலியது(முற்போக்கு கலை இலக்கிய அமைப்பாக்கம் தமிழகத்தில் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது). இலங்கையில் ஐம்பதுகள் தேசிய விழிப்புணர்வு எழுச்சியை எட்டிய சூழலில் சிங்கள இலக்கியமும் முற்போக்கு கருத்தியலை உள்வாங்கி வெளிப்பட்டபோதிலும், தமிழ் மொழிமூலக் களத்திலேயே "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" உதயமானது என்பது கவனிப்புக்குரியது. பல்கலைக்கழக மாணவராக இருந்த நிலையில் மு.எ.ச. இல் இணைந்த கைலாஸ் தொடர்ந்து தீவிர பங்களிப்பை வளங்கிய வகையில் அதன் கருத்தியல் செல்நெறிமீது அதிக தாக்கம் செலுத்துகிறவராக அமைந்தார்.
இங்கு தேசிய இலக்கிய எழுச்சி பாரதியை முன்னிறுத்தியதாக அமைந்தபோது, எமது மண்ணுக்குரிய பண்பாட்டுத் தேசியத்தை முன்னெடுத்த நாவலரையும், அனைத்துத் தளங்களிலும் முற்போக்கு உணர்வுகளை வெளிப்படுத்திய ஆன்மீக செயற்பாட்டாளரான விபுலாநந்தரையும் முன்னிலைப்படுத்தியிருந்தமை கவனிப்புக்குரியது. கைலாசின் ஆய்வியல் பன்மைத்தளத்தோடு தமிழர் சமூக-பண்பாட்டு-அரசியல் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளை வெளிப்படுத்த வாய்ப்புப் பெற்றமை இதன்பேறாகும். நாவலரின் கருத்தியலில் சாதியம் தாக்கம் செலுத்துவது அந்தக்கால நிதர்சனத்தைப் பொருத்த ஒன்றெனப் புரிந்துகொண்டு, அவர் அன்றைய மாற்றப்போக்குக்கு பங்களிப்பாளராக இருந்த முற்போக்கு ஆளுமை என்பதை காணத்தவறுகிறவர்கள், வரலாற்று வளர்ச்சிகளையும் விளங்கிக்கொள்ள இயலாதவர்கள்; தமது சமூக இருப்பை மக்கள் விடுத்தலைத் திசை மார்க்கத்துக்கு அமைவாக மாற்றியமைக்கவும் இயலாதவர்கள். கைலாசின் பார்வை வீச்சு வலுவோடு அமைந்தமையாலேயே தனது காலத்தேவையாக சாதியத் தகர்ப்பு அமைந்துள்ளமையைக் கண்டு அதற்கு அவசியமான ஆய்வு வெளிப்பாடுகளைத் தர ஏற்றதாக இருந்தது. 
சாதித்தகர்ப்புப் போரட்டம் தேசியத்தின் பிரதான வடிவமாக அமைந்த அன்றைய சூழலில் தமிழினத் தேசியம் அந்த முற்போக்கு செல்நெறிக்கு எதிராக இயங்கியது; இலங்கைத் தேசியம் எனும் நாட்டுத்தேசிய வடிவத்தில் ஜனநாயக உணர்வுடைய ஆளும் சாதிப் பிரிவினர், முஸ்லிம்-சிங்கள மக்கள் என்ற பரந்துபட்ட ஐக்கியமுன்னணி கட்டியெழுப்பப் பட்டு, விரல்விட்டெண்ணக்கூடிய சாதிவெறியர்களைத் தனிப்படுத்திக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு இயக்கச் செல்நெறி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. முற்போக்கு உணர்வோடு இவற்றை ஆதரிக்க வேண்டியிருந்த தமிழினத்தேசியத்தை ஏற்றவர்கள் தொடர்ந்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் பங்களிக்க இயலாதவர்களாய், அழகியல்வாதத்துள் அல்லது மார்க்சியத்தைக் கடப்பதில் முடங்க நேர்ந்தது(மு.தளையசிங்கம், மஹாகவி, வ.அ.இராசரத்தினம், கனகசெந்திநாதன் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்).
இவ்வகையில் அழகியல்வாதத்தை வரித்து, மக்கள் போராட்ட நிதர்சனங்களையும் அவற்றின்பேறான மாற்றங்களையும் கலை-இலக்கிய வடிவப்படுத்த இயலாதவர்கள் யதார்த்தவாதத்தை வரிக்க முடியாமல் இயற்பண்புவாத ஆக்கங்களையே தரவல்லவர்களாயினர். இவ்வகையில் இயற்பண்புவாத வகைப்பட்ட சிறுகதைகள் முப்பதாம் நாற்பதாம் ஆண்டுகளிலேயே படைக்கப்பட்டமையை வைத்து, முற்போக்கு இயக்க எழுச்சிக்கு முன்னரே 'மண்வாசனை இலக்கியம்' தோன்றிவிட்டது என்போருண்டு. உண்மையில் மண்வாசனை இலக்கியம் என்பதன் வாயிலாக முற்போக்கு இயக்கம் முன்னெடுத்த புதிய கலை-இலக்கியச் செல்நெறி, தேசிய இலக்கியம் எனக் கைலாசபதியால் கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்டு வளங்கப்பட்டபோது இருப்பை வெறுமனே சித்தரிப்பதற்கப்பால், ஊடறுத்து உள்ளிருப்புகளையும்- மக்கள் விடுதலைத் திசைவழியில் அதன் வளர்ச்சிப் போக்கை ஆற்றுப்படுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கும் சாத்தியங்களையும் கண்டறிந்து, செயலுருப்படுத்தி, அந்த அனுபவ வெளிப்பாடுகளாக அமைய வேண்டியது என வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.
