Tuesday, June 19, 2012

மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் " மிருச்சகடிகம்" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் -






மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் " மிருச்சகடிகம்" நாடகத்தை  முன்னிறுத்திய ஒரு தேடல்  - ந.இரவீந்திரன்









                            "மானுடம் வென்றதம்மா" - கம்பராமாயணத்தில் வெளிப்பட்ட இந்த முழக்கத்தை முன்னிறுத்தி ப.ஜீவானந்தம், கவியுள்ளமொன்று பொதுமை நாட்டம் கொள்ளும் பாங்கை வெளிப்படுத்தியிருப்பார். அநீதி ஒழிக்கப்பட்டு நீதியின் வெற்றிபற்றிய அக்கறை எப்போதும் இருந்து வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சமூகமுறைமை நிலைநிறுத்தப்பட்ட சூழலில் கம்பர் இந்த விருப்பைக் காட்டுவார். இதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னர்கூட மானுடத்தின் மேன்மைக்கான அவா மேலோங்கி வந்ததைக் காணவியலும். இந்த "கூட" அழுத்திச் சொல்லப்படக் காரணமுண்டு. அப்போதுதான் ஆதிக்கம்பெற்ற மருதத் திணை ஏனைய திணைகளை வென்றடக்கி, ஏற்றத்தாழ்வுச் சமூக முறை நிதர்சனமாக அடிகோலி இருந்தது. அதனைச் சாத்தியப்படுத்திய "வம்ப வேந்தரின்" புதுமைச் சாதனை பாடிப்பரவப்பட்டபோதே,  "எவ்வழி நல்வழி ஆடவர், அவ்வழி வாழிய நிலனே" என்ற அவ்வையின் குரலும் ஒலித்தது. ஆட்சியாளரின் வேறெந்த திறனையும் முன்னிறுத்துவதைவிடுத்து "நல்வழி" வலியுறுத்தப்படும்போது, மானுடம் மேன்மைபெறும் மார்க்கம் மனம் கொள்ளப் படுகிறது எனப் புரிதல்கொள்ள இயலுமாகிறது.
நல்வழிப்பட்ட ஆட்சி குறித்த வள்ளுவரின் வரையறையில் அதிசயிக்கத்தக்கவண்ணம் மக்கள் நலநாட்ட அரசுக்குரிய பண்புகள் மேலோங்கியிருக்கக் காணலாம். நியாயமான வரியைக் கடந்து கூடுதல் அபகரிப்பைச் செய்யும் அரசை வேலேந்திக் கொள்ளையடிக்கும் வழிப்பறிகாரர் என்றே அடையாளப்படுத்துவார் வள்ளுவர். அல்லற்பட்டு ஆற்றாது அழும் மக்களின் கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தும் என்பார். பின்னாலே வணிக ஆதிக்கத்தைத் தகர்த்து விவசாயத்துக்கான அரசியலுக்கு அரசை மாற்றுவதில் பக்திப் பேரியக்கம் மக்களை அணிதிரட்ட ஏற்றதாக  அல்லற்பட்ட மக்கள் பற்றிய வள்ளுவர் குரல் அமைந்தது எனலாம்.
மானுட நேசிப்புடனான கவியுள்ளங்கள் இவ்வகையில் மானுடத்தின் பொதுமை குறித்து அக்கறைகொண்டு பலவாறு கருத்துரைத்தபோதிலும் மனிதர் உணவை மனிதர் பறித்து உண்ணும் அவலம் மேவியதாய், உழைப்போர் பட்டினியில் வாட - அவர்களை வென்றடக்கிச் சுரண்டுவோர் உழைப்பில் பங்கின்றியே ஆடம்பரச் சுகபோக வாழ்வைக் காணும் அதேவேளை, அந்தத் தண்டச் சோறுண்போரே உயர்வானவர் எனப் போற்றும் தலைகீழ் விழுமியம் தோன்றி வளர்ந்த காலமாக இவை இருந்தன. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்" என்ற பாரதியின் குரலே தமிழில் முதன்முதலில் இந்தத் தலைகீழ் விழுமியக் கோலத்தை மாற்றும் புரட்சி அறைகூவலை விடுத்தது. அந்தப் புரட்சிப் பிரகடனத்தை வென்றெடுக்கும் நடைமுறைச் சாத்தியம் உருவாகி ஏறத்தாழ நூறாண்டு கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மானுடம் வெல்லுவதென்ன, மனுக்குலம் உட்படப் புல்பூண்டனைத்தையும் அழிக்கும் கோர யுத்த சாகரத்தில் உலகை நாசகாரப் படுத்துவதை முதலாளித்துவச் சுரண்டலாளர்கள் செய்வதிலிருந்து காக்கமுடியுமா என்ற கேள்வியே இன்று மேலோங்கியுள்ளது.
அதற்கான காரண காரியங்களைத் தேடுவதோ, தீர்வுக்கான வழிமுறையை நாடும் மார்க்கம் பற்றி அலசுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. தமிழில் வள்ளுவரின் குரல் சாத்தியப்பட்டபோது (கி.பி.நாலாம் நூற்றாண்டில்) சமஸ்கிருதத்தில் எழுந்த ஒரு நாடகத்தின் அரங்க அனுபவம் குறித்து இங்கு பார்க்கலாம். இந்த விவாதத்தினூடாக எமது எதிர்கால மார்க்கம் பற்றிய தேடலுக்கு விவாதத்தை தொடங்க இயலுமாயின் அதுவே போதுமானதாய் அமையும். 


