Sunday, October 21, 2012

ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்:


ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்: தொடரும் புரட்சிகர மரபுரிமை

ந.இரவீந்திரன்




ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைத் தொடரும் மரபுரிமையாகக் கூறுவது முற்றிலும் பொருத்தப்பாடுடையது; அதன்வழி நின்று தொடர்ந்து சிந்தித்துச் செயற்படுகிறவர்கள் நிறையவே உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் மதித்தவண்ணமாக, அந்த எழுச்சியின் வழிகாட்டலில் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்கிறவகையில் என் பதிவை இங்கு அழுத்தமாக முன்வைக்க அவசியமுள்ளது.
அந்தமார்க்கத்தின் இரண்டாம் சருக்கமாக அமையும் "புதிய பண்பாட்டுத் தளம்" சென்ற வாரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது; இன்றைய தினம் அதற்குரிய தனித்துவத்தோடு நினைவுகூரப்பட வேண்டும் என்பதால் அவ்வாறு 13ம் திகதியில் அது தொடக்கம் பெற்றது. தவிர, கால வளர்ச்சியோடு ஒக்டோபர் 21 எழுச்சியின் இன்னொரு பரிணாமமாக அமைவது "புதிய பண்பாட்டுத் தளம்". அன்று யாழ்ப்பாண மண்ணில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சி மார்க்கத்தின் படிப்பினைகளை இன்று நாடு பூராவிலும் உள்ள  ஒட்டுமொத்த அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தில் பிரயோகிக்க வேண்டியதாக உள்ளது. அதன்பேறாக, புதிய பண்பாட்டு வெகுஜன அமைப்புக்குரியதாக இன்றைய செயற்பாட்டுப் பாணி வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. தொடர்ச்சியுடனான இந்தப் பரிணமிப்புக் கவனிப்புக்குரியது.
"சாதிமுறை தகரட்டும்; சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற பதாகையின் கீழ் 1966 ஒக்டோபர் 21 அன்று அணிதிரண்ட புதிய சக்தியுடன் எனது இணைவு சுவாரசியமிக்கது; அப்போது நான் ஆறாம் வகுப்பு மாணவன். அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி மிகமோசமாக சாதிவெறிப் போலீசாரால் தாக்கப்பட்டதோடு அம்மார்க்கத்தின் வழிப்படுத்தலுக்கு பிரதான கருத்தியலாளராக இருந்தவரான கே..சுப்பிரமணியம் எனது ஊரிலும் இருந்துள்ளார். அப்போது அவரை நான் புரிந்து கொள்ளவோ சந்திக்கவோ இயலுமாயிருக்கவில்லை. தொடர்ந்து தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் என வலுப்பட்டு வந்த காலத்திலும் 'ஏதோ பயங்கரவாத' நடவடிக்கைகள் எங்கோ நடந்துகொண்டிருப்பதாகக் கருதும் மாணவனாகவே நான்.
உச்சநிலையில் ஒரு சம்பவம் என் ஊரோடும் தொடர்புபட்டபோது உயர்தர மாணவனாக இருந்தேன். மறுமலர்ச்சி மன்றத்தில் சமூக அக்கறை கொள்ளும் முதல் அனுபவம் பெறும் செயற்பாடுகள் இருந்தபோதிலும் சமூக மாற்றம் பற்றி எந்தப் புரிதல்களும் இருந்ததில்லை. அப்போது நிற்சாமத்தில் வெங்காயம் ஏற்றி விற்பனைக்கு பரிமாற்றும் சிறிய லொறி ஒன்றை வைத்திருந்த எமது ஊரவரைப் பொலீசார் பயன்படுத்தி நல்லப்பு என்கிற சமூகப் போரளியைக் கொலை செய்திருந்தனர்(வெங்காய லொறியைக் கண்டதும், ஏற்கனவே போராட்ட முனைப்பில் தேடப்படுபவராய்த் தலைமறைவாக இருந்த தோழர் நல்லப்பு தெரிந்தவர்தானே என்ற நினைப்பில் வெளிப்பட்டு வந்தார்; வரக் கண்டதும், உள்ளே பதுங்கி ஒழிந்திருந்த பொலீசார் குதித்து இறங்கித் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துக் கொலைபாதகம் புரிந்தனர்).
