Saturday, September 15, 2012

தமிழ்ப் பண்பாட்டு வரலாறு: சில மீள் பார்வை


சில மீள் பார்வைக் குறிப்புகள்

                               "இரட்டைத்தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்" தொடரின் விவாதத்தை மேலும் புதிய தளமான இங்கு முன்னெடுக்கப்போகிறோம். எந்தவொரு முடிந்த முடிவான சித்தாந்தத்தையும் விலங்காக மாட்டிக்கொள்ளாத தோழர்கள் அங்கு அக்கறையோடு எதிர்வினையாற்றி வழிப்படுத்தியிருந்தது போன்றே இங்கும் என்னோடு உடனிருந்து விவாதித்து எமக்கான சரியான வழித்தடம் கண்டு பயணிக்க எந்தத்தடையும் இல்லை. எம்மை இவ்வழியே ஆற்றுப்படுத்தும் மார்க்சியம் எமது சமூகப் புறநிலை நிதர்சனத்தை புரிந்துகொள்ளவும், மக்கள் விடுதலையீட்டும் திசைவழி மாற்றவும் உதவுவதாயுள்ளதே அல்லாமல், எந்தவொரு தீர்க்கதரிசியின் முடிந்த முடிவான முன் கட்டளைகளின் பேரில் இயங்க வற்புறுத்தவில்லை.விவாதங்கள் விருப்புக்கு உகந்ததில்லை என அச்சங்கொள்பவர்கள் இருக்கவே செய்வர். அறிவுத்தேடல் என்பது செங்குத்துப் பாறையில் ஏறும் கடின முயற்சி எனும்வகையில் சிரமங்களுக்கு முகங்கொடுக்கத் துணிந்தவர்களே சிகரங்களைத் தொடவல்லவர்கள் என மார்க்ஸ் சொன்னதை மறவாதிருப்போம். எம்மைத்தான் ஏற்கனவே மார்க்ஸ்-லெனின்-மாஓ சிகரங்களில் கொண்டுவந்து அமர்த்திவிட்டார்களே,அதிலிருந்தாலே விடுதலை சித்திக்குமே, அதை நோக்கி மக்களை அறைகூவுவதற்கு ஒருப்படாமல் ஏன் விவாதங்களுக்கு எல்லாம் அழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என எரிச்சல்படும் தோழர்கள் இருக்கிறார்கள். விவாதிக்க வந்து ஏற்கனவே நம்பிய புனித முடிவுகளை மாற்ற நேர்ந்துவிடுமோ என அஞ்சுவர்.ஒரு கடும் ஆன்மீகப் பிரசங்கப் பீரங்கியையும் தீவிர நாத்தீக பேச்சாளரையும் நேருக்கு நேர் தர்க்க மோதலுக்கு ஏற்பாடு பண்ணி மக்கள் எது உண்மை என அறியக் கேட்போராய் இருக்கிறார்கள். மக்களுக்கு இருதரப்பிலும் மேலும் போதிய கருத்துவிளக்கம் வேண்டும்போல் இருந்திருக்கலாம்; மக்கள் முன் விட்டுக்கொடுக்காமல் சண்டப் பிரசண்டம் பண்ணி வீடு போன இருவரும் தெளிவாக மாறியிருந்தனர். ஆணித்தரமாக மாற்றுக்கருத்தை முறியடிக்க அப்படி விவாதித்தார்கள் அல்லவா, ஆட்களின் முன் விட்டுக்கொடுக்காவிட்டாலும், அடிமனம் அதிர்ந்து போனதால் ஆள்மாறாட்டம் நேர்ந்துவிட்டது. அவன் இவன் இப்போது இவன் அவன் ஆகிவிட்டார்கள். ஆன்மீகம் பேசியவன் நாத்தீகத்துக்கும் நாத்தீகம் பேசியவன் ஆன்மீகத்துக்கும் மாறிவிட்டனர்(பின்னாலே, தொடர்ந்து விவாதித்தால் இதையும் இழப்போமோ என்ற அச்சத்தில் விவாதக் களத்தைத் தவிர்த்திருக்கக் கூடும்; பின்னாலே கதை தொடர்ந்ததாக மேற்படி நாட்டார்கதையில் தகவல் இல்லை).