மாற்றத்துக்காக நடந்த கொலைகளும் அழிவுகளும் நிறைந்த யுத்தங்களில் அல்லது அதன்போது மக்கள் நலன் பக்கம் நின்ற களப் பங்களிப்போடுதான் எமது முதல் இலக்கியமான சங்ககாலப் படைப்புகள் எனப்படும் வீரயுகப் பாடல்கள் படைக்கப்பட்டன என்பதனைத் தனது கலாநிதிப் பட்டப்பேற்றுக்கான ஆய்வேட்டில் கண்டு காட்டிய கைலாஸ், தொடர்ந்தும் அதுசார்ந்த பல்வேறு கட்டுரைகளில் அச்சிந்தனையை வளர்த்தெடுத்துத் தந்துள்ளார். பக்திப்பேரியக்கத்தில் வணிக சார்பு அரசை எதிர்த்துப் போராடி நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தை வென்றெடுக்கும் சமூகமாற்ற இயங்காற்றல் தேவாரம்-திருவாசகம் என்ற இலக்கிய வடிவம் பெற்றமையை அவர் காட்டியுள்ளமை தமிழியலுக்கான மிகப்பெரும் பங்களிப்பாகும். இந்த இலக்கிய மாற்ற எழுச்சியில் அன்றைய மக்கள் இலக்கிய வடிவங்கள் உள்வாங்கி விருத்திசெய்யப்பட்டுள்ளமையை அவர் இதன்போது காட்டத்தவறவில்லை.
வரலாற்று வளர்ச்சிப்போக்கில் செவ்வியல் இலக்கியத்தை அப்படியே கையேற்பதாக அல்லாமல் தமதுகாலத்து மக்கள் இலக்கியத்தை உள்வாங்கி, புதிய பரிணமிப்புக்கு உள்ளாக்கும் படைப்பாளிகளே ஆற்றல்மிக்கவர்களாய் விளங்கிவந்தமையை இவ்வகையில் கைலாஸ் காட்டியுள்ளார். இருப்பை மாற்றிப் புதிய வரலாற்றுச் செல்நெறியை அவர்கள் தொடக்குவதற்கு அமைவாக பேசுபொருளையும் மாற்றுகிற வகையில் இலக்கிய வடிவத்திலும் மாற்றம் ஏற்படக் காரணமாவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏற்பட்ட அதிர்வும் புதிய மத்தியதர வர்க்கத் தோற்றமும் காரணமாக இலக்கியப் பேசுபொருளும் வடிவமும் மாற்றம் பெறவேண்டியதாயிருந்தது. நாவல் இவ்வகையில் தோன்றியது.
இன்றைய பன்மைத்துவப் பிரச்சனைகளை இலக்கியமயப்படுத்த நாவலே சிறப்பான வடிவம் என்பார் கைலாஸ். ஆயினும் முப்பதுகளில் சிறுகதை பிரதான வடிவம் ஆனது. தொடர்ந்து பாரம்பரியமாக ஆற்றலோடு இருந்த கவிதையும் அதிர்வுக்குள்ளாகிப் புதுக்கவிதை என்ற நவீனத்துவக் கோலம் பூண்டது. இது நெருக்கடிச் சூழலின் வெளிப்பாடு என்பார். காந்தியம், பெரியாரியம் என்பன மக்களை வீதிகளில் இறக்கி மாற்றத்துக்கான வரலாறு படைக்கும் போராட்டங்கள் வலுப்பட்டபோது, அவற்றை இலக்கியமயப்படுத்த விரும்பாத சாதிய-வர்க்க சக்திகளுக்கு பிரச்சனைகளைப் பெரிதும் பேசுபொருளாக்கவேண்டியில்லாத இந்த வடிவங்கள் புகலிடமாகின. இவர்கள் இயற்பண்புவாத ஆக்கங்களைத் தந்தபோது, மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் சமூகப் பிரச்சனைகளையும் மக்கள் போராட்டங்களையும் இலக்கியமாக்கினர். "பஞ்சும் பசியும்" நாவலைத் தந்த தொ.மு.சி. முதல், அந்தப்போக்கு அறுபதுகளில் ஈழத்தில் முனைப்புற்றபோது மேற்கிளம்பிய ஈழத்துப் படைப்பாளிகளான இளங்கீரன், செ.கணேசலிங்கன், டானியல் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன்போது சிறுகதை, புதுக்கவிதை என்பனவும் யதார்த்தவாத வடிவில் புத்தாக்கம் பெற்றுப் பல்வேறு படைப்பாளிகளால் வெளிப்படுத்தப்பட்டன. ஆயினும் மக்கள் எதிர்கொள்ளும் முரண்கள், அவற்றைத் தீர்க்க முன்னெடுக்கவேண்டியுள்ள மார்க்கங்கள் என்ற பல்வகைப் பேசுபொருட்களை அலச ஏற்றது நாவல் என்கிற வடிவமே எனும் கைலாசின் கருத்துப் புறந்தள்ள இயலாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
முற்போக்கு இலக்கியம் தொழிலாளர், விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோரது போராட்டங்களை மட்டும் பேசுவதாக இல்லாமல், சாதியத் தகர்ப்புப் போராட்டங்களையும் பேச முற்பட்டபோது, சாதிமுறையின் நிதர்சனங்களை வரலாற்று அடிப்படையில் ஆய்வுசெய்து வெளிப்படுத்தி எமக்கான மார்க்சியப் பிரயோக வடிவத்தை இனங்காண ஆற்றுப்படுத்தியவர் கைலாஸ். பக்திப்பேரியக்கத்துடன் வெறும் நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது எனக்கூறாமல், நிலவுடமை வர்க்க சாதியான வெள்ளாளர் ஆதிக்கம் பெற்றமையைக் கண்டுகாட்டியவர்; அந்த மேலாண்மையின் இலக்கிய வடிவமாக "பெரிய புராணம்" வெள்ளாளரான சேக்கிழாரால் தரப்பட்டமையயும், ஆதிக்க உயர் தத்துவமாக சைவ சித்தாந்தத்தை வெள்ளாளரான மெய்கண்டதேவர் தந்தமையையும் காட்டியுள்ளார். இடைக்காலத்தில் சாதிப் பிரச்சனை சமயப் பிரச்சனையாகக் காட்டப்பட்டு வரப்பட்ட போதிலும், இன்று வர்க்க-தேசியப் பிரச்சனையாகப் புரிதல் கொள்ளப்பட்டு கலை-இலக்கிய ஆக்கம் கொள்ளப்பட வேண்டும் என்பார் கைலாஸ். 