                                 -- 1 --











சூத்திரகரால் கி.பி 300 – 400 காலப்பகுதியில் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழி நாடகம் 'மிருச்ச கடிகம்' இந் நாடகத்தின் சிறப்பம்சமாகக் கொள்ளப்படுவது அதன் இரட்டைக் கருக்களாகும். 


                                                                        "மிருச்சகடிகம்"என்பதன் பொருள் சிறிய மண்வண்டில் என்பது. நாடகத்தின் இறுதிக் காட்சிகளில்தான் அந்தச் சிறிய மண் வண்டில் வரும்; கதையின் தொடக்கத்தில் அதற்கான மாற்றம் ஏற்பட்டிருக்கும். பொன்னிற வண்டில் வைத்து விளையாடத்தக்க பிள்ளையையுடைய குடும்பமொன்று களிமண் விளையாட்டு வண்டிலையே பிள்ளைக்கு கொடுக்கத் தக்க வறுமைநிலைக்காளான மாற்றம் தொடக்கத்தில் வரும். காட்சியில் பிள்ளை முன்னதாக வருவதில்லை. சூத்திரகரால் கி.பி. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது இந்த நாடகம். இதே சமகாலத்தில் முன்பின்னாக தமிழின் "சிலப்பதிகாரம்" காப்பியம் பிறந்தது. மிருச்சகடிகம் சமஸ்கிருத நாடகம் என்பது தவிர அதன் பேசுபொருள் சிலம்பு காட்சிப் படுத்தும் வாழ்க்கைக் கோலங்களிலிருந்து எவ்வகையிலும் வேறானதல்ல.
சாருதத்தன் என்ற வணிகன் செல்வச் செழிப்போடு இசையிலும் ஆடல்பாடல்களிலும் மூழ்கித்திழைப்பவன்; வசந்தசேனை எனும் அழகிய கணிகை அவனை எதிர்கொண்டபோது இருவரும் காதல்வயப்படுவர். ஆயினும் இணைதல் வாய்க்காமல் பிரிவு நிகழும். வசந்தசேனையைக் காதல் வேண்டி அரசனின் மைத்துனன் துரத்தியவாறிருந்ததால் அப்போதைக்கு காதல் மனதோடு இருவரும் பிரிந்திருப்பர். அடுத்த காட்சியில் சாருதத்தன் வறுமையெய்துவான்; இசையும் ஆடல்பாடல்களும் அவன் மாளிகையினின்றும் நீங்கிப் போய்விடும். அரசனின் மைத்துனனின் துரத்தலிலிருந்து தப்பித்துவரும் வசந்தசேனை சாருதத்தன் வீட்டில் தஞ்சம் புகுவாள்; அவனின் வறுமை கண்டு, தனது நகைகளைக் கொண்டு இழந்த வணிக வாய்ப்பை மீட்கட்டும் என்றுகருதி, இரவில் தான் திரும்புவதால் கள்வர் பயம் எனக்கூறி அவற்றை அடைக்கலப் பொருளாக வைத்திருக்குமாறு கூறிக் களற்றிக் கொடுத்துவிட்டுச் செல்வாள்.
அதன் உள்நோக்கத்தைப் புரியும் வாழத்தெரிந்த பேர்வழியென்றால் முன்னதாக அவன் வறுமை எய்தியிருக்க மாட்டான்; வணிகத் தோல்வியைவிட, இல்லையென்று வரும் ஏதிலர்க்கு வாரிவழங்கியே அவன் வறுமையுற்றிருந்தான். இப்போதும் ஒன்றைப் பத்தாக்க முயலாது அடைக்கலப் பொருளாகவே பாதுகாத்து வந்தான். திருட்டைத் தொழிலாகக் கொண்டிராது, வசந்தசேனை வீட்டில் அடிமைப்பட நேர்ந்த தனது காதலியை மீட்கப் பணம் வேண்டித் திருடவரும் இளைஞன் "விதிவசத்தால்" சாருதத்தன் வீட்டில் திருடிய நகைகளோடு வசந்தசேனை வீட்டுக்கு செல்வான்.
அங்கே முன்னதாக வேலைக்காரியாயுள்ள தனது காதலியைக் கண்டு தனது நோக்கத்தை அவ்வாலிபன் கூறுவதை மறைவிலிருந்து வசந்தசேனை கேட்டிருப்பாள்; அவனோடு அவன் காதலியை அனுப்பும் எண்ணத்துடன் இருந்தவளுக்கு நகைகளைப் பார்த்ததும் சாருதத்தனின் நேர்மை புரியும். அதைவிட, களவுபோனதை மறைத்து அவன் மாற்று நகைகளைக் கொடுத்தபோது, அவனோடேயே தனது காதல் வாழ்வு இணைய வேண்டும் என்ற உறுதி வலுப்படும். ஒருகணிகைக்குரிய வாடிக்கையாளரை மகிழ்விப்பதிலிருந்து விலகி அவனோடு வாழ முடிவு செய்வாள். அதற்கு வாய்ப்பாக, அல்லது பிரச்சனையாக அமைவது அவளிடம் வந்துசேர்ந்த சாருதத்தனின் விலைமதிப்பற்ற மாணிக்கமாலை. அனைத்தையும் இழந்த கணவனை இன்னமும் அந்தக் கணிகையிடம் தான் இழந்துவிடவில்லை என்பதால், தலைவி அந்த மாணிக்கமாலையைக் கொடுத்து கணவனை மீட்க முயன்றிருந்தாள். தலைவி இப்போதெல்லாம் அவனோடு உரையாடுவதில்லை-வேலையாட்கள் வாயிலாகவே ஊடாட்டங்கள். மனவி தன் வறுமை நிலையைத் தொட்டுக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாய் மருகுவான் சாருதத்தன். இருந்தாலும் அந்தக் கணிகை மீதான காதலை வளர்ப்பதில் இந்தத் தலைவன் குறை வைக்கவில்லை.