இவ்வாறு அச்சங்கொள்ளும் ஆளுமைச் சிதைவு மார்க்சியர்களுக்கு ஏற்படாது. இயங்கும் களமும் காலமும் மாற்றங்களோடு புதுக் கோலம் பூணும்போது அது குறித்த விவாதம் அவசியம் என்பதை அவர்கள் அறிவர். ஏகாதிபத்திய ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ்த் தேசங்கள் சுதந்திரம் தவறிக் கெட்டிருந்த நிலை இன்று இல்லை. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய பாட்டாளிவர்க்கப் புரட்சியூடாக சோஸலிஷத்தை வென்றெடுத்த சோவியத் யூனியன் நிதர்சனமாயிருந்தபோது, தேச விடுதலைப் போராட்டம் சோசலிசத்தின் பகுதியாக இருந்தது;
 சோவியத்தின் தகர்வின் பின்னர் விடுதலை பெற்ற முன்னாள் குடியேற்ற நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தும் அமரிக்க மேலாதிக்கத்தின் சதியின் பகுதியாக இனத்தேசியங்கள் கையாளப்படும் யதார்த்தம் அரங்கேறியுள்ளது. அடிமைத் தளையினின்றும் விடுதலை பெற்ற வறுமையுடையதான புண்ணிய பூமியென்று கூறியவாறு மேலாதிக்கம் கொள்ளும் இந்தியா அமரிக்காவுக்கு நிகராக எமது சுதந்திரத்தைப் பறித்து தொடர்ந்தும் எமது நாட்டினுள் தன் சேறாக்கலில் அல்லாடும் மீன் களுக்கு வீசும் புதுப்புது வலைகளில் பலதரப்பினரும் மாட்டியவாறு காலம் நகர்கிறது.உலகின் எப்பகுதியையும் விட காத்திரமான போராட்டங்களையும் தியாகங்களையும் நல்கிய இந்தியக் கொம்யூனிஸ்ட் அமைப்புகள் இன்றும் வேறெந்த நாட்டையும்விட பெரியனவாயும் வலியனவாயும் இருக்கவே செய்கின்றன; இருந்துமென்ன மக்களைவிட்டுக் காத தூரம் ஒதுங்கியபடிதான். ஏன்? மக்களைச் சரியாகப் புரிந்துகொண்ட கோட்பாடுகளுடன் இல்லை. வர்க்கப் பார்வை எனும் வலிய ஆயுதத்தைப் பெற்றபோதும் சாதியமைப்புடைய இந்தியச் சமூகம் பற்றிய தெளிந்த பார்வை போதிய அளவில் எட்டப்படாமலே உள்ளது. தனிநபர்கள் இதுதொடர்பில் சில முன்னேற்றங்களை எட்டியபோதிலும் கட்சிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய படிதான். பெரும்பெரும் தத்துவ மேதைகளைக் கண்ட கட்சிகளும் நிலப்பிரபுத்துவத்துக்குரியதாக சாதியமைப்பைக் காணும் அவலம் தொடர்கிறது. இன்றும் சாதி இருப்பது நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாம்; நிலப்பிரபுத்துவத்துக்கு முன்னரே, புத்தர்காலத்தில் பேசப்பட்ட சாதி முன் தயாரிப்பாம். என்ன கொடுமை? சாதிப் பேய் வாராதிருந்தால் "மார்க்சே" என்று நிம்மதியாக வர்க்கம் பற்றிப் பாராயணம் பண்ணிப் பூசித்தே சோசலிசத்தைக் கண்டிருக்கமாட்டோமா?