இவ்வாறு சாதித் தகர்ப்புப் போராட்டம் ஈழத்தில் அறுபதுகளில் முதன்மைப் பேசுபொருளான நிலையில் வரலாற்றுப்போக்கில் சாதியம் தோன்றி வளர்ந்து இன்றைய இருப்பை வந்தடைந்தமையை அவர் காட்டியிருந்தது போலவே, ஈழத்து வரலாற்றுச் செல்நெறியின் பிரத்தியேகப் போக்குகளையும் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுயந்திரப் பிரவேசம், அகராதி வெளிப்பட்டமை, விஞ்ஞானம் தமிழ் வாயிலாகப் புத்தகம் ஆனமை என்பவற்றத் தொடர்ந்து, பொதுசனத்தை நோக்கிய வசனநடை வலுப்பெற்று வந்தமை அவர் கவனிப்பில் பிரதான இடத்தை எடுத்திருந்தது. இவற்றின் பரிணமிப்பில் இருபதாம் நூற்றாண்டின் மத்திய கூறில் எழுச்சியுற்ற தேசியக் கருத்தியல் கைலாசபதியால் முன் கையெடுக்கப்பட்டமையைக் கண்டுள்ளோம்; தொடர்ந்து ஏ.ஜே.கனகரத்தினா, சிவத்தம்பி போன்றோரும் தேசிய இலக்கியக் கோட்பாடு தொடர்பில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்திருந்தனர். முற்போக்கு இலக்கிய முன்னோடியான அ.ந.கந்தசாமி இவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாடு முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டமை முக்கியத்துவமிக்க பங்களிப்பு என வலியுறுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.
இவ்வகையில் மகத்தான தொடக்கங்களும் பன்முகப் பங்களிப்புகளும் உடைய ஆளுமையான கைலாசபதியில் விமர்சனத்துக்கான விடயங்கள் இல்லை என்று கருத வேண்டியதில்லை. ஒப்பியலுக்கு முன்னுரிமை வழங்கியமை அவரது மகத்தான கொடை; அதையே அதீதப்படுத்தி நோக்கியபோது, தமிழின் தனித்துவச் செல்நெறி காரணமாக வர்க்கசார்பற்ற "திருக்குறள்" தோன்றமுடிந்தமையக் காணத்தவறியுள்ளார். நாட்டுத் தேசியத்தை மட்டும் கவனங்கொண்டு இனத் தேசியத்தைக் காணத்தவறியமையால், சிலப்பதிகாரம் குறித்து நியாயமான பார்வையை வெளிப்படுத்த இயலாதவரானார். அவரே காட்டியவாறு சாதிய வர்க்க ஏற்றத்தாழ்வு முறை நிலவும் எமது அமைப்பில் அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வாயிலாக நடந்தேறியுள்ளது(இந்த வசனத்தில் அவர் காட்டாதபோதிலும் அதற்குரிய எல்லைவரை கொண்டுவந்திருந்தார்); அதன் பேறாக கருத்தியல் களச் செயற்பாடு அவசியம் எனக்கண்டால், பாரதி ஆன்மீக நாத்திகராய் இருந்தார் எனக் கண்டிருக்க இயலும். அவ்வாறில்லாமல் பாரதியைச் சமய காரராகக் காண்பதில் அவருக்குள்ளேயே முரண் ஏற்படக் காண்போம். வரட்டுவாத நிலையில் பாரதியைப் பிற்போக்காளராக, அல்லது முழுமை பெறாத புரட்சியாளராகப் பலர் காட்ட முயன்றபோது கைலாஸ் முழுமையான புரட்சியாளராக காட்டியிருந்தார். அவ்வாறே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை தொடர்பில் மேற்கூறிய விமர்சனத்துக்குரிய அம்சங்கள் வெளிப்பட்டபோதும், அவரது நுண்மாண் நுழைபுலம் காரணமாக அவற்றுக்கான நியாயத் தீர்ப்புக்குரிய இடத்தின் எல்லையிலேயே அவர் வந்தமைவதைக் காண இயலும். இது அவர் மக்கள் இலக்கிய நிலைப்பாட்டாளர் என்பதன் பேறுமாகும்.
(இக்கட்டுரை பேராசிரியர் கைலாசபதியின் முப்பதாவது ஆண்டு நினைவு நாளை "முற்போக்கு கலை இலக்கிய மன்றம்" கொழும்பில் நீர்வைப் பொன்னையன் தலைமையில் நடாத்தியபோது சமர்ப்பிக்கப்பட்ட பேருரையின் சுருக்கமாகும். அன்றைய தினம் "முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு" எனும் ந.இரவீந்திரன் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டுள்ள இந்நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நூலின் முதல் பிரதியைத் திருமதி சர்வமங்களம் கைலாசபதி பெற்றுக்கொண்டார்).

Saturday, December 1, 2012

தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்


கே ஏ சுப்பிரமணியம்
?மணியம் தோழர் ஏற்படுத்திய கருத்தியல்: தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்
முந்திய பதிவில் மூன்றுலகக் கோட்பாட்டு அடிப்படையில் எனக்கான கருத்தியலை வந்தடைய மணியம் தோழர் வழிப்படுத்தியிருந்தவாறினைத் தொடர்ந்து பேசுவதாகக் கூறியிருந்தேன். அந்த மூன்றுலகக் கோட்பாட்டில் இன்று எவரும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கட்சி இன்னும் மூன்றுலகக் கோட்பாட்டில் தொங்குகிறது என்ற அனாமதேயமான ஒரு குற்றச்சாட்டும், அதை எவரும் மறுக்க முன்வராமையும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு, மாயாவாத மார்க்சியம் - லெனினியம் - மாஒ சேதுங் சிந்தனை எனப் பேசுவது பொருளற்றது.