அவனோடான அந்த உள்ளப் பிணைப்பைக் கொண்டிருந்த வசந்தசேனை மாணிக்கமாலையைத் தலைவியிடமே அனுப்பிவைப்பாள். இந்த நிலையில்தான் அந்தச் சிறிய மண் வண்டில் வரும். சாருதத்தனின் சிறிய மகன் முன்னதாக பக்கத்து வீட்டு சிறுவனின் பொன்னிற வண்டிலோடு விளையாடியது இன்றைய வறுமையால் இல்லாது போன நிதர்சனம் புரியாது, இந்தச் சிறிய மண்வண்டில் வேண்டாம், பொன்னிற வண்டில் வேண்டும் என அடம்பிடிப்பான். செவிலித்தாய் அவனை வசந்தசேனையிடம் அழைத்து வந்து தீர்வுக்கு வழி கோரியபோது, வசந்தசேனை தனது நகைகளைக் கொடுத்து பொன்னிறவண்டில் வாங்கச் சொல்வாள். அந்த நகைகளையும் மாணிக்கமாலையையும் மீண்டும் வசந்தசேனையிடம் கொடுப்பதற்காக தலைவி இறுதிமுயற்சி எடுத்தபோது இருவரிடையேயான உணர்ச்சிப் பரிமாறல் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தச் சிறுவன் தனது மகன் என்பதால் நகைகள் அவனுக்காகலாம் என வலியுறுத்துவாள், வசந்தசேனை. இது தமிழின் வீரயுகப் பாடலில்(சங்க இலக்கியத்தில்) ஏற்கனவே கண்டகாட்சிதான்; தலைவியின் மகனைப் பரத்தை தன் மகனாக ஆரத்தழுவுவது அங்கே பேசப்பட்டிருந்தது.
மனமாற்றம் பெற்று வசந்தசேனையின் உண்மைக்காதலுக்கு மதிப்பளித்த தலைவி வசந்தசேனையைக் கணவர் சென்றிருக்கும் பூந்தோட்டம்சென்று, அனைத்தையும் இழந்து பொய்விட்டதாய் மனச் சோர்வடைந்த அவனை மகிழ்விக்குமாறு கூறி அனுப்புவாள். அங்கு செல்லவேண்டியவள் தவறொன்றினால் அரசனின் மைத்துனனால் அனுப்பப்பட்ட வண்டிலில் சென்று மாட்டுப்பட்டிருப்பாள். தன்னை ஏற்க மறுத்த வசந்தசேனையை அக்கொடியவன் தாக்கியதில் மூர்ச்சையுறுவாள் வசந்தசேனை. அவள் இறந்துவிட்டதாகக் கருதி அவன் வெளியேறியபோது வந்துசேர்ந்த சருதத்தனின்மீது கொலைப்பழியைப்போடும் அரசனின் மைத்துனன் மரணதண்டனையைத் தெர்ப்பாக்கி நிறைவேற்றும் எத்தனிப்பில்.
இந்த அகவாழ்வுப்போராட்டத்தின்போது வெளியே புற வாழ்வுப்போராட்டத்தில் அடிப்படையான ஒருமாற்றம் ஏற்பட்டிருந்தது. வசந்தசேனையிடமிருந்து தனது காதலியை மீட்டுச் சென்று கொண்டிருந்தானல்லவா "திருட்டு" வாலிபன்; போகும் வழியில் அவன் அறியும் செய்தியால் காதலியைத் தனியே வீடுபோக அனுப்பிவிட்டுச் சமூகப் பொறுப்பேற்க அவன் கிளம்பியிருப்பான். அவனது உற்ற நண்பனான இடையரிளவல் அரசனால் சிறைப்பட்டிருப்பதான செய்திதான் அவனைச் சமூகப் பணிக்குக்கு மீட்டிருந்தது. இவனால் சிறை மீட்கப்பட்ட இடையரிளவல் தப்பிச் செல்லும் வழியில் சாருதத்தன் உதவியையும் பெற்றிருந்தான். இறுதிக்கட்டத்தின்போது கொடுங்கோல் அரசனை வீழ்த்தி ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தான். அவனது பணிப்பின்பேரில் "திருட்டு" நண்பன் சாருதத்தனின் புதிய பதவியை அறிவிக்கும்பொருட்டுவரும்போது கொலைக்களத்திலிருந்து மீட்கப்படுவான். கூடவே அரசனின் மைத்துனனின் கபடங்கள் அம்பலத்தில்; இறந்ததாக விடப்பட்ட வசந்தசேனையின் அசைவிலிருந்து உண்மையறிந்த துறவியொருவரால் காப்பாற்றப்பட்ட வசந்தசேனையும் கொலைக்களத்திற்கு வந்து உண்மைகளை வெளிப்படுத்தியிருப்பாள் - அவளையும் அவளூடாக சாருதத்தனையும் காப்பாற்றும் துறவியுங்கூட முன்னர் சாருதத்தனின் உதவியைப்பெற்றவர்தான். இப்போது மக்களும் கொடுங்கோலரசுக்கு எதிரான புதிய அரசுக்கு ஆதரவாக ஒருங்குதிரள்வர். எல்லாம் நலமே!
                                                  --2--


எவரும் எதிர்பார்க்கக்கூடியவாறு பல நூற்றாண்டுகளின் முந்திய இந்த நாடகத்தை இப்போது மேடையேற்றுவது அவசியமா என்ற கேள்வி எழவேசெய்துள்ளது. ஏப்ரல் மாத முடிவில் கொழும்பில் "மிருச்சகடிகம்" மேடையேற்றப்பட்டபோது, சொந்தப் பெண்டாட்டி அவ்வளவு ஆதரவாயிருக்க அவருக்கு இன்னொரு காதல் வேண்டிக்கிடக்கோ என்ற கேள்வியெழக் காணமுடிந்தது. சரி, அதைவிட்டுப்பார்த்தால் நாடகம் எப்படி என்ற போது "உண்மைதான் - அற்புதமாயிருந்தது" என்ற பதிலே வந்தது. இருவாரங்களின் பின்னர் நண்பர் சி.ஜெயசங்கரின் "மிருச்சகடிகம் நாடக ஆற்றுகையும் அதன்போது வெளியிடப்பட்ட பிரசுரம் ஆகியவற்றை முன்வைத்து..." என்ற விமர்சனம் "தினக்குரல்" பத்திரிகையில் வந்ததைப் பார்த்தபோதும் நண்பர்கள், இந்த விமர்சனங்களைக் கடந்து நாடகம் நன்றாய்த்தானே இருந்தது என்ற பதிலையே காணமுடிந்தது.
ஜெயசங்கர் முன்வைத்த விமர்சனத்தில் அடிப்படையான இரு அம்சங்களுண்டு. ஒன்று அரங்கியல் பிரச்சனை. நாடகத்தரப்பினரும் சரி, விமர்சனத்தை முன்வைத்த நண்பரும் சரி அரங்கியல் துறைக் கல்விப் புலம் சார்ந்தவர்கள். அவர்களைமீறி நாங்கள் மூக்கை நுழைப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அரங்கியல் நுட்ப விவாதங்கள் கடந்து ரசனை நிலையிலிருந்து நாம் பேசுவதில் தப்பிருக்காது. இந்த நாடகம் சமஸ்கிருதப் பிரதி என்கிறவகையில், சமஸ்கிருத அரங்கு பற்றிய பரிச்சயத்துடன் அல்லது அந்த மரபுகளை உள்வாங்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்க வேண்டும் - ஆற்றுகை கிழக்கு பல்கலைக் கழக மற்றும் விபுலானந்தர் கலைக் கல்லூரி நாடக கற்கை மாணவர்கள் பங்கேற்பு என்கிறவகையில் இந்த எதிர்பார்ப்பு சரியானதுதான். அதை அவர்கள் தமது கல்விக் கலந்துரையாடலிலும் பெற்றுக்கொள்ள இயலும். பொது ரசனை என வரும்போது சினிமாப்பாணியில் அமைந்துவிட்டது என்பது விமர்சகரின் குற்றச்சாட்டு. 
இப்போது எமது கவனிப்புக்குரியது, விமர்சகர் வெளிப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானது. அரங்க அரசியல், இனத்துவ அரசியல் என்கிற இரு தளங்களிலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. "போருக்குப் பின்னரான சூழலில் பெரும் பொருட் செலவில் உயர் கல்வி நிறுவனமொன்றின் அரங்கியல் மாணவர்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிருச்சகடிகம் நாடகம் ஈழத்துத் தமிழர்களின் நவீன அரங்க வரலாற்றில் ஒரு புறநடையாகவே காணப்படுகின்றது.ஏனெனில் ஈழத் தமிழரது நவீன அரங்கு பேராசியர் க.கணபதிப்பிள்ளை காலம் தொடங்கி இற்றைவரை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், விலக்கிவைத்தல்கள், விளிம்பு நிலைகளில் வைத்திருத்தல் என்பவற்றை கேள்விக்குட்படுத்தியும் மாற்றுத்தளங்கள் பற்றிய உரையாடல்களை முன்மொழிந்துமே இயங்கி வருவது வரலாறாக இருக்கிறது....கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத் தமிழர்களின் நவீன அரங்க வரலாறு உலகத்தின் புதுமைகளைத் தன்னகத்தே உள்வாங்கி இயங்கிவருவதுடன், புதுமைகளை உருவாக்கியும் அளித்திருக்கிறது என்பதும் யதார்த்தம்". 
இந்த அரங்க அரசியலில் நவீன கலைத்துவ மேன்மையைக் கடந்து சினிமாப்பாணிக்கு இந்த நாடகம் சென்றிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவதை ஏற்க இயலவில்லை. இங்கு சொல்லபடும்  வகையில் கணபதிப்பிள்ளை தொடக்கிவைத்த மரபின் தொடர்ச்சியான மற்றொரு புதுமையாகவே "மிருச்சகடிகம்" அரங்க ஆற்றுகை அமைந்திருந்தது. இதனைச் சினிமாப் பாணியெனக் கொச்சைப்படுத்திவிட முடியாது. அப்படித்தான் அந்தக்கலப்பு உள்ளது என்றால் மேன்மையான கலைத்துவ எழுச்சியைப் பாதிக்கும் வகையிலாய் இல்லாமல் செழுமைப்படுத்தும் அளவிலேயே அமைந்துள்ளது. இந்த இணைவு(சினிமாத் தாக்கம் கலைத்துவத்தைச் சிதைக்காமல் நாடக அனுபவத்தை மேன்மைப்படுத்தல்) புதுமையின் பாற்பட்டதே. 
இதற்கு தமிழக அரங்கியலாளரான வெளி ரங்கராஜன் கருத்தைத் துணைக்கு எடுப்பது அவசியமாகின்றது. அங்கு நவீன நாடகத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதுகுறித்த கருத்தாடல் ஒன்று வெளி ரங்கராஜன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன்போது இக்கருத்தை அவர் முன்வைத்தார்; தி.மு.க. எழுச்சியுற்றுவந்த ஐம்பதாம் ஆண்டுகளில் நாடக மேடைகளை உச்ச அளவில் பயன்படுத்திக்கொண்டனர். அந்த நாடகங்களின் பெரும்பகுதி அவர்களது கொள்கைவிளக்க உரைவீச்சுக்களாயே இருந்தன. நாடக அர்ங்கைப் பேச்சு மேடையாக்கியதற்கு மறுதலையாக, அரசியல் பிரசார மேடையை ஒருவகை நாடகப் பாங்குக்குரியதாக்கிக் கொண்டனர்; அதுவரை ஒரேயிடத்தில் நின்று பேச்சாளர் உரையாற்றுவது என்ற மரபை உடைத்துக்கொண்டு, அவர் உணர்ச்சி வேகத்துக்கு அமைவாக அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து பேசி நாடக அனுபவத்தை உணர்த்தும் பாங்கு ரசிக்கத்தக்கதாயே இருந்தது. இரு(நாடக, பேச்சு) அரங்கங்களின் தனித்தனியேயான புனிதங்களை ஒரு தேவையின் நிமித்தம் உடைத்துக்கொண்டு மக்களை ஈர்க்க முடிந்தமை கவனிப்புக்குரியது; அதனின்றும் நவீன அரங்கியலாளர் கற்றுக்கொள்வது அவசியம் என்பது வெளி ரங்கராஜன் கருத்தாகும். 
அன்றைய சினிமாக் கலையிலும் திராவிடர் இயக்கத்தினர் பாரிய தாக்கத்தினை  ஏற்படுத்தியிருந்தனர். முன்னதாக கூத்துப்பாணியின் தாக்கம் சினிமாவில் அதிகமிருந்து, ஒரே பாட்டுக்கச்சேரியாக இருந்த பண்பை மாற்றி சினிமாவையும் பேச்சு மேடை போலாக்கிக் கொண்டனர். ஐம்பதுகளின் முடிவிலிருந்து எழுபதுகளின் தொடக்கம்வரை தமிழ்கூறு நல்லுலகின் ஒலிபெருக்கிகள் எங்கும் பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனங்கள் தூள்கிழப்பியிருந்தன. புதிய சினிமா நடிகன் ஆவதற்கான பிரதான பயிற்சிக்குரியதாக இந்த வசனங்களைப் பேசிக்காட்டுவது அவசியமாயிருந்தது. இந்த வசனங்களைப் பேசிநடித்த சிவாஜி கணேசன் சினிமா ஊடகத்தையே புரிந்து கொள்ளாமல் நாசப்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக நேர்ந்தது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை மீட்டது மிக முக்கிய திறனாய்வு ஆளுமையான கா.சிவத்தம்பி என்பது கவனிப்புக்குரியது. இலக்கியத்தில் அழகியல் வாதத்துக்கு சரியும் அவரது திறனாய்வுக் கருத்துக்கள் வெளிப்பட்ட போது, பொதுவாக தமிழ்ச் சினிமா குறித்தும் குறிப்பாக சிவாஜி கணேசன் மறைவின் போது அந்தக் கலை ஆளுமை குறித்தும் கா.சி. எழுதிய கட்டுரைகள் வீச்சுடையனவாக இருந்தன. எண்பதுகளின் அழகியல் வாத அலை இலக்கியத்துறை விமர்சனத்தில் அவரை ஆட்டம் காணச் செய்தபோதிலும், அரங்கியல் தளத்தில் அவரை அசைக்க இயலவில்லை என்பதை சினிமா குறித்த அவரது ஆய்வுகள் காட்டின. தமிழ்ச் சினிமா வளர்ச்சியில் தமிழ்க் காப்பிய மரபினதும் பார்சி நாடகக் கலை மரபினதும் தொடர்ச்சி தாக்கம் புரிவதை விளங்கிக்கொள்வது அவசியம் எனபதை இதன்போது சிவத்தம்பி வலியுறுத்திருந்தார்.
மறுதலையாக, நாடக அரங்கின்மீது சினிமா அதன் சாதகமான பாதிப்பை ஏற்படுத்தமுடிந்தால் அரங்கப்புனிதம் எதுவும் சிதைந்துவிடப் போவதில்லை; செழுமைப் படுத்துவதாயே அந்தத் தாக்கம் கொள்ளத்தகும். "மிருச்சகடிகம்" அரங்காற்றுகையில் இருந்திருக்கத்தக்க சினிமாவின் தாக்கம் என்பது அத்தகைய புதுமைக்கான பரிமாணத்துக்குள் மட்டுப்பட்டு விடத்தக்கதே. காட்சிப் படிமங்களும், நடிகர்களின் உடல்மொழியும் முழுமையான அரங்க அனுபவத்துக்குப் பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தி, இக்கலைப்படைப்பு எத்தகைய வாழ்வனுபவத்தை ரசிகமனங்களில் ஏற்படுத்த வேண்டுமோ அதற்குரிய அளவில் வெளிப்பட்டன. சினிமாத்தனமான மலினம் ஏற்பட வாய்ப்புள்ள கணிகையான வசந்தசேனையின் பாத்திரமேற்று நடித்த மாணவியின் ஒவ்வொரு அசைவும் நளினங்களும் உரையாடலும் அற்புதமான கலை அனுபவங்களாய் அமைந்து நாடகப் பிரதி வெளிப்படுத்த முனைந்த வாழ்வனுபவத்தை ரசிகர்களிடம் தொற்றவைப்பதாகவே அமைந்திருந்தது. இதைப் பார்வையாளர்கள் விதந்துரைப்போடு சொல்லிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. அவ்வாறே "திருடனாக" பாதிரமேற்றவர் வெளிப்படுத்திய உடல்மொழிகளும் எவ்வகையிலும் மிகைப்படாமல்(அல்லது சினிமாத்தனமாயில்லாமல்), அளவோடு சொல்லவேண்டியதைச் சொன்னதாகவே அமைந்திருந்தது. அரசனின் மைத்துனன், சாருதத்தன்-அவனது அணுக்கத்தொண்டனான பிராமணன்(இவரது பேச்சு சிலவேளைகளில் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக அமந்திருந்தது) ஆகியோரும் அடுத்தநிலையில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். சொன்னாற்போல, சிறிய மண்வண்டிலோடு விளையாட்டுக் காட்டி, படைப்பின் மையக்கருவாக இருந்த வாழ்வில் "விதியின்" விளையாட்டை வெளிப்படுத்தவேண்டிய அளவோடு உணர்த்தி நடித்த பாடசாலைச் சிறுவனும் பாத்திரம் அறிந்து போடத்தக்க வேடம் பூண்டிருந்தமையும் பார்வையாளர்களது கவனத்தை ஈர்ப்பதாக அமந்திருந்ததைச் சொல்லமறந்துவிட முடியாது. தவிர, ஒவ்வொரு பாத்திரத்துக்குமுரியவர், அந்த அரங்கு வெளிப்படுத்த முனைவதில் தனக்குரியதைப் புரிந்து கொண்டு இயங்கியிருந்தார்கள் என்பது அழுத்தி வலியுறுத்துவது வெறும் சம்பிருதாய பூர்வமான பாராட்டாக அமையாது.
உண்மையில் இந்த நாடகம் பற்றிப் பேசவேண்டும் என்ற தூண்டலை ஏற்படுத்துவதில் இந்த அரங்காற்றுகையில் பங்கேற்ற ஒவ்வொருவரது அர்ப்பணிப்பான பங்களிப்பும் காரணியாக அமைந்தது என்பது வலியுறுத்தப் படுவது அவசியம்.
என்னதான் அரங்கக் கல்வி உயர் நிறுவன மாணவர்கள் என்றபோதிலும், சமூக அக்கறையோடு இத்தனை தொகை மாணவர்கள் ஒருங்கு திரண்டு பொறுப்புணர்வுடன் இயங்கி இருக்கிறார்கள் என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தவிர இந்த வளம் எதற்காக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிப்புக்குரியது. அது சார்ந்ததாகவே ஜெயசங்கரின் அடிப்படையான விமர்சனம் அமந்திருந்தது. அது அழுத்தம் கொடுத்துக் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமே.

                                                                  --3--

இந்த நாடகம் ஏற்கனவே சிங்களத்தில் "மெட்டிக்கரத்தய" என சிறியமண்வண்டில் என்ற பொருள்பட 2000 ஆம் ஆண்டிலிருந்து மேடையேற்றப்பட்டு வருகிறது; அதன் நெறியாளர் சிங்கள அரங்கின் சமகால ஆளுமைகளில் ஒருவரான பராக்கிரம நெரியெல்ல. அவ்வாறு சிங்கள மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கப்பட்ட "மிருச்சகடிகம்" சமஸ்கிருதத் தலைப்போடு, பராக்கிரம நெரியெல்லவின் நெறியாள்கையில் தரப்பட்டுள்ளது. தமிழ் அரங்க ஆற்றுகைக்கு நிர்வாக நெறியாளராக தமிழ் அரங்கின் சமகால ஆளுமைகளில் ஒருவரான சி.மௌனகுரு திகழ்கிறார்..இந்த சிங்கள-தமிழ்க் கூட்டு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நாடக வாயிலான இணைப்பு கலாசார ஒற்றுமைக்கு வழிசமைக்கும் என நம்பப்படுவதாக நாடகம் தொடர்பிலான பிரசுரம் ஒன்று கருத்துரைத்துள்ளது. இது தொடர்பில் ஜெயசங்கர் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார். "உரிமைகள் பற்றிய நிலைமைகளுக்கும், விடயங்களுக்கும் விளக்கங்கள் காணமுடியாமல் பேசப்படுகின்ற கலாசார ஒற்றுமை என்பது எங்கனம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடியது? கலாசார சங்கமம் பற்றிப் பேசப்படுகின்ற பொழுதுகளில் எழுகின்ற கேள்விகளில் அடிப்படையானவை எவை? வித்தியாசமான பண்பாடுகளின் கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படாமல் கலாசார சங்கமம் முன்மொழியப்படுவதன் நோக்கம்தான் என்ன?" எனும் நியாயமான கேள்விகளை எழுப்புகிறார் ஜெயசங்கர்.

இந்த நாடக முயற்சியை மட்டும் பார்த்தால் கலையிலும் சிங்கள மேலாதிக்கத்துக்கு இடம் கொடுத்தது போன்ற தோற்றம் எழலாம்தான்; அவ்வாறன்றி, பராக்கிரம நெரியெல்லவின் தொடர்ச்சியான முந்திய முயற்சிகளையும் பார்ப்போமானால் இந்தச் சந்தேகம் அவசியமற்றது எனப் புரிந்துகொள்வோம். அவர் யுத்தகாலத்திலேயே தமிழ்க் கலைஞர்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். ஒருபிரதியை, தமிழில் சிங்கள நடிகர்களை வைத்தும் சிங்களத்தில் தமிழ் நடிகர்களை வைத்தும் மேடையேற்றி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றவர். தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து கொழும்பில் மேற்கொண்ட இதுபோன்ற முயற்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஜெயசங்கர் இந்த முயற்சிகளை அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன்.

பண்பாட்டு ஆக்கிரமிப்பு உணர்வோடு இயங்கியவரல்ல பராக்கிரம நெரியெல்ல. சிங்களக் கலைஞர்களின் நட்புணர்வைத் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் சமத்துவப் பண்பைக் காட்டுவதோடு, சிங்கள மக்களுக்குத் தமிழர் பிரச்சனைகளைத் தெளிவுபடுத்த முயற்சிக்கிறவர். இந்தக் குணாம்சம் இல்லாதிருப்பதே இலங்கையின் பெரும் சாபக் கேடாகும். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர்விடுதலை கூட்டணி என்பன தமிழர் மத்தியில் வெறும் இனவாதத்தை வளர்க்கும் அரசியல் யுத்தத்தினூடாக தமக்கான பாராளுமன்ற ஆசனங்களைப் பெருக்கினரே அன்றித் தமிழர் பிரச்சனைத் தீர்வுக்காக எந்தப் போராட்டங்களையும்  முன்னெடுத்தவர்களல்ல; அதோடு சிங்கள மக்கள் தவறான புரிதல் கொள்ள வாய்ப்பளித்து அங்கே தம்மைப்போன்று சிங்கள இனவாதிகள் ஆதாயம் பெற வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தனர். முப்பது வருட யுத்தத்தின் அரசியலும் இதேபோன்றே இருதரப்பு இனவாதிகளும் மக்களைப் பிளவுபடுத்துவதாய் இருந்ததன்றி வேறல்ல. இந்த ஆதிக்கக் கும்பல்களுக்கு தமிழ்-சிங்கள மக்கள் ஐக்கியப்படக் கூடாதென்பதே அடிப்படைக் குறிக்கோள். இதனைத் தகர்த்து இருஇன மக்களும் ஐக்கியப்படுவதை விடுதலையை நேசிக்கும் எவரும் வரவேற்றாக வேண்டும். அதனையே பராக்கிரம நெரியெல்லவும் மௌனகுருவும் இங்கே செய்துள்ளார்கள்.

கொழும்பில் இந்த நாடகத்தை முதன் முதலில் பார்த்த சிங்கள மக்கள் தம்மால் புரிந்துகொள்ள முடிந்ததாகக் கூறியதைக் கேட்க முடிந்தது. ஒரு அரங்கில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதே இன்று பெரும் மகிழ்வுக்குரிய அம்சம்; அதனூடாக பரஸ்பரப் புரிந்துணர்வுக்கு வர என்ன செய்யப்பட வேண்டும் என்பதைத் தேடுவது அவசியம். அரசியல் அரங்கில் உரிமைகுறித்து எழுப்பப்படும் செயல் ஒழுங்குக்கு இந்த ஐக்கியம் வலுச்சேர்க்குமே அன்றி, இனபுரிந்துணர்வு என்பது எவ்வகையிலும் காட்டிக்கொடுப்பாக மாட்டாது. தமிழ்த் தேசியம் ஆண்டபரம்பரை மமதையை வெளிப்படுத்துவதும், சிங்களப் பேரின வாதம் ஏனைய சிறு தேசிய இனங்களை ஆக்கிரமிப்புக் கொள்ள முனைவதும் இத்தகைய கலைஞர்கள் ஏற்படுத்தும் 'கலாசார ஒற்றுமையால்' முறியடிக்கப்படும் வாய்ப்பே அதிகம். ஒரு அரங்கியல் கலைஞரும் அத்துறையின் கல்வி இயலாளருமான ஜெயசங்கர், மக்களைப் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல்வாதிகள் போலன்றி, மக்களை ஒன்றிணைக்கும் உயர்ந்த கலையுள்ளத்தையே வெளிப்படுத்துவார் என நம்பலாம்.


                                                                       --4--

இனப்புரிந்துணர்வையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதை இந்த நாடகப் பேசுபொருள் எந்த அளவில் சாத்தியப்படுத்த வல்லது? சொந்த மனைவிக்கு துரோகமிழைப்பதும், கொடுங்கோலரசைக் கிளர்ச்சியில் வீழ்த்துவதை முனைப்பாக்காமல் அடக்கி வாசிப்பதும், ஏவலாளர்கள் மேல் சவாரி செய்யும் உயர்சாதி மனப்பாங்கை வெளிப்படுத்துவதும் என எதிர் விழுமியங்களைப் பேசு பொருளாக்கியுள்ள இந்த நாடகமா இனப்புரிந்துணர்வை ஏற்படுத்திவிடப் போகிறது என்ற கேள்வியை மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம் போலவேபடும். மாறாக, முதல் பார்வை அனுபவத்தில் இத்தனை உத்தம குணங்களைக் கொண்டிருக்கும் தலைவன் கணிகையை நாடுவதென்பது தவிர்ந்த ஏனைய அம்சங்கள் எதுவும் நெருடலாக இருந்ததில்லை. 
வணிக மேலாதிக்கம் நிலவிய அதே வேளை அதன் வீழ்ச்சியோடு நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் பெறவுள்ள மாற்றத்துக்கு சற்று முன்னதாக உள்ள காலமான கி.பி. நாலாம் நூற்றாண்டுக்குரிய கதை இது. வீழ்ச்சியுறும் வணிக ஆதிக்கத்தின் ஒரு குறியீடே சாருதத்தன் என்ற வணிகனின் வறுமையுறுதல் எனக் கருதலாம். செல்வச் செழிப்பின் மேட்டிமைப் பண்பின் வெளிப்பாடன்றி, ஏவலர்களுடனும் நட்பாகப் பழகும் பாங்கே நாடகம் முழுமையிலும் காணமுடிந்தது. கணிகையும் இலகுவாய் தனது அடிமைப் பெண்ணை காதலனுடன் அனுப்ப மனம் ஒப்புகிறவளாயுள்ளாள். 
ஆணாதிக்கம் என்கிறவகையில் மனைவியோடு பேச்சுவார்த்தையில்லாமல் கணிகையை நாடும் தலைவன், மற்றும் காதலை ஏற்க மறுக்கும் கணிகையை வன்முறையால் அடைய முயலும் அரசனின் மைத்துனனின் துரத்தலும் இறுதியில் கொலை செய்யக்கூடிய அளவுக்கு ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதும் என்பவை கவனிப்புக்குரியன. இவை கூட மறுவாசிப்புக்குள்ளாகும்போது மாறுபட்ட அனுபவங்களைத் தரக் காணலாம். 
வறுமை எய்திய நிலையில் அவனது பொறுப்பற்ற தன்மையின் மீதான தனது எதிர்ப்புணர்வைத் தலைவி பேசாது ஒதுக்குவதன் வாயிலாக வெளிப்படுத்துகிறாள். அவளது மாணிக்கமாலை தரப்படும்போது தன் இயலாமையை அவள் இடித்துரைப்பதாக தலைவன் மறுகுவதில் அவனது தாழ்வுமனப்பான்மை வெளிப்படக் காணலாம். அதற்கான மாற்றாக கணிகைமீதான காதல் அமைகிறது. இதன் மறுதலை நடத்தையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். மாதவி எனும் கணிகையுடனான காதல் வாழ்வில் பணம் அனைத்தும் தேய்ந்த தாழ்வுமனப்பான்மையோடு இருந்த கோவலன், சிறு ஊடலில் அவளைப் பிரிந்து மனைவி கண்ணகியை நாடிவருவான். வருபவனைத் தெருவில் நிறுத்தி நாக்கைப்பிடிக்கிற மாதிரிக் கண்ணகி நாலு கேள்வி கேட்காதது அன்றைய ஆணாதிக்க ஏற்புக்கு அமைவான காப்பிய வார்ப்பு; இன்றைய விழிப்புணர்வில் கண்ணகி குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவதைக் காணலாம். இந்த நாடகத்தில் முன்னதாக தனது வலிமையான எதிர்ப்புணர்வைத் தலைவி காட்டுகிறாள். 
அதுசரி, பிறகு எல்லாத்துக்கும் சேர்த்து கணவனை மகிழ்விக்க கணிகையைக் கூட்டிக்கொடுப்பவளாக அல்லவா காட்டப்படுகிறாள்? இங்கு ஆணாதிக்கத்துக்குரிய அம்சம் இருப்பது மெய்; அதைமீறி, கண்ணகியை விடவும் ஆளுமைக்குரிய பெண் என்பதை தலைவி உணர்த்தத் தவறவில்லை. கணிகை அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகி இழந்த அவனது வணிக வாய்ப்பை மீட்டுக் கொடுத்து, தலைவிக்குமான நம்பிக்கையையும் தருகிறவளாக இங்கு உள்ளநிலையில், அவளது உண்மைக் காதலைத் தலைவி ஏற்றுக் கொள்கிறாள். இந்தமீட்பின் பின்னர் தாழ்வுமனப்பான்மையிலிருந்து தலைவன் மீள உள்ள வாய்ப்பினால் கணிகையோடு மட்டுமன்றித் தலைவியோடும் அன்னியோன்ய வாழ்வை அவன் சாத்தியப் படுத்த இயலும். அன்றைய பரத்தைமையை ஏற்புக்குரியதாய்க் கொண்ட வாழ்முறை இப்படைப்புக்கு வெளியேயான விமர்சனங்கள் ஊடாக மாற்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்று. 
இதற்கு அப்பால் மனித உறவுகளிடையே அன்றைய சமூக வளர்ச்சி ஏற்பட்ட தன்மைக்கு அமைவாக உன்னதப் பண்புகளை வெளிப்படுத்துவதாக இந்த நாடகம் அமைந்திருப்பது அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டிய அம்சமாகும். அநீதிக்கு எதிரான போராட்டமும் அன்றைக்கான அளவில் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். இக்காரணங்களினாலேயே இந்த நாடகப் பிரதியை ஒரு இலக்கிய வடிவமாய் கதிரவேல்செட்டியார் தமிழாக்கியபோது, அதற்கு விபுலானந்த அடிகள் முன்னுரை எழுதியிருந்தார். இப்பிரதியின் நாடகக் குணாம்சத்தில் துண்டாக்கலுக்கான நவீனத்துவ வாய்ப்பிருந்ததால் ஜெர்மனிய நாடக மேதை பிரெக்ட் இந்த நாடகத்தை விதந்துரைத்தார்(இது குறித்து உரையாடலின் போது இக்கருத்தை மௌனகுரு கூறியிருந்தார்; மேல் விபரங்களை அவர் விளக்க வேண்டும்). தவிர சமூக நோக்கிலான எமது பார்வையோடு, அர்ங்கியல் நோக்கும் இணைந்த மேலும் வளரும் திறனாய்வுகள் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணரும் என நம்பலாம்.

நன்றி -புதுவசந்தம் 2012 

1 comment:

  1. மிக அருமையான கட்டுரை. பேராசிரியர் இரவீந்திரன் அவர்களுக்கு நன்றி
    ----------------------------------------------
    நந்தினி மருதம், நியூயாரக், 2012-07-04

    ReplyDelete