புரட்சிகர வர்க்க அணிதிரட்டல் மட்டுமே போதுமானதாக இல்லை. ஒடுக்கப்படும் தேசங்களினதும், ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதிகளினதும் கோரிக்கைகள்-தீர்வுகள் குறித்த தெளிவு அவசியம். சாதி-தேசங்களினுள் வர்க்கங்களுண்டு; அவற்றினுள் உள்ள பாட்டாளி வர்க்க நலனே முன் கவனிப்புக்குரியன. அனைத்து உழைக்கும் மக்களது ஒன்றிணைவுக்குத் தடையாக உள்ள சாதி-தேசப் பிரச்சனைத் தீர்வுக்கு அனுசரணையாக அவற்றின் சுயநிர்ணயம் குறித்த வரையறை வகுக்கப்படாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. இது எமது மண்ணுக்கு மட்டுமுரியதல்ல. இன்று உலகளாவிய பிரச்சனையாகியுள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் புரட்சிகர சக்தியின் கவனிப்புக்குரியதான காலத்திலேயே இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். புத்தம்புதிய சோவியத் உருவாக்கத்தில் வேறு அக்கறைகள் முன்னுருமை பெற்றமையால் இது கவனம்பெறாமல் போனது. சீன-சோவியத் தத்துவார்த்த மோதலில் திரிபுவாதம் குறித்த கோட்பாட்டுருவாக்கத்தை மாஓசேதுங் சிந்தனை மேற்கொண்டிருக்க வேண்டும். தவறிப்போயிருப்பினும், எமது வரலாற்று முன்னேற்றத்துக்கு சாதி-தேச நிதர்சனத்தில் சோசலிச முன்னெடுப்பு தொடர்பான கோட்பாடு உருவாக்கம் பெற அவசியம் ஏற்பட்டுள்ளது. தேசிய உணர்வு பாட்டாளி வர்க்கத்தையும் பற்றியுள்ள நிதர்சனத்திலிருந்து சோவியத் திரிபுவாதம் அறுபதுகளில் தோன்றிய சூழலை அணுகியிருப்பின் மாஓ சேதுங் சிந்தனை சோசலிச முகாம் தகர்வுறாமலே பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வுடன் தத்தம் தேச-சோசலிசக் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்பதற்கான கோட்பாட்டை( திரிபுவாதத்துக்கான கோட்பாட்டையும்) கண்டடைந்திருக்க இயலும். இது சாதி-தேசங்களினுள் புரட்சியின் இணைவோடு உள்ள தொடர்பாடல். தேசக் கட்டுமானம் எப்படி சோசலிச நிர்மாணத்துக்குரியதாகலாம் என்பதற்கு மாஒசேத்ங் சிந்தனை வழி காட்டியிருப்பின் எமக்கான பாதை தெளிவாகியிருக்கும். தவறினால் என்ன, சாதியமைப்பில் வர்க்க அமைப்பு மாற்றம் குறித்த எமது வரலாற்று அனுபவத்தை வர்க்கப் பார்வையில் மீட்டுக் கோட்பாட்டு உருவாக்கம் கொள்ளும்போது சாதி-தேசப் போராட்டம் வாயிலாக சோசலிச நிர்மாணத்துக்குரிய கோட்பாட்டையும் கண்டு அடைந்தவர்கள் ஆவோம். இந்த நோக்கத்தோடு எமது இந்த சமூக உரையாடலைத் தொடர்வோம். சாதிபேதங்களில் பந்திக்கப்பட்ட எமது சமூகத்தில் வரலாற்று இயக்கமே இருந்ததில்லை எனும் கருத்துப் பழங்கதையாகிவிட்டது. இங்கு சமூக மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சிவாயிலாக எட்டப்பட்டன என்பது போதிய கவனம்பெறவில்லை. இந்த அமர்வின் வாசிப்பில் அதனைப் பார்ப்போம். முன்னதாக, பண்பாட்டுப் புரட்சி இயக்கம் கட்டியெழுப்பட அவசியமுள்ளமையை வலியுறுத்தி, உண்மையில் அதனூடாக மேலெழும் வேலைப் பாணியாகவே இந்த உரையாடல் தொடரவேண்டும்.