முதலில் ஃபனான் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்காவை மூன்றாமுலகு எனக் குறிப்பிட்டார். பின்னர் மாஒ, ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தையும் மூன்றாமுலக நாடுகள் என்றார். அதிகமாக வஞ்சிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளோடு கூடுதல் நெருக்கத்தைக் காட்டிய அதேவேளை ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்படும் அனைத்து மூன்றாமுலக நாடுகளோடும் நெருக்கமான உறவை அவர் முதல்நிலைக்குரியதாகக் கட்டியெழுப்பினார். சங்கானையில் நடந்த கூட்டத்தில் நான் சண்முகதாசனிடம் மூன்று கேள்விகளை எழுதிக் கொடுத்ததையும், ஒரு பொடிப்பயல் எனப் புறந்தள்ளாமல் அவர் பதில் அளித்தமையையும் பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளேன். அந்தக் கேள்விகளில் ஒன்று, "பிற்போக்கான சிறிமாஒ பண்டாரநாயக்க அரசுக்கு சீனா எப்படி 'பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம்' கட்டித்தரலாம்" என்பதாகும். ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்படுவதில் இருந்து விடுபட ஓரளவில் இந்த உதவி பங்களிக்கலாம் என்பதை சண் விளக்கினார்.
முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளும் மேலாதிக்க நாடுகளால் சுரண்டப்படுவதும், இவ்விரு தரப்புக்குமிடையேயான முரண்பாட்டை சரியாகக் கையாள்வது அவசியம் என்பதையும் மாஒ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்நாடுகளோடான உறவுகளில் அவர் வலியுறுத்திய கருத்துகள் அப்போதே "பீக்கிங் ரிவியூ" சஞ்சிகைகளில் வந்துள்ளன; இப்போது விடியல்-அலைகள் இணைந்து வெளியிட்டுள்ள "மாவோ- தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்புகளின்" ஒன்பதாவது தொகுதியில் இவ்வகையில் உலக நாடுகளை வகைப்படுத்திக் காட்டிய மாஒவின் பார்வையைக் காணலாம்.
மாஒவின் மறைவின் பின்னர் "மூன்றுலகக் கோட்பாடு" பேசுபொருளானபோது, அதுபற்றிய தனி நூல் வெளியானது. மேலாதிக்க நாடுகளான சோவியத் யூனியன், அமரிக்கா என்பவற்றைத் தனிமைப்படுத்துவது; மூன்றாமுலக நாடுகள் சுயசார்பில் தங்கியிருக்க உதவுவதால், பாதிப்புக்குள்ளாகும் இரண்டாம் உலக நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட வாய்ப்பான சூழலை ஏற்படுத்துவது என்பன இக்கோட்பாடு சார்ந்து விவாதத்தில் மேற்கிளம்பின. இவ்வகையில் முரண்பாட்டைக் கையாள்வது என்பது நாட்டினுள்ளே முன்னதாக மாஒ ஐம்பதுகளின் நடுக்கூறில் கோட்பாட்டுருவாக்கம் செய்த ஒன்று; முன்னதாக முரண்பாடு எனில் எதிர் நிலைக்கு உரியதாக மட்டுமே பார்க்கப்பட்டது. பிரதானமாக ஸ்டாலினும், தொடர்ந்தும் சோவியத் யூனியன் எப்போதுமே அவ்வாறுதான் கையாண்டிருந்தது. மக்கள் மத்தியிலான முரண்பாடு எதிரியுடனான முரண்பாட்டைக் கையாள்வதிலிருந்து வேறுபட்டது என மாஒ வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியமை மார்க்சியத்துக்கான பெரும் பங்களிப்பாகும்.
இவ்வகையிலான மூன்றுலகக் கோட்பாட்டை சீன நூல் சார்ந்து மட்டுமல்லாமல் சுயமாக மணியம் தோழர் தானே தேடி நிறைய ஆதாரங்கள் வாயிலாக தனி ஆக்கம் ஒன்றையும் எழுதியிருந்தார். அது சண்ணுடனான சிறப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்டிருந்தது. மணியம் முன்னர் இருந்தே இந்தவகைக் கையாளலையே எமக்குரியதாக வடிவப்படுதித் தந்துவந்தமையால் இந்தக் கட்டம் அதிர்ச்சிக்குரியதாக இருக்கவில்லை; வடபிரதேசத்தின் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றாமுலகக் கோட்பாட்டை ஏற்றுப் புதிய கட்சியில் அணிதிரண்டமையிலேயே இதனைக் காண இயலும்.
மக்கள் மத்தியிலான வேலையில் இவ்வகையிலான மூவகைப்படுத்தல் என்பதை மணியம் தோழர் எப்படிக் கையாண்டார் எனக்காட்டுவது இங்கு அவசியமானது. சாதியப் போராட்டம் முனைப்பட்ட நிலையில் நடந்த கொம்யூனிஸ்ட் கட்சி எட்டாவது மாநாட்டில், சண் " கருப்பினப் போராளிகள் வெள்ளையரைப் பெற்றோள் ஊற்றி எரிப்பதைப் போல வெள்ளாளரைப் பெற்றோல் ஊற்றி ஒடுக்கப்பட்ட சாதிப் போராளிகள் எரிக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டதைக் கூறும் மணியம், அப்படியென்றால் முதல் பெற்றோல் இவருக்கே அல்லவா வரும் என்பார். மார்க்சிய-முற்போக்கு-ஜனநாயக உணர்வுடைய ஏராளமான வெள்ளாளர்கள் சாதியப் போராட்டத்தை ஆதரித்தனர் மற்றும் பங்கெடுத்தனர்.   சாதியப் போராட்ட அனுபவங்களில் நடுநிலைச் சக்திகளை வென்றெடுக்கக் கையாண்ட நடைமுறைத் தந்திரோபாயங்கள் குறித்து நிறையக் கூறியுள்ளார். இதுகுறித்து "இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூல் விரிவாகக் காட்டியுள்ளது.
