Tuesday, January 29, 2013

















இறுதி யுத்தம்… முள்ளிவாய்க்கால்… முள்வேலி முகாம்



யோ.கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு” ஒரு எனும் சிறுகதைத் தொகுதி குறித்து விமர்சனக் கருத்துரை ஒன்றை முன்வைக்க முயலும்போது அவருடனான உரையாடல் தருணங்கள் இடைவெட்டுவதைத் தவிர்க்க இயலாதோ என்று சந்தேகம் எழுகிறது. படைப்பு ஒன்றை, ஆசிரியர் பற்றிய முன்னனுமானங்கள் ஏதுமின்றி அணுகுவது அவசியம் என்பது பெரும்பாலும் சரியானதுதான். இந்தப் பதிவைக் கூடியவரை ஆசிரியரைக் கடந்து சிறுகதைகளை மட்டுமே முன்னிறுத்தி அலசுவதற்கு முயல்வேன். பிரதி வெளிப்படுத்தும் ஆசிரியர் அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்கலாம்.
தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை பலப்படுத்துவதோடு, தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தைத் துரிதப்படுத்த யோ.கர்ணன் போன்றவர்களது முழுமையான யுத்தசாட்சியமே விஞ்ஞானபூர்வமானதாகவும், அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் அமையும் எனக்கூறும் நிலாந்தன் இவ்வாறு கூறியிருந்தார்: “கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட ஈழப்போர் உயிருள்ள வெளிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்திமிக்க அரசுகளின் சற்றலைற் கமராக்களைத் தவிர வேறெந்த வெளிச்சாட்சிகளும் அங்கீகரிக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்தகளத்தில் நின்ற உட்சாட்சிகளே. இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தன்னிலை மறந்து தனது செயல்களைத் தானே தனது கைபேசி கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது. மற்றத்தரப்பு தியாகிகளும், கைதிகளும், அகதிகளும் ஆகியது. இவர்களின் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார். பெரும்போக்காகவுள்ள யுத்தசாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்தசாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்.”
மேற்படி நிலாந்தனின் குறிப்பு நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. வடலி வெளியீடான இந்நூல் ஆசிரியர்-படைப்பாக்கம் குறித்து இத்தகவலை மட்டுமே தந்துள்ளது. மற்றும்படி நேரடியாகவே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்க ஏற்றதாகவே நூல் உள்ளது. என்வரையில், கர்ணனைச் சந்திப்பதற்கு முன்னரே அவரது சிறுகதைகளை அவ்வப்போது வெளியான சஞ்சிகைகளில் படித்தபோது, கள அனுபவங்களோடு எழுதப்பட்டது குறித்த தகவலையும் இணைத்து வாசித்திருக்கிறேன். வெளிச்சாட்சிகள் இறுதி யுத்தத்தில் இடம்பெற அனுமதிக்கப்படாதது பேரினவாத ஆட்சியாளர் கைங்கரியம் என்றால், கள அனுபவங்கள் மக்கள் நலநாட்டத்தோடு வெளிவர ஏற்ற சாட்சிகள் இல்லாது ஆக்கப்பட்டது, தலைமையேற்ற சக்தியின் பாசிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியம் என்பதாக ஆதிக்கவாத நோக்கு மட்டுமே பேசுபொருளாக உள்ள ஈழத் தமிழ்ச் சூழலில் மக்கள் விடுதலை உணர்வோடு இணைந்த தேசிய இனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கையைக் கேட்பது அருந்தல். அத்தகைய மிகக் குறைவாயே உள்ள குரலில் ஒன்றாக கர்ணனின் இந்தச் ‘சாட்சியம்’ அமைந்துள்ளது.
கள அனுபவங்கள் என்ற பேரில் வலதுசாரிப் பிற்போக்கு நிலைப்பட்ட பதிவுகள் வெளிப்படும் தமிழ்ப் பாசிசம் ஆளும்போது அதற்குத் துதிபாடி பேரினவாதம் மேலாண்மை பெற்ற நிலையில் புலிகளை வரிக்குவரி தாக்கும் அனுபவமீட்புகளும் வந்தபடிதான். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்றில்லாமல் உண்மையான விடுதலை நாட்டத்தோடு போராட்டத்தில் இணைந்து, திசை கெட்டழியும் போக்கில் செயற்பாடுகள் தறிகெட்டுப்போவதைக் கண்டு ஆதங்கப்பட்டு, வீழ்ச்சியை மறுமதிப்பீடு செய்ய முனையும் மனப்பாங்கு கைவரப்பெற்ற படைப்புள்ளம் ஒன்றே சரியான ஆக்கங்களை வெளிப்படுத்த இயலும்.
இந்தச் சமகாலத்தில் இத்தகைய ஆரோக்கியமான விமர்சன நிலைப்பட்ட வேறொரு சிறுகதைத் தொகுதி மற்றும் நாவல் என இரு படைப்பாளிகளைப் படிக்க முடிந்துள்ளது. அவைகுறித்து பேசுமுன்னர் கர்ணன் பற்றிப் பேச அவசியம் உள்ளது. மிக நெருக்கமான அனுபவ எல்லையைத் தொட்டமையும் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் தனது கருத்தியலை விருத்தி செய்யும் போக்கில் முன்னேறுவதையும் இவரிடம் அதிகமாக காண இயலுமாயுள்ளமையால் இவரது “சேகுவேரா இருந்த வீடு” எனும் சிறுகதைத் தொகுப்புக் குறித்து சில வார்த்தைகள். இந்தத் தலைப்புக் கதை ‘தோழர்களை’ போராளிகளாக தமிழ்த் தேசிய வரலாறு பெற்றிருந்த இருபத்தேழு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை பெற்றுவந்த மாற்றங்களைக் கூறுவது. தம்பி சேகுவேரா என்ற பேரோடு இயக்கமானதால் இழந்த வீட்டை இறுதிவரை மீட்கமுடியாத அண்ணனின் குடும்பம் படும் பாடுகள் அந்தக்கதை. சீதனமாக அந்த வீட்டைப் பெறவேண்டியவள் காணாமல் போவது எமது வரலாற்றின் குறியீடுமாகும்.
அந்தக் கதையை அடுத்து இடம்பெறும் “ஐயனின் எஸ்.எல்.ஆர்.” தோழர்களில் ஒரு பிரிவு அரசு சார்பு இயக்கமாக சமாதான காலத்தில் யாழ் மண்ணில் இருந்த சூழலுக்குரியது. முன்னர் புலிப் போராளியைக் காதலித்து, இதே இயக்கத்தால் கைதுசெய்து ‘வைத்திருக்கப்பட்டு’ விடுதலையான பின் வெளிநாடு சென்று 15 ஆண்டுகளின் பின