 தேவை உணரப்படும்போது அமைப்பு கண்டிப்பாக உருவாகும்! புதிய பண்பாட்டு வெகுஜன இயக்கம் கவனம் கொள்ளவேண்டிய அம்சங்கள் சிலவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்( இது பூரணமானதில்லை; உருவாகும் புதிய பண்பாட்டு இயக்கமே இதனை முழுமையாக வரைந்து செயலுருக் கொடுக்க இயலும். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே):
1. தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும்.
 2. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை முறியடித்தல்
.3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்தலும் இனங்களிடையேயான நல்லுறவை வலுப்படுத்தலும்.
 4. சாதி ஒடுக்குமுறையைத் தகர்த்தல்.
5. பெண்ணொடுக்குமுறையைத் தகர்த்தல்
.6. உழைப்பின் உன்னதம் போற்றுதல்.
7. புதிய கல்விக்கோட்பாட்டை வகுத்து கற்றல்-கற்பித்தல் ஜனநாயக ஒழுங்கமைப்பை வென்றெடுத்தல்
.8. சுகாதாரம்-மருத்துவம் ஆகிய துறைகள் வணிகமயமாதலை முறியடித்தல்
.9. பொதுச்சேவையை மக்கள் நலநாட்டமுள்ளதாக விருத்தி செய்தல்.
10. விளையாட்டுத்துறை வணிகமயப்படுதலை முறியடித்து மக்கள் நலநாட்டமிக்கதாக்குதல்.
11. சிறுவர் பாதுகாப்பையும் உடல்-உள-ஆத்மீக விருத்தியையும் உத்தரவாதப்படுத்தல்.
12. தமிழ் நூல்கள், கலைகள், சினிமா போன்றவற்றின் பரவலில் தமிழ்நாடு-இலங்கை இடையே இருவழிப்பாதையை உத்தரவாதப்படுத்தல்.
                                               எமது சாதிய-வர்க்க சமூகத்தில் விழுமியப் பெறுமானங்கள் தலைகீழ் நிலைப்பட்டது. அதன்பேறே பஞ்சமாபாதகங்கள் பற்றிய புலம்பல். பயிரை மேயும் வேலியின் வளாகத்துள் எந்த விழுமியம் தன்னைத் தற்காத்துக்கொள்ள இயலும்? சாதிய-வர்க்க பேதம் தகர்த்து உருவாகும் புத்துலகில் எல்லோரும் உழைத்துண்ணும் உத்தமர் ஆவதற்கு அமை  வான புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!சேர்ந்து செயலாற்ற அவசியமான உரையாடலைத் தொடர்வோம்!....

Wednesday, September 12, 2012

தேடலுடன் ... கூடங்குளமும்.கிழக்கும்,சுயநிர்ணயமும்


  பாரதியின் நினைவை வலியுறுத்திய செப்ரெம்பர் 11 கடந்த ஒரு நாளின் பின்னரே இந்தச் சமூக உரையாடலுக்குக் குந்தியிருக்கிறேன்; வேகமாகப் பல சங்கதிகள் கடந்து போய்க் கொண்டிருக்கையில் 'என்னத்தைப் பேசி, என்னத்தைக் கண்டோம்' என்ற வெறுப்பே மிஞ்சியிருந்ததால் ஆற இருந்து எதுவும் பேச வரவில்லை. வேளாங்கண்ணி- பூண்டி மாதா கோயில்களுக்கு யாத்திரை சென்ற சாதாரண சிங்கள மக்களைத் தாக்கியதை ஈழத்தமிழருக்கான மாபெரும் பிரதியுபகாரமாக தமிழக தமிழ்த் தேசியர்கள் மார்தட்டிக் கூறும்போது, அந்த இனவாதச் சங்காரத்தின் முன்னே கையறு நிலையில் வேதனையை மட்டும் பெருமூச்சாக்கி சில எதிர்ப்புக்குரல்களுடன் ஒதுங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட ஜனநாயக சக்திகளைக் குறைகூற எதுவுமில்லை என்று புரிந்தது. புரிதலின் மறுகரையாய், இலங்கைத் தமிழர் மீதான இனச்சங்கார யுத்த முன்னெடுப்பில் சிங்கள முற்போக்கு சக்திகள் போதிய எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை எனக்குற்றம் சுமத்துவது எத்தனை