எங்கள் அளவில், ஒரு பயங்கரவாதியைக் கொல்வதற்கு எம்மூரவர் துணை போயிருக்கிறார்; சண்டியர்களான அவர்களால் இவர் விரைவில் தீர்த்துக்கட்டப் படுவார் என்ற பேச்சுத்தான் இருந்தது. அப்படி எதுவும் நடக்காததோடு, சிறிய அடிதானும் விழவில்லை என்பது அதிசயமாகப் பட்டதாயினும், சலனம் ஏதுமில்லாததால் விரைவில் மறந்தும் போனோம்(பின்னாலே கட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கேட்டேன்; அவர் அப்படிக் காட்டிக்கொடுத்தும் கூட எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தீர்கள் என்று. 'அவர் என்ன செய்வார் தோழர்; வியாபார ஊடாட்டத்தைத் தெரிந்துகொண்ட பொலீஸ் அவரை வெருட்டிப் பயன்படுத்தியிருக்கிறது என்பதைக் கட்சிக்கிளைக் கூட்டக் கலந்துரையாடலில் முடிவாய் அறிந்து கொண்டதால் அவருக்கு எதிராக எதுவும் பண்ணுவதில்லை என்று முடிவு செய்ததோடு, தொடர்ந்து நட்பைப் பேணிவந்தோம்' எனச் சொல்லக்கேட்டபோது உண்மையில் முன்னர் இவர்கள் பற்றி எவ்வளவு தவறான புரிதல்களுடன் இருந்துள்ளேன் என்று வெட்கப்பட மட்டுமே முடிந்தது).
ஓரிரு வருடங்களில் மார்க்சியத்தைக் கற்றுக்கொண்ட போதிலும் அவர்களோடு இணையும் நோக்கம் இருந்ததில்லை; மார்க்சிய வழிப்பட்டதாக அல்லாமல் வெறும் சாதியச் சண்டித்தனம் புரிந்தவர்கள் என்ற கருத்தே எங்களிடம் இருந்தது. சண் தலைமைக் கட்சி என வந்த போதிலுங்கூட, முன்னர் தீவிரமாக இயங்கியவர்களாயினும் இப்போது இயக்கத்தில் இல்லை என்பதான நினைப்பேயிருந்தது. அப்படியொரு நாள், யாழ். நகர் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, சங்காணைச் சந்தைக்கருகே சண்முகதாசனின் கூட்டம் ஒன்று நடப்பதைக் கண்டு அதனைச் செவிமடுக்கச் சென்றோம். அவரது உரை முடிந்ததும் மூன்று கேள்விகள் எழுதிக் கொடுத்தோம். திருப்திகரமான பதிலாக அமையவும் மகிழ்ந்துபோனோம். மேடையிலிருந்து வந்தவரிடம் நேரே சென்று, அருகிலுள்ள எங்களூரில் இதுபோன்ற கொள்கை விளக்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோம்.
கட்சி அமைப்பு, செயற்பாட்டுப் பாணி, கட்டுப்பாடு என்பதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிந்தது. சண் எங்கள் ஊரை அறிந்ததும் அருகில் நின்ற மணியம் தோழரைக் காட்டி, இவர் உங்கள் ஊரில் முன்னர் இருந்தார்; இப்போது தொல்புரத்தில் இருக்கிறார்; அவரோடு தொடர்புகொண்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை முடிவு செய்யுங்கள் என்றார்.
மணியந்தோழர் நெறிப்படுத்திய வகையில் சங்கானைக் கிளையில் இணைந்து நாங்கள் செயற்பட்டபோது ஒக்டோபர் எழுச்சி மார்க்கப் போராளிகளோடு இரத்தமும் சதையுமாக ஒன்றித்து சமூகமாற்ற இயங்காற்றல் குறித்த நடைமுறைக் கற்றலைப் பெற இயலுமாயிற்று.
தமிழ்த் தேசியப் போராட்டம் உண்மையில் இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அமைந்திருக்க வேண்டியது. சாதியப் பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் தேசியப் போராட்டத்தின் ஒரு அங்கம் எனக் கொண்டு இதனை ஆதரிக்கும் மனப்பாங்கு தமிழ்த்தேசியர்களுக்கு இருக்கவில்லை; அவர்கள் உயர்சாதித் தேசியமாயே தமிழ்த் தேசியத்தை கட்டமைத்தார்கள் என்றவகையில், சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே இயங்கினர். அந்த வலதுசாரிப் பிற்போக்குத் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சியுற்று இடதுசாரித் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க முனைந்தவர்களும் போதிய அளவு ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தைக் கவனம்கொள்ளவில்லை. ஆயினும் தொடர் இயக்கம் வாய்த்திருப்பின் அவர்கள் கற்றுக்கொண்டு சரியான செல்நெறியை வகுத்திருக்க இயலும். மாறாக வலதுசாரிப் பிற்போக்கு ஃபாசிசமே தொடர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையையும் கையகப் படுத்தியிருந்தமையால் மக்கள் விரோதப் போக்கே தொடரலாயிற்று. ஆகவும், தமிழீழம் பெறுவது ஒன்றே இலட்சியம், இவ்வேளையில் சாதி முரண்கள் பற்றிப் பேச்செழக்கூடாது என்ற ஆணை பிறந்தது.
இதனைச் சாதியச் சக்திகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாயினர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை முன்வைப்பேன். வளக்கம்போல நிச்சாமத்திலுள்ள மூத்த தோழர் ஒருவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அது 90ம் ஆண்டு என்பதாக நினைவு. அந்தத் தோழர் மிகுந்த பதட்டமும் கோபமும் கொண்டிருந்தார். நடந்ததைச் சொன்னார். தெரிந்த ஒரு உயர்சாதியினர் மரணச் சடங்குக்கு அவர் சென்றிருக்கிறார். சுடலையில் இறுதிச் சடங்கு. ஒரு சாதிமான் 'அம்பட்டன் வா, வண்ணான் வா' என்று அறைகூவி தட்சணை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கோ தாங்க இயலாக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. மரணச் சடங்கு என்பதால் ஏறுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதைவிடத் துப்பாக்கி மட்டுமே சிந்திக்கவும் பேசவும் கூடிய காலம். 'பள்ளன் வா' என்ற போது, அங்கே சில வேலைகளைச் செய்தவரே அழைக்கப்படுகிறார் என்பது தெரிந்திருந்தும் இவர் போகிறார். கூவியழைத்தவர் திகைத்துப்போகிறார். இவர் மீது பயங்கலந்த மரியாதை அவருக்கு உண்டு; எவ்வளவு காட்த்திரமான சமூகப் போராளி இவர் என்பது அவருக்குத் தெரியும். 'என்ன, அண்ணை நீங்கள்' என்று தடுமாறிய போது, 'இல்லை, நான் பள்ளன் தானே, தரவேண்டியதைத் தா' என்றார். செய்வதறியாதவராகச் சில்லறைகளைக் கொடுத்தார். வாங்கிய காசை வேகமாக நிலத்தில் மோதி அடித்து, 'இந்த மாதிரிச் சாதி இழிவுபடுத்தல்கள் இருக்கக் கூடாது என்றதுக்காகத்தானே பத்துப் பதினைஞ்சு வருசங்களுக்கு முந்திவரை போராடின்னாங்கள்; இப்ப குளிர்விட்டுப்போய்த் திரும்பப் பழையபடி நடக்கலாம் எண்டு வாறீங்களோ' எனக்கூறிவிட்டு அவ்விடம்விட்டு அகன்றிருக்கிறார்.
எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே எதற்கு இந்தப் பழைய கதை என்று முணுமுணுக்கும் சில முனகல்களும் காதில் விழத்தான் செய்கிறது. வரலாற்றிலிருந்து கற்பதற்கு தவறிய விளைவைச் சுட்டிக்காட்ட இதனைச் சொல்கிறோமேயல்லாமல், தோல்வியைக் குதூகலிக்க முனையவில்லை. தமிழ்த் தேசியம் மக்கள் நலனிலிருந்து வேறுபாட்டு ஆளும் சாதித் தேசியமானதால் இந்தப் பின்னடைவு என்பதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்கிற வகையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியக் குரலை ஒடுக்கப்படும் ஏனைய தரப்பினரோடும் இணைத்து முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனையே "புதிய பண்பாட்டுத் தளம்" முன்னெடுக்க உள்ளது.
இதனைக் கூறும்போது மக்கள் விடுதலை என வந்த 1917 ஒக்டோபர் புரட்சியின் சோவியத் யூனியனும் இன்று காணாமல் போயிருக்கிறது தானே என்ற கேள்வியும் எழாமல் போகாது. அந்த ஒக்டோபர் புரட்சி மகத்தான சாதனைகளில் முக்கால் நூற்றாண்டு நீடித்து விடுதலைக்காகப் போடாடும் சக்திகளுக்குக் கலங்கரை விளக்காக விளங்கியது. பின்னர் ஏன் சோவியத் யூனியன் தகர்ந்து போனது என்பது இன்னொரு படிப்பினைக்கு உரியதும், தொடர்ந்து போராடும் சக்திகளுக்கு மற்றொரு பாடத்தை வழங்குவதும் ஆகும். ஒக்டோபர் புரட்சியின் நேர்-மற்றும் எதிர்ப் படிப்பினைகளையும் பார்க்க வேண்டும்தான்; அடுத்த அமர்வில் அதுபற்றிப் தொடர்வோம் ....

Saturday, October 20, 2012

சில நினைவுத் தடங்கள்


கவிஞர் இ.முருகையன் : சில நினைவுத் தடங்கள்
                                                                                                                                                   -ந.இரவீந்திரன்  

இது முருகையன் குறித்த ஆய்வு முயற்சியல்ல; விரிவான ஆய்வுக்கான தேவை உள்ள போதிலும், அவரைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அவர் குறித்த சில நினைவுகளை மீட்பதே இக்கட்டுரையின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்ட அவரது இறுதிக் காலத்தின் இரு தசாப்தங்களில் அவருடன் நெருங்கிப்பழக அமைந்த வாய்ப்பின் பேறாக இந்தப் பதிவினை வரைகிறேன்.
பேரவை 1974 இல் தொடங்கி "தாயகம்" சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியிருந்தது. ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் "தாயகம்" வெளி வராதது மட்டுமின்றி பேரவையும் காத்திரமாக இயங்க இயலாத முடக்கம் ஏற்பட்டது. தோழர் சண்முகதாசன் தலைமையில் வரலாறு படைத்த புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வரையறை கடந்து பிரசார முழக்கமாக்கிய நிலையில், வன்முறை வழிபாட்டுக்கு உரியதாக்கி, இடது திரிபு வாதத்துக்கு ஆட்பட்டது. அதன் பண்பாட்டு அணியாக தோன்றி இயங்கத் தொடங்கிய "தேசிய கலை இலக்கியப் பேரவை" இலும் இந்த இடது திரிபின் வெளிப்பாடு மேலெழவும், தொடர் முன்னேற்றம் தடைப்பட்டது. நெல்லியடி அம்பலத்தாடிகள், மட்டுவில் மோகனதாஸ் சன சமூக நிலையம் தொட்டு கொழும்பு அவைக்காற்றுக் கழகம் வரையான செயற்பாடுகளில் பேரவைக்குரியவர்கள் செயற்பட்டனரேயன்றி, பேரவை ஒன்றுபட்ட அமைப்பாக இயங்காது இருந்தது.
தவிர்க்கவியலாமல் 1978 இல் சண் தலைமையை நிராகரித்து "புதிய ஜன நாயக கட்சி" எனப்பின்னால் பெயர் பெற்ற பிளவடைந்த கட்சியுடன் தொடர் பயணத்தை தேசிய கலை இலக்கியப் பேரவை மேற்கொண்டது. வறட்டுவாத இறுக்கத்திலிருந்து மீண்டு வெகுயன மார்க்கத்தை வரித்து பேரவை இயங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படும் முனைப்பை கட்சி ஊக்கப்படுத்தியது. கட்சி செயலாளராக இருந்த கே.ஏ.சுப்பிரமணியம், இடையில் தொய்ந்திருந்த கைலாசபதி, முருகையன் போன்றோருடனான உறவைப் புதுப்பிப்பதில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் பேரவையின் தொடர் வேலைகளுக்கான கலந்துரையாடல்களிலும் செயற்பாடுகளிலும் பற்றுறுதியுடன் ஈடுபட்டனர். அந்த நிலையில் பாரதி நூற்றாண்டுவிழா (1982) வந்தமைந்தது.
பதின்ரண்டு தலைப்புகளில் மாதம் ஒன்றாக பாரதி ஆய்வுகளை முன்னிறுத்திய கருத்தரங்கு திட்டமிடப்பட்டது; முதல் கூட்டம் முருகையன் உரையாக அமைந்தது. ஆய்வுக் கட்டுரைகள் "பாரதி ஆய்வுகள்" எனும் தலைப்புடன் நூலாக்கப்பட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ஆய்வையும் தாங்கி 1983 இலிருந்து "தாயகம்" சஞ்சிகையை வெளியிடுவதற்கும் எதிர்பார்ப்பிருந்தது. நினையாப்பிரகாரமாய் கைலாசபதி 82 டிசெம்பரில் மறைந்துவிட முழுப் பொறுப்பையும் முருகையன் ஏற்க நேர்ந்தது. அவரும் பூரண சம்மதத்துடன் பேரவைத் தலைவர் எனும் பதவி நிலையில் உறுதியுடன் செயற்பட்டார். முன்னதாக ஐம்பதுகளின் எழுச்சியுடன் தோன்றி வளர்ந்த "முற்போக்கு இலக்கிய இயக்கம்" தனது அர்த்தமிழந்து கிட்டத்தட்ட செயற்படாத கோமா நிலையில் இருந்தமையால் முழுமையாக பேரவைத் தலைவராக முருகையனால் இயங்க இயலுமாயிற்று.
"பாரதி ஆய்வுகள்" என்ற தலைப்பில் மறைந்த கைலாசபதியின் பாரதி குறித்த கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்ட நிலையில் பேரவையின் பாரதி ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு "பாரதி: பன்முகப் பார்வை" என்ற பெயரை முருகையன் சூட்டிக்கொண்டார். அது நூலுருப் பெறுமுன்னதாக அதற்கான ஒவ்வொரு கட்டுரைகளும் தாங்கி வெளியான "தாயகம்" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் முருகையன் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகமுடிந்தது. இதன் போது ஒரு பண்பாட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கும் அவரது ஆளுமையை இனங்காண இயலுமாயிற்று.
அவர் அப்போது யாழ். பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராக வந்துவிட்டமையால் இந்தப் பொறுப்பை சிரமமின்றி மேற்கொள்ள இயலுமாயிருந்தது. அதற்கேயான கூட்டம் தவிர்ந்த வேளைகளிலும் அவரைப் பல்கலைக் கழக பணிமனையில் சென்று சந்தித்து வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்வோம். அவ்வேளைகளில் அவருடனான உரையாடல்கள் பலதும் பத்துமாக அமையும். ஒரு தடவை சிற்பக் கலை குறித்துக் கேட்டோம். முன்னர் வடிக்கப்பட்ட வடிவத்தை அப்படியே மரபு பிறலாமல் ஒருவர் புதிதாக செதுக்கும்போது, அது கலை ஆவதில்லை; புத்தாக்கத்துடன் ஒன்றை சிற்பி வடித்தால் மட்டுமே கலைஞனுக்குரிய பாத்திரத்தை வரிப்பவராவார் என்றார். எவ்வளவு செய் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டாலும் முன்னர் இருந்ததின் பிரதியெனில் தொழில் நுட்பத்தை வியக்கலாமே அல்லாமல் கலை எனக் கொண்டாட இயலாதென்பார். வடிவப் புதுமை குறித்து மட்டுமல்லாமல் பேசு பொருளின் புதுமை பற்றியும் அக்கறை கொள்வார் முருகையன்.
அவ்வாறு ஒரு தனி உரையாடலின் போது புதிது புனைதலின் அவசியத்தை வலியுறுத்திவிட்டு சொன்னார், இன்றைய தலைமுறையினரான நீங்கள் புதிய ஒன்றைப் படைத்து அதை ஆளுமையுடன் பிரகடனப்படுத்த இயலாது திண்டாடுகிறீர்கள் என்று. முற்போக்கு இலக்கிய எழுச்சியின் பிரதிநிதியான அவரிடம் அத்தகைய ஆளுமை பூரணமாய் அமைந்திருந்தது. ஒரு சம்பவத்தைக் கூறினார். தன்னுடைய கவிதை ஒன்றில் வந்த "கொச்சைத்" தமிழைச் சுட்டிக்காட்டி, இவற்றை தவிர்க்க வேண்டுமல்லவா என்பது அந்த நண்பரின் ஆதங்கம். முருகையன் அவருக்கு சொன்னார்,"அதை ஒரு ஆற்றல் மிக்க கவிஞர் கவிதையில் பாவித்திருப்பதால் இப்போது அது கொச்சைத் தமிழ் அல்ல, நல்ல சொல்தான்" என்று. "யார் அந்தக் கவிஞர்" என நண்பர் கேட்டபோது "கவிஞர் முருகையன்" எனப் பதில் கூறியதாக முருகையன் சொல்லிவிட்டு தனக்கேயுரிய முகம் மலர்ந்த சிரிப்பால் முற்றுப்புள்ளியிட்டார்.
படைப்பூக்கத்துடன் புத்தாக்கத்தை முன்னெடுக்கும் அவர் அதுபோன்றது எனக் கருதும் எதனையும் அங்கீகரித்துப் பங்கேற்கப் பின்னிற்பதில்லை. எண்பதுகளில் கம்பன் கழகம் ராமகாவியத்தை இலகுவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் விவாதம் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகளை நடாத்தியபோது, ஆரம்பத்தில் அவற்றில் பங்கேற்று வேடமிட்டு விவாதித்துள்ளார். கம்பராமாயணத்தை மக்கள் மயப்படுத்துவதாக அல்லாமல் பிற்போக்குவாத வியாபார உத்தியே மேலோங்கியுள்ளது என்ற பலரது கருத்தையும் ஏற்கவியலாமல் சிறிது காலம் அந்நிகழ்வுகளில் பங்கேற்றவர், எதிர்க் கருத்தாளர்களின் கூற்றுகளில் உண்மையிருப்பதை கண்டதும் தயக்கமின்றி பங்கேற்பதை நிறுத்திக் கொண்டார்.
இதுபோன்ற அவரது அவசர ஆதரவு நிலைப்பாடு ஒன்று அவரை மதிப்பீடு செய்வதில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்ணூறுகளில் யுத்தம் கொடூரமாய் மக்களைக் காவுகொண்டிருந்த நிலையில் போராடும் விடுதலைப் புலிகளை வாழ்த்தி இரு கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். இதை வைத்து அவரும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் புலிகளின் இலக்கியப் பிரதிநிதிகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை மறுத்து பேரவை அறிக்கையிடுவதை முருகையன் ஆதரித்தார். வெகுஜன மார்க்கத்தில் பேரவை முன்னேறி வந்தபோதிலும், சண் காலத்து இடது திரிபுவாத முனைப்பாக்கம் கட்சியிலும் பேரவையிலும் ஏற்பட்டு வருவது மெய்யாயினும், மக்கள் போராட்டம் என்பதிலிருந்து பல காத தூரம் விலகிய புலிகளின் முன்னெடுப்புகளில் உடன்படாத விடயங்கள் அனேகம் இருந்தன. சில அம்சங்களை வன்முறை வழிபாட்டு இடது அதிதீவிரப் பண்பினால் ஆதரித்தமையினாலேயே விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டதாகிவிடாது.
முன்னதாக எண்பதுகளில் மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்த அனர்த்தக் கொடூரங்களுக்கு எதிரான பேரவைச் செயற்பாடுகளில் முருகையனின் படைப்பாக்கங்களிலூடாக வெளிப்பட்ட பேரினவாத எதிர்ப்புக் குரலுடன் தொடர்புபடுத்தி இதனைக் காண வேண்டும். "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற பேரவை வெளியீடான ஒலிப் பேழை சிறப்புற அமைய ஏற்ற புதிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். அக்கொடூரங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடமிருந்து வெளிப்பட்டதே அல்லாமல் மக்களைப் பிரிந்த போராட்டக்குழுவை ஆதரிப்பவராக கருத்துரைக்கவில்லை.
அதற்கு முன்னதாக எழுதிய "வெறியாட்டு" நாடகமும் மக்களை விழிப்பூட்டுவதாக வடிவமைக்கப்பட்டதே அல்லாமல் புலிகளை வக்காலத்து வாங்கியதாக அமையவில்லை எனக் காண இயலும். இந்த நாடகப் பிரதி வெளியிடப்பட்ட அதே அரங்கில் அவரது வரலாற்றுப் பொருள்முதல் வாத அடிப்படையில் விஞ்ஞான நோக்குடன் மனிதகுல தோற்ற வளர்ச்சியைக் கூறும் "அவன், அவள், அது" எனும் கவிதைக் குறுங்காவியமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலுக்கு, அப்போது விஞ்ஞான ஆசிரியராக இருந்த நான் விமர்சன உரை ஆற்றுவது பொருத்தமாய் இருக்கும் எனக்கூறியிருக்கிறார் முருகையன்; அதனை ஏற்பாடு செய்த நண்பர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமையால் எனக்கு "வெறியாட்டு" நூலுக்கான விமர்சனமே தரப்பட்டது. அந்த விமர்சன உரையைப் பின்னர் எழுத்துருவாக்கி "தாயகம்" சஞ்சிகையில் வெளியிட்டபோது அதற்கு மாற்றுக்கருத்து எதையும் வெளிப்படுத்தியதில்லை. மக்களைப் பிரிந்த இனவாத யுத்தம் குறித்த விமர்சனம் உடையாதாக அப்பிரதி மீதான எனது வாசிப்பு அமைந்திருந்தது. என்னுடைய விமர்சனம் நன்றாக இருந்ததாகவோ வேறெந்தக் கருத்துகளையோ அவர் சொல்லாததுடன் மற்ற நூலுக்கு நான் விமர்சன உரை ஆற்றியிருப்பின் பொருத்தமாய் இருந்திருக்கும் என்பதையே மீளவலியுறுத்தினார்.
முருகையன் ஐம்பதுகளில் மொழிப் பற்றுடன் தனது கவிதை எழுத்தாக்கத்தைத் தொடங்கியவர். ஐம்பதுகளின் பிற்கூறில் முனைப்படைந்து வளர்ந்த முற்போக்கு இயக்கத்துடன் இணைந்து சமூக நோக்குடனான மக்கள் விடுதலைக்கான படைப்பாக்கங்களை ஆக்கியளித்தார். என் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தது , வாழ்த்துப் பாடி தலைமை தாங்கியது மட்டுமல்ல, எங்கள் வீடான "சத்திமனை" இல் யுத்த அனர்த்தங்களின் போது ஒரு மாதங்கள் தங்கி இருந்ததும் ,பரிமாறிய நினைவுகளும் என்றும் இனிமையானவை. அதன் மூலம் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பும் கிட்டியது. இறுதிக்காலத்தில் எவ்வகையிலும் இனவாதத்துக்கோ, மக்களைப் பிரிந்த வீர சாகசங்களுக்கோ துதிபாட அவர் முனைந்திருக்கவில்லை; மக்களை நேசிக்கும் மனப்பாங்குடன் போராட்டத்தை ஆதரிக்க முற்பட்டபோது ஒரு கவிக்குரிய அவசர கோலம் வெளிப்பட்டதாயினும் (அதுசார்ந்த விமர்சனத்துக்கு அப்பால்) என்றென்றும் மக்கள் கவியாகவே அவர் கொண்டாடப்படுவார்.
( 23-04 -1935 - 27 -06 -2009).

இங்கிருந்து எங்கே?


இங்கிருந்து எங்கே? சமகாலம் -கடைசிப் பக்கம் ஐப்பசி -1 -2012


                                                                                                                                                         -ந இரவீந்திரன் 

இன்றைய நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும், சிலரோ பலரோ ஒன்று கூடியுள்ள குழுக்களும் அமைப்புகளும் எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமலே எதையெதையோ செய்த வண்ணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்; எங்கே போகிறோம் என்று ஒரு எடுகோள் இருந்தாலும், எங்கிருந்து-எப்படிப் பயணிக்கிறோம் என்ற கரிசனையற்ற ஓட்டம் என்பதால், இடையிலேயே எங்குபோவது என்பதையும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடிக்கு இன்று நடந்துகொண்டிருக்கிற பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டமே தலைசிறந்த எடுத்துக்காட்டு. கனக்கப் படித்த அந்தப் பேராசியர்களும் விரிவுரையாளர்களுமே எங்கிருந்து எங்கு நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல்தான் தொடங்கி இருக்கிறார்கள். தங்களது சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடங்கியவர்கள் இன்றுதான் பொதுக் கல்வியையும் கவனம்கொண்டு, கல்விக்குத் தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை ஆரம்பத்திலேயே அவர்களுக்குள் இருந்திருக்க இடமுண்டாயினும் இதனையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற புரிதல் அப்போது இல்லாமல் போயிற்று. தாமுண்டு தம் படாடோபமுண்டு என்ற நினைப்பு முன்னாலே வந்து கண்ணைக் கெடுத்துவிட்டது. மக்கள் பிரச்சனையின் பகுதியாகத் தங்கள் பிரச்சனையை அப்போது காணத்தவறினர்.அதனை உணர்த்தியது அரசு சார்பாளர்கள்தான்; நானும் பல்கலைக் கழகப் பேராசிரியர், லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறேன்- இந்தக் கோரிக்கையெல்லாம் தவறு, உண்மையில் பாடசாலை ஆசிரியர்களது சம்பளமே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஊடகங்களில் ஊடாடவிடப்பட்டன. பின்னரே பொதுக்கல்விக் கோரிக்கை முன்னணிக்கு வந்தது. சரி, ஆசிரியர்கள் சம்பளக் கோரிக்கையை முன்வைத்தால் இந்தக் கனவான் குரல்கள் என்ன பேசும்? எத்தனை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போரடியபோதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? அதனை முறியடிக்க அதற்கு எதிராக எதை நிறுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.ஒருவர்க்கு எதிராக மற்றவரை நிறுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு மட்டும் உரியதல்ல; ஆதிக்கசக்திகள் அனைத்தும் கையாளும் மலினப்பட்ட தந்திரோபாயந்தான். தற்போதைக்கு எமது அக்கறை எங்கிருந்து தொடங்குகிறோம் என்ற புரிதலின்மையால் ஏற்படும் இடர்ப்பாடு பற்றியது என்பதால் அது குறித்து அலசுவோம். இங்கிருக்கிறோம் எனும் புரிதலைத் தனி நபர் கண்டுகொள்ளாதிருப்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல; மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடுகிறோம் என்று செயற்படுகிற அமைப்புகளேகூட பிரச்சனையின் மையம் எங்கிருக்கிறது என்ற அக்கறையற்று எதையாவது முன்வைத்துப் போராடிக்கொண்டு இருந்தால் போதும் எனக் கருதிக் கருமமாற்றிக்கொண்டு இருப்பதாகவே இன்றைய நிதர்சனம் உள்ளது. மக்கள் விடுதலைக்காக இயங்குகிறோம் என்ற அமைப்புகளேகூட இவ்வகையில் ஏனோதானோ என்றபோக்கில் செயற்படுவது இன்றைய துயரின் உச்சம் எனலாம். அவற்றின் தலைமை சக்திகள் மாறாத நிலைப்பாடுகளுக்குள் சிக்குப்பட்டுள்ளதும் புதிய மாற்றங்களைக் கண்டறிய இயலாமற் போவதற்குக் காரணமாயாகியுள்ளது. "மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி" என்பவர்களும், அதன் அடிப்படை உண்மையைக் கண்டுகொள்ளாமல் தலைவர்களான தாமே வரலாற்றைப் படைப்பவர்கள் என மயங்கிவிடுவதால் தன்முனைப்பு மிகையாகி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறவர்களாகிறார்கள். இது சிறிய கட்சிகளில் உள்ள நிலைமை மட்டுமல்ல, உலக வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த மகத்தான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள்கூட நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் மக்கள் சக்திக்குமேல் தமது தலைமை ஆற்றல்மீது அதீத நம்பிக்கைகொண்டு செயற்பட்ட அனுபவங்கள் ஏற்கனவே வரலாற்றுத் தடங்களாயுள்ளன. பொதுமைப் புத்துலகம் படைப்பதில் மாபெரும் சாதனைகளை எட்டிய சோசலிச நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறுகாரணங்களோடு தலைமையில் இருந்த இப்போக்கும் அடிப்படைக் காரணமாயிருந்தது. "படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்" என்று ஒரு சொலவடை எம்மத்தியல் உண்டு; அதனை நினைவுபடுத்துவதாகவே, மக்கள் சக்தியே வரலாற்றைப் படைக்கிறது எனச் சொல்லிக்கொண்டு தலைவர்கள் மக்களை அணிதிரட்டி வென்றெடுத்த சில சாதனைகளுக்குத் தலைமை தாங்கியதைத் தமது மாபெரும் பங்களிப்பாய் மயங்கி செயற்படுவதிலும் காண்கிறோம். கூட்டுத் தலைமை மறுக்கப்பட்டு பெரும் சாதனைகளுக்குத் தலைமை தாங்கிய தானே சரியாகச் சிந்தித்துச் செயற்படுவதாக ஒரு தலைவர் எண்ணிக் கருமமாற்றும்போது நாட்டை முன்னேற்றத் தவறி, அவரை வழிபாடு செய்தவாறு மக்கள்மீது ஆதிக்கம் புரிய எத்தனிப்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறவராவார்.அவ்வாறு அல்லாது பல அல்லற்பாடுகளில் மக்களை ஆட்படுத்துகிற எமது தலைவர்களும் தமது 'சரியான' தலைமைப் பாத்திரம் பற்றிப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தச் சோசலிச நாடுகளின் தலைவர்களாவது மகத்தான சாதனைகளோடு சிறிய பின்னடைவுகளுக்கும் காரணமாய்விட்டனர் என்ற விமர்சனத்துக்கு மட்டுமே ஆட்படுகின்றனர்; இவர்கள் தலைவர்கள் எனக்கொள்ளத்தக்க எந்தத் தகுதியும் அற்றவர்களாயே உள்ளனர். எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமல் மட்டுமல்ல, தலைமையும் சரியான அமைப்பும் இல்லாமலே எமது மக்கள் உள்ளனர். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பசுபதி என்ற கவிஞர் "அடிமைகளை அடிமைகளே அடிமைகொள்ளும் நாடு" என்று எமக்கான இருப்பை உணர்த்தியிருந்தார். பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப்பட இடமளியோம் என்கிறவர்கள் தமக்குள் அடிமைப்படும் சாதிகள், பிரதேசங்கள், இனங்கள் இருக்கவேண்டும் என அவாவுகின்றனர். ஆதிக்கம் பெற்றுள்ள பேரினவாதமும் இறைமையை பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்திடம் தாரைவார்த்து அடிமைப்பட்டேயுள்ளது.ஆக, எமது பிரச்சனை வெறும் சுற்று மதில்களுக்குள்ளேயோ பிராந்தியத்துக்குள்ளேயோ மட்டுப்பட்டதாய் இல்லை. எமது பிராந்திய மேலாதிக்கம் என்கிறவகையில் இந்தியா எம்மை அடிமைகொண்டிருப்பது வேறெதையும்விட வலிமையானது. பிரதானமாக தமிழகம் எம்மீது கொண்டிருக்கும் கருத்தியல் ஆக்கிரமிப்பு மலினப்பட்ட சினிமா-சஞ்சிகைகள் வாயிலாக மட்டுமானதாய் இல்லை; சுதந்திரம் தவறிக்கெட்டுத் தலைமையும் அற்றுள்ள எமக்கு தலைமைதாங்க முன்வரும் 'உலகத் தமிழ்த் தலைவர்கள்' அங்கிருந்து கிளம்பும் அபாயமும் மேற்கிளம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதிப்பது மேலும் பன்மடங்கு நெடுக்கடிகளை எமக்கு வழங்குவதாய் அமையும். இவ்வகையில் நாம் அடிமைப்படுவது தமிழக கருத்தியல் ஆக்கிரமிப்பாளர்களால் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டதோடும் தொடர்புடையது.அந்தவகையில், எமக்கான விடுதலையின் முதல் தேவையாக பரந்துபட்ட பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பது உடனடி அவசியமாகியுள்ளது. பல்வேறு அடிமைத்தனங்களைக் கொண்டுள்ள பாரம்பரியப் பண்பாட்டைப் பேணுவதற்கானதாக அது அமையக்கூடாது; உழைப்பவர் நலனோடு ஊடாட்டம் உடைய புதிய பண்பாட்டு இயக்கமாக அது அமைய வேண்டும். அதன் தொடர் வளர்ச்சி சரியான இலக்கை வகுத்து பொருத்தமிக்க மார்க்கத்தில் ஏற்ற வேலைத்திட்டத்தோடு சரியான மூல உபாயம்-தந்திரோபாயங்களோடு முன்னேறும் போது வலிமையான தலைமையைக் கட்டமைக்க இயலும். கூட்டுத் தலைமை மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற பாணியில் அத்தகைய புதிய பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அமைவாக இன்று காலம் கனிந்துள்ளது.