என். சண்முகதாசன்,மாவோ 
தமிழினத் தேசியப் பிரச்சனை தொடர்பிலும் இந்த மூன்றாம் (இடைநிலைச்) சக்திகளைக் கையாள்வதுபற்றிய வழிப்படுத்தலைச் சிறப்பாகக் காட்டியுள்ளார். நான் எப்போதும் அவரைச் சந்தித்து அன்றன்று செற்பட்டவாறினை அவரோடு அளவளாவுவதுண்டு; அவ்வாறு அவற்றைக் கூறுமாறு அவர் ஆக்கியிருந்தார். எல்லாவற்றையும் கேட்டு அவற்றின் மீதான விமர்சனத்தின் ஊடாகவே மார்க்சியத்தை அவர் கற்றுத்தந்தார். தமிழீழச் செயற்பாட்டாளர்களுடன் பெரும் விவாதங்களை நடாத்தி வெற்றிபெற்றதான மிதப்போடு என் தர்க்கத்திறனைச் சொன்ன இரண்டொரு சந்தர்ப்பங்களில், கண்டன விமர்சனத்தை முகங்கொண்டேன். மார்க்சிய அணிக்கு ஆகாயத்திலிருந்தா ஆட்கள் வருவர், இப்படி தமிழீழம் என இருப்பவர்கள்தானே வருவர்; இவர்களை விவாதத்தில் வெல்வதல்ல விடயம், வென்றெடுப்பது எப்படி என்பதே முக்கியம் என்பார். அதன்பின் பெரும்பாலும் விவாதித்து எவரையாவது வீழ்த்துவது என்பதைவிடவும், சரியான கருத்தை ஒருவர் வந்தடைய எவ்வாறு உதவலாம் என்பதிலேயே என் கவனம் இருந்தது. கருத்தாடல் நடுநிலைச் சக்திகளை வென்றெடுப்பதற்கானது என்ற புரிதல் புரட்சியாளருக்கு அவசியம். இல்லையேல் வென்றெடுக்க வேண்டியவர்களையும் எதிரியின் பக்கம் தள்ளும் கைங்கரியத்தையே செய்ய நேரும்.
நான் கட்சிக்கு வரும் எழுபதுகளின் முற்பகுதி இன முரண் கூர்மையடைந்து வந்த காலகட்டம்; தரப்படுத்தலை முகங்கொண்ட இரண்டாம் வரிசை எனது. அந்தக் கடும் போட்டியை நிராகரித்து முதலில் இலக்கிய நாட்டத்திலும் தொடர்வளர்ச்சியில் மார்க்சிய அரசியலுக்கும் வந்தேன். அந்தவகையில் இனமுரண் குறித்த கேள்வி என் தலைமுறையில் கட்சியில் இணைந்த இளைஞர்களிடம் இருந்தது. அதனாலேயே இனவாதத்துக்கு எதிராக வர்க்கப் பார்வையில் அதிகம் புடமிடப்பட வேண்டியவர்களாக இருந்து அவ்வாறாக வடிவப்படுத்தப்பட்டவர்கள். அந்தப் புதிய வார்ப்பின் கவர்ச்சியில் தமிழ்த் தேசிய கருத்துடையவர்களோடு விவாதிக்கப் போய் மணியம் தோழரால் இவ்வகையில் நிதானப்படுத்தப்பட்ட நிலையில் "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?" என்ற விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன். முன்னதாக இனப்பிரச்சனை தொடர்பான நாட்டம்-எதிர்க் கருத்தாடல்-நிதானப்பட்ட கருத்தியல் நிலை என்ற பரிமாணங்களோடு லெனின், ஸ்டாலின் சிந்தனைகளையும் சீன அனுபவங்களையும் எமது வரலாற்று நிதர்சனத்தையும் கவனம் கொண்டு அது எழுதப்பட்டது. அதனை எடுத்துச்சென்று பல்வேறு தரப்பினரிடம் காட்டிக் கருத்தறிந்து பெற்ற விமர்சனங்களை என்னிடம் கூறி, வேண்டிய திருத்தங்களைச் செய்வித்திருந்தார். கட்சிப் பத்திரிகையான "செம்பதாகை"யில் மூன்று இதழ்களில் தொடராக அது வந்திருந்தது. மார்க்சிய அடிப்படையில் முதல் முயற்சியாக சுயநிர்ணயம் பற்றிப் பேசிய கட்டுரை அது.
பீட்டர் கெனமன் ,சரத் முதடுவகம  ,W .A .தர்மதாச ,K A சுப்பிரமணியம் 
எந்த ஒரு முதல் முயற்சியும் சுத்த சுயம்புவாக அமைந்துவிடாமல், ஆக்கம் ஒன்றைப் பலரதும் பார்வைக்கு உள்ளாக்கி விமர்சனங்கள் அடிப்படையில் இறுதி வடிவப்படுத்துவதனை இதன்வாயிலாகக் கற்றுத்தந்தார். மாறுபட்ட கருத்தாளர்களின் கருத்துகளைக் கவனம் கொள்வது, இணைந்து வேலை செய்வது என்பவற்றையும் இதன் வாயிலாக அனுபவப்படுத்தியிருந்தார். மாஒ, 10 விழுக்காடே மார்க்சியராக உள்ளவரோடும் இணைந்து வேலை செய்யத்தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பதை அடிக்கடி கூறுவார். மூன்றுலகக் கோட்பாட்டில் இது அடிப்படையானது. பிற்போக்காளர் மிகக் குறைந்தவர்களாக உள்ளபோது, நடுநிலயாளர்களாக மிகப் பெரும்பான்மையினர் இருந்து வென்றெடுக்கப்படவேண்டியிருப்பர் என்பதை மாஒ அடிக்கடி கூறியுள்ளார். ஆயினும் நடைமுறையில் தம்மைப் பெரும் புரட்சியாளர் எனக் காட்டும் பலரும் 70 விழுக்காடு மார்க்சியராய் உள்ளவரிலும் இருக்கும் 30 விழுக்காடு பிரச்சனையைப் பெரிதாக்கி விவாதித்து எதிரியாக்கிவிடும் வேலை முறையையே முன்னெடுக்கக் காண்கிறோம்.
ஐக்கியம்-போராட்டம்-ஐக்கியம் என்ற வேலைப் பாணி பலருக்கும் பரிச்சயமற்றுள்ளது. என்வரையில் மூன்றுலகுக் கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சியத்தை நேசிக்கும் எவரையும் எதிரியாக்க இயலாது. அதற்காக இன்று அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாதிரிக் கொம்யூனிஸ்ட் கட்சி இருப்பதைச் சாட்டாக்கி ஒருபோதும் அரசை ஆதரிக்கும் எந்த வேலையையும் நான் செய்ததில்லை. அரசை விடவும் தமிழ் மக்களது போராட்டம் பாஸிஸ சக்தியால் தலைமை தாங்கப்பட்ட போதிலும் எதிர்க்கக் கூடாதது என்ற மணியத்தாரின் வழிமுறையைப் பின்பற்றிவந்தேன். "ஆமை பிடிப்பார் மல்லாத்துவார், நாம சொன்னால் பாவம்" என்று புலிகள் தமக்கான அழிவைத் தாமே தேடுவர் என்பதை அவர் எப்போதும் கூறியதை மனங்கொண்டு செயற்பட்டுள்ளேன்; அதேவேளை வன்முறை வழிபாட்டில் புலிகளை நியாயப்படுத்துகிறவர்களுக்கு மாறாக, அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளேன். கட்சி ஐ.தே.க. ஆட்சியிலிருந்து மாற்றம் ஏற்பட்டு சமாதான முன்னெடுப்பில் இயங்கிய போது சாகித்திய மண்டலக் குழுவுக்கு என் பெயரைக் கொடுத்திருந்தவகையில் குழுவில் பங்கேற்று, எப்போது விலகச் சொன்னதோ அப்போதே விலகினேன். அதேபோல கட்சி ஏதாயினும் அமைப்போடு தேவை அடிப்படையில் உதவிபெறும்போது, அதற்கு ஏற்ற பிரதி உபகாரங்களை என்னிடம் கேட்டபோது கட்சிக்குத் தெரியப்படுத்திக்கொண்டு ஏதாயினும் உதவியைச் செய்துள்ளேனே அல்லாமல் கட்சியை மீறி, எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாளனாக நான் இருந்ததில்லை.
கா .செந்தில்வேல் ,சோ .தேவராஜா ,இ .தம்பையா .
மணியம் தோழர் ஈழத்தேசிய நாட்டத்தோடு வந்த தமக்கு உதவியது பற்றி அசோக் குறிப்பிட்டிருக்கிறார்; முன்னர், அவர்களை எதிரியாகக் கொள்ளக்கூடாது என மணியம் தோழர் கூறிய ஒரு சந்தர்ப்பத்தில் நான் கோபத்தோடு "நீங்கள் கொம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்குகிறீர்களா, அல்லது இந்த ஈழக்குழுக்களுக்குத் தலைமை தாங்குகிறீர்களா" எனக் கேட்டிருகிரேன். நிதானப்பட்ட நிலையில் ஐக்கியமுன்னணி வேலைமுறையை அவரிடமிருந்து கற்கவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்டுள்ளேன். வலதுசாரிப் பிற்போக்கு பாசிசத் தலைமையில் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும், அதற்கு எதிராக செயற்பட்டதில்லை; விமர்சனத்தை முன்னெடுத்துள்ளேன், இடதுசாரித்தமிழ்த் தேசியம் ஐக்கியப்படத்தக்கது என்ற போதிலும், மார்க்சியர் என்கிற நிலையில் இலங்கைத் தேசியத்தினுள் பிரிந்து செல்லும் உரிமை இல்லாத சியநிர்ணயத் தீர்வை அடைய வேண்டும் ஏற 1982 இல் எழுதிய கருத்தோடு தான் இன்றும் உள்ளேன்.
என்னுடைய ஆய்வில் அதே 82இல் பாரதி வந்தபோது அவரது கருத்தியல் சார்ந்து பாரதியை அணுகிய நான் புதிய முடிவை வெளிப்படுத்தினேன். அதனைத் தனி நூலாக்க வேண்டும் எனக் கைலாஸ் கூறியிருந்தார். அதையறிந்த மணியத்தார் பாரதியியலில் ஆழக்கால் பதிக்கச் சொன்னார். சாதி-தேசியம்-பாரதியம் என்பன எனது பிரதான ஆய்வுக்களமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்தியலோடு இக்களங்களில் முப்பது வருடங்களாக செயற்பட்டதன்பேறே இரட்டைத் தேசியம், பண்பாட்டுப்புரட்சி வாயிலாக எமக்கான சமூக மாற்றம் என்பவற்றுக்கான கோட்பாடுகளாகும். இது எமது பிரத்தியேகக் களத்தில் அவசியப்பட்ட போராட்டங்களை கட்சி அனுசரணையோடு முன்னெடுக்க அவர் முன் கையெடுப்பதில் சக தோழர்களையும் மக்களையும் வென்றெடுத்த அவரது வேலைப் பாணியின் திரண்ட வெளிப்பாடு. இதற்கு நான் எழுத்து வடிவம் கொடுத்த போதிலும் முழுதாக கே.ஏ.சுப்பிரமணியத்தின் செயற்பாடு-சிந்தனை என்பனவே இரட்டைத் தேசியக் கோட்பாடு; பல்வேறு தோழர்கள், கோட்பாட்டு நடைமுறைத் தவறுகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் ஆளுமைமிக்க தலைமையை வழங்கிய தோழர் சண்முகதாசன் போன்றோருக்கும் இதுசார்ந்த பங்களிப்பு உண்டு.

Monday, November 26, 2012



தோழர் மணியம் 





நவம்பர் 27 இல் பதிவாகும் ஒக்டோபர் 21

 முந்திய சந்திப்பில் ஒக்டோபர் 21 எழுச்சி குறித்த பதிவொன்று பேசுபொருளாயிருந்தது. வேறு பல வேலைகளின் காரணமாக இடையில் எமது உரையாடல் தடைப்பட்டிருந்தது. மீண்டும் முக்கியத்துவம்பெறும் திகதியொன்றில் இந்தச் சந்திப்பு. தமக்கு ஊட்டமளிக்கும் எதிர் இனவாதம் ஒன்றை அவாவும் இனவாத சக்திகளுக்கு இந்த நாள் வேறு பொருள்தரும். மக்கள் விரோதமாக முனைப்படைந்த அந்த 'கார்த்திகைக் கொடுங்கனவு' வரலாற்று ஏட்டிலிருந்து விரைவில் மறக்கப்பட்டதாகிவிடும்(தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளின் போராளிகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடியவர்களும் ஒட்டுமொத்தமாக மாவீரர்களாக நினைவுகூரப்பட வேண்டும்; அது பாசிச வழிப்படுத்திய ஒரு பிற்போக்குத் தலைவரின் பிறந்த நாளாக இருக்கப்போவதில்லை). மாறாக, மக்கள் விடுதலையை நேசிக்கும் பொதுவுடமைவாதிகளுக்கு இந்தத்தினம் புரட்சிகர உணர்வை புத்தாக்கம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். ஒக்டோபர் 21 எழுச்சியை நினைக்கும் போதெல்லாம் கிளர்ச்சியூட்டும் முக்கியத்துவம்மிக்க ஆளுமையான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களது இதயத் துடிப்பு அடங்கிய நாள் 1989 இன் நொவெம்பர் 27 ஆகும்.
சண் ,மணியம் 
இங்கு அவரோடான ஊடாட்டத்தில் இன்றைய சூழலில் மேற்கிளம்பும் நினைவலைகளைப் பேசிக்கொள்வோம். பத்துவருடங்களின் முன்னர் மணியம் தோழரின் மூத்த மகன் ஒரு விடயத்தைச் சொன்னார்; "அப்பா, சண் தலைமையிலிருந்து விலகியது தனது மிகப்பெரும் தவறு" என்று சொன்னதாக அவர்(சத்தியராசன்) கூறியபோது மிகுந்த கோபாவேசத்தோடு மறுப்பைத் தெரிவித்தேன். "வேறு வடிவத்தில் சொல்லியிருக்கக் கூடியதை இவ்வகையில் தவறாகப் பொருள்கொண்டு சொல்லாதீர்கள்" என்றேன். பின்னர் ராசன் விபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தும் நாலைந்து வருடங்கள் கடந்தோடிய நிலையில் மணியம் தோழரின் இளைய மகன் சத்தியகீர்த்தியும் அதேவிடயத்தைச் சொன்னார்; முன்னதாக ராசன் சொன்னதை நான் மறுத்திருந்தது கீர்த்திக்குத் தெரியாது.
இருவரும் ஒரேவிடயத்தைக் கூறிய நிலையில் அவர் இந்தப்பொருளில் கூறியிருக்க முடியாது எனத் தொடர்ந்து என்னால் கருத இயலவில்லை. பொதுவாகவே கொம்யூனிஸ்ட் கட்சி காலத்துக்குக் காலம் பிளவுபட்டு மக்களைவிட்டுத் தூரப்பட்டுப்போன தவறை இளைத்துவிட்டோம் என்று என்னோடும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தனது அரசியல் செயற்பாட்டு அனுபவங்களை "ஒரு கொம்யூனிஸ்ட்டின் சுயவிமர்சனம்" என்பதாக எழுதவேண்டும் எனக்கூறிக்கொண்டிருந்தார். எழுத முன்னர் அவரே 'காலம் ஆகினார்'. அந்தக் கடந்த காலத்தவறில் தனதுமான பங்கை சுயவிமர்சனமாக முன்வைக்கும் நினைவே சண் தன் அரசியல் அனுபவங்களை 'ஒரு அப்பழுக்கற்ற கொம்யூனிஸ்ட்டின்' வாழ்க்கை போல எழுதியிருந்த காரணத்தால்தான். சண் மீது மிகுந்த மதிப்பு அவருக்கு இருந்தபோதிலும், திரிபுவாதத்துக்கு எதிராக வீறுடன் முன்னேறிய புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி பல பிளவுகளைச் சந்திக்க சண்ணே காரணமாக இருந்தார் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியிருக்கிறார்.
மணியம்,டானியல்,சிவதாசன் 

                                                     பிரேமலால், கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் 1972 இல் பிளவடைந்தபோது அவர்களது அரசியல் நிலைப்பாடு சரியாகவும் ஸ்தாபன அணுகுமுறை தவறாகவும் இருந்தது; தனது அரசியல் வறட்டுத்தனங்களை சுயவிமர்சனத்தோடு சண் ஏற்று ஜனநாயகப் பண்பைப் பேணியிருந்தால் அந்தப்பிளவைத் தவிர்த்திருக்க இயலும். அதன்பின்னராவது சண் வறட்டுவாதத்தைக் கைவிட்டு வெகுஜன அணிதிரட்டலுக்குரிய கட்சிக் கட்டமைப்பைப் பேணுவார் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப்போனது. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் அவர் "தொழிலாளி" பத்திரிகைக்கும் பிரசுரங்களுக்கும் எழுதிய ஆக்கங்கள் பல தடவை விவாதத்துக்கு உட்பட்டது. தமிழினம் தேசிய இனமல்ல எனத் தொடர்ந்தும் எழுதி வந்தார்; தவிர்க்கவியலாதநிலையில் 'தேசிய இனமாக வளர்ந்து வருகிறது' என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
தேசிய இனமல்ல என்பதனூடாக சுயநிர்ணய உரிமையை மறுப்பதில் அவர் பிடிவாதமாக இருந்தது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதுசார்ந்ததே; புறநிலை யதார்த்தம் குறித்த ஆய்வோ, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் மறுக்கப்படும் உரிமைகள் குறித்தோ அவற்றை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எந்தத் தேடலும் அவருக்கு அவசியமற்றதாக இருந்தது.
தர்மலிங்கம்,மணியம் 
அத்தகைய சூழலில் மூன்றாமுலகக் கோட்பாடு விவாதத்துக்கு வந்தது. பல சந்தர்ப்பங்களில் மாஒ சேதுங் மூன்றுலகக் கோட்பாட்டு அணுகுமுறையில் நாட்டுக்கும் நாட்டுக்கும் - மக்களுக்கும் மக்களுக்கும் - கட்சிக்கும் கட்சிக்கும் - இடையிலான உறவை அணுகியமை பற்றிச் சண் அறியாதவரல்ல. தேசிய இனப்பிரச்சனையில் மக்கள் நலன் பற்றி எந்தத் தேடலும் அற்று இருந்தது போலவே, சர்வதேச விவகாரங்களில் நிதர்சனத்தைக் காணத்தவறி, தன்னைப் பெரும் புரட்சியாளராகக் காட்டும் அவதியில் மூன்றாம் உலகக் கோட்பாட்டுக்கு எதிராக கருத்துரைக்க முனைந்தார். முன்னர் இதுபோன்ற கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் போலன்றி உட்கட்சிப் போராட்டமாக தொடர்ந்து விவாதித்து இறுதியில் சிறப்பு மாநாடு வரை போராட்டம் உச்சம்கண்டது. தமிழ் உறுப்பினர்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றுலகக்கோட்பாட்டை ஏற்றனர்; ஓரிருவர் தவிர்ந்த ஏனைய சிங்கள உறுப்பினர்கள் சண் தலைமையைச் சரியென ஏற்றனர். ஆயினும், மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பதாக பகிரங்கப்படுதுவதில்லை என முடிவானது.
அமிர்தலிங்கம் ,மணியம் 
தன்னிச்சையாக இயங்கும் தனது இயல்புப்பிரகாரம் கட்சி முடிவைமீறி சண் மூன்றுலகக் கோட்பாட்டைக் கட்சி எதிர்ப்பதாக அறிக்கைவிட்டார். இதன்பின்னரும் அவர் கூட்டு முடிவை முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்ற முடிவை எட்டிய நிலையிலேயே, அவரிலிருந்து வெளியேறி "இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது)" உதயமானது. சண் தொடர்ந்து இயங்க இயலாத முடக்கத்துக்காளானார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முன்னெப்போதும் இல்லா அளவில் இந்தப் பிளவு அவரைப் பெரிதும் பாதித்தது. மணியம் இப்படித் துரோகம் செய்துவிட்டாரே என ஆதங்கப்பட்டதும் மெய். கோட்பாட்டையும் நடைமுறையையும் மீறி ஒரு விசுவாசத்தை அவரால் எப்படி எதிர்பார்க்க இயலுமாயிற்று? உண்மையில் அப்படியொரு போர்க்குணமிக்க உறவுப்பிணைப்பு சண்-மணியம் இடையே இருந்தது. சாதித் தகர்ப்புப் போராட்டத்திலும் தொடர்ந்து கட்சியைக் கட்டிவளர்ப்பதிலும் மணியம் காட்டிய உறுதியிலேயே சண்ணின் தலைமை ஆட்டங்காணாமல் இருந்தது. நடைமுறை சார்ந்த பிரயோகத்தில் சண்ணுடைய வரட்டுவாதத்தை மீறிச் சரியான பிரயோகத்தை முன்னெடுக்க ஏற்றதாக செயற்படும் அதேவேளை, ஏனைய கோட்பாட்டு விவகாரங்களிலும், பிரசாரங்களிலும், பல்வேறு தொடர்பாடல்களிலும் சண்ணின் ஆளுமை கட்சிக்குப் பலமாக அமைவதை மணியம் புரிந்தவராயிருந்தார். அதுசார்ந்த உயர் மரியாதை சண் மீது அவருக்கு இருந்தது. இதன் காரணமாகவே மணியம் தனது எந்த வறட்டுத்தனத் தவறையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் தன்னோடு இருப்பார் என நம்ப வைத்திருக்கிறது.
மணியம் ,யோகநாதன் ,கதிரேசு 
தனிப்பட்ட உறவைவிடவும் மக்கள் நலனுடைய புரட்சிகரக் கட்சியைக்  கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் சண்ணிலிருந்து பிரிவது தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு வந்தார். அதிதீவிரப் புரட்சிகரச் சுலோகங்களை முன்வைத்து மக்களிலிருந்து பிரிந்துபோவதாயில்லாது 'மக்களிடமிருந்து மக்களுக்கு' எனும் மார்க்கத்தை இனி முன்னெடுக்க இயலும் எனக் கருதினார். அதற்கு அமைவாக கட்சிப் பெயரும் "புதிய ஜனநாயகக் கட்சி" என மாற்றப்பட்டது.
இத்தகைய புதிய பாணி என்பது அடிப்படையில் மார்க்சிய-லெனினிய-மாஒ சேதுங் சிந்தனை மார்க்கத்துக்குரியதே. முரண்பாடு என்பதை எதிர்நிலைக்குரியதாக மட்டும் பார்ப்பதிலிருந்து நட்பு முரண்பாடு என்கிற ஒன்றை அறிமுகம்செய்த மாஒ, "மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது" என்பதையும் பேசியவர்; வலதுசாரிப் பிற்போக்காளார் மிகமிகச் சிறுபான்மையினர்-கொம்யூனிஸ்ட்டுகளும் சிறுபான்மையினரே; இடைநிலையில் உள்ளவர்களே மிகப் பெரும்பான்மையினர், அவர்களை வென்றெடுப்பது குறித்த மாஒ சேதுங் சிந்தனை வழிகாட்டல் மூன்றாமுலகக் கோட்பாட்டிலும் வெளிப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு சண்ணிலிருந்து வெளியேறியமை உதவிகரமானது எனக் கூறுவார்.
எஸ் டி பண்டரநாயக்க ,சண் ,மணியம் ,சிவதாசன் 
ஆயினும் அவர் விரும்பிய புதிய பாணியிலான கட்சிக் கட்டமைப்பு வந்தமையவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்துள்ளது. அதனாலேயே ராசன், கீரு ஆகியோரிடம் சண்ணிலிருந்து விலகியது தவறு என்பதை அவர் கூறியிருக்கிறார். அவ்வாறானபோதும் என்னிடம் விலகலின் அவசியத்தை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தியமை என்பது அடிப்படையில் வறட்டுவாதம் கடந்த இத்தகைய சரியான பாட்டாளிவர்க்க கருத்தியலை நான் வந்தடைய வேண்டும் என அவர் கருதியமை கரணமாகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்புதிய கருத்தியல் மற்றும் மூன்றுலகக் கோட்பாடு வாயிலாக அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டமை பற்றி அடுத்த சந்திப்பில்.
(இங்கு இடம்பெற்றுள்ள படங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள-தமிழ்த் தலைவர்களுடன் மணியம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம் .அன்றைய வெகுஜன மார்க்கம் சண்முகதாசனால் முடக்கப்படாத ஆரோக்கியமான சூழலின் பேறு இது. போராட்ட வெற்றிகளின் பின் தானே சரியான கோட்பாட்டில் தலைமை தாங்குவதான அகங்காரம் அவரிடம் ஏற்பட்ட பின்னரே வறட்டுவாதியானார் ).