அபத்தம் எனப் புரிந்தது. உண்மையில் அத்தகைய நல்லெண்ணங்கொண்ட பல சிங்கள ஜனநாயகர்கள் பேரினவாத அரசுக்கு எதிரான ஆக்கிரோசமான பதிவுகளைப் பல்வேறு களங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழ்-சிங்கள பாசிச சக்திகள் கை மேலோங்கி இருப்பது மெய்யாயினும், தற்காலிகமானது. வெற்று நம்பிக்கை அலட்டலில்லை என்பதைக் கூடங்குளம் மக்கள் உணர்த்தி நிற்கின்றனர். ஜனனாயக சக்திகள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் எத்தனை கனதியானது என்பதற்கு அவர்கள் நேர் உதாரணம். தலைமை தாங்கிய உதயகுமார் தவிர்க்கவியலாத நிலையில் சரணடைய முற்பட்டபோது போராடும் மக்கள் அவரைச் சூழ்ந்து ஆர்ப்பரிப்போடு குண்டுக்கட்டாய்த் தூக்கித் தம்மோடு எடுத்துச் சென்று பாதுகாத்து, போராட்டத்தையும் தொடர்கின்றனர். தன்னைக் காக்க மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவிச் செல்ல ஒரு தலைவர் உருவாகிய துன்பியல் தொடரப் போவதில்லை; மக்களுக்கான சரியான கோட்பாடு கண்டறியப்பட்டு ஏற்ற போராட்ட மார்க்கம் வகுக்கப்பட்டு முன்னேறும் போது தலைமைக்கும் புத்தூக்கமூட்டும் மக்கள் எழுச்சி இந்த உலகமயமாதலிலும் சாத்தியம் என்பதை மெய்ப்பிப்பதற்காகவே கூடங்குளம் மக்களுக்கான புரட்சிகர வணக்கங்களைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.  

 சரியான கோட்பாடு என்பதில் சுயநிர்ணயத்தை இன்று எவ்வாரு வரையறைப்படுத்துவது என்ற சங்கதி பிரதான இடத்தை எடுத்துள்ளது. முன்னர் இலங்கைத் தேசியம் மட்டுமே உ ள்பொருளென்று ஈழத்தமிழ்த் தேசியம் அதற்குட்பட்டிருப்பது சாத்தியம் என்பதை மறுதலித்தது உண்மையேயாயினும் விரைவில் தவறைத் திருத்தி தமிழ்த் தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் இலங்கைக் கொம்யூனிஸ்ட்டுகள் ஏற்பவராயினர். இன்றும் அதில் மாற்றமில்லை. பல கொம்யூனிஸ்ட்டுகள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை நூறு வருடங்களின் முன்னர் ஏகாதிபத்திய நேராட்சியில் குடியேற்ற நாடுகளாக நாம் இருந்த காலத்தில் பேசப்பட்ட அந்த வரையறை பெயரளவிலான சுதந்திரத்தை ஈட்டி, அதைப் பொருளுள்ளதாக்கப் போரடும் இன்றைய சூழலில் மாற்றத்துக்குரியது எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இடியப்பச் சிக்கலாக (பிட்டும் தேங்காய்ப்பூவும் போல) கலந்தே வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களை எப்படிக் கூறு போட்டுப் பிரிந்து செல்லும் உரிமை பேசப்போகிறோம்? நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உணர்த்தும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டாமா? இதன் பிரதிநிதித்துவம் கறாரான உண்மை எனக்கொள்ளத்தக்கது இல்லை என்றபோதும் முழுதாகப் புறக்கணிக்கத்தக்கதுமல்ல என்பதறிவோம். முஸ்லிம் 15, தமிழ் 12, சிங்களம் 8 எனும்வகையில் அமையும் பிரதிநிதித்துவம் கிழக்கில் தமிழ்ப் பெரும்பான்மை என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் முஸ்லிம் பெரும்பான்மை என்பதும் காணாமல்போய், கிழக்கு சிங்களமயப்படவுள்ள வாய்ப்பை முஸ்லிம் மக்கள் உணர்ந்த அளவுக்கு தமிழ்த் தேசியர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை(சம்பந்தர் கேட்டும் ஹக்கீம் வரவில்லை என்ற தலைகீழ் யதார்த்தம் சந்தர்ப்பவாத அரசியலாளர் விவகாரம்; இதில் சம்பந்தர் சரி ஹக்கீம் தவறிழைக்கிறார் என்பதும் பொருளல்ல. இரு சிறு தேசிய இனத் தலைவர்களைக் கடந்து கிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு நிதர்சனமாகாது தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், எது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அக்கறைக்குரியது). செய்யக்கூடாததைச் செய்வதும், செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பதும் கேடு விளைப்பதாகும் என்பது குறளில் வலியுறுத்தப்பட்டிருந்த ஓர் உண்மை. சிங்கள மக்கள் தத்தமது வாழிடங்களில் தமது வாழ்வாதாரங்களை வென்றெடுக்கப் போராடும் வகையில் நாம் உதவ இயலும். எமது நடைமுறையில் செய்ய வேண்டியதையும்-தவிர்க்க வேண்டியதையும் இனங்காண நாம் முயல்வதில் அது தங்கியுள்ளது. பிரிவினையால் தமக்கு கேடு நேரும் என்ற சிங்கள மக்களது அச்சத்தைப் போக்கி, அதேவேளை வடக்கு-கிழக்கில் எமது சுயநிர்ணயத்தை வென்றெடுக்க சிங்கள மக்களையும் ஏற்புக்கொள்ளவைப்பதற்கு பிரிவினையற்ற சுயநிர்ணயக் கோட்பாடு குறித்த விவாதமே இன்று அவசியமாகிறது. வடக்கை மட்டும் பிரிப்பதா, கிழக்கின் தமிழ்ப் பகுதியை சேர்த்துக்கொண்டு பிரிவதா(ஊடறுத்து நிற்கும் முஸ்லிம்-சிங்களக் கிராமங்களை என்ன செய்வது), தென் கிழக்கு முஸ்லிம் மக்களை பிரிந்துபோக அனுமதிப்பதாயின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களின் நிலை என்னாவது எனக்கேள்விகள் ஆயிரமுண்டு. சுயநிர்ணய விவாதத்தை சிங்கள-முஸ்லிம் முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுப்பதிலேயே இவற்றுக்கான தீர்வுகள் தங்கியுள்ளன. இல்லாமல் யூக்கோஸ்லவாக்கியா, திமோர், சூடான் போல ஏகாதிபத்திய வேட்டைக்காடாக இந்த இலங்கை மண்ணை ஆக்கப்போகிறோமா? தொடரும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனவாத சக்திகளின் முன்னே முற்போக்கு சக்திகள் கையறுநிலையில் இருப்பது நீடிப்பின் அந்த அச்சுறுத்தலின் படிப்பினையையும் கண்டுதான் திருந்துவோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறாகினும், இன்று முன்னெடுக்கும் ஆரோக்கியமான விவாதமும் அதுசார்ந்த ஒன்றுபடலும் அழிவின் கொடூரத்தையாவது குறைக்க ஏதுவாகும். அந்த நம்பிக்கை இல்லாமல் இல்லை. சில சிங்களக் கட்சிகள் வெளியிட்டுள்ள "மக்களைப் பிளவுபடுத்தும் இனவாதத்தை தோற்கடிப்போம்" என்ற துண்டுப்பிரசுரம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவுள்ளது; தெற்கில் முஸ்லிம் பள்ளிவாசல்கள்மீது சிங்கள இனவாத சக்திகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை  வன்மையாகக் கண்டித்து அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அறைகூவல்விடுத்துள்ளது.  இனவாதத்தைக் கடக்க எத்தனிக்கும் நேசசக்திகள்  நாம் கோரும் சுயநிர்ணயம் குறித்த விவாதத்தில் இணைவர் என நம்ப இடமுண்டு. "ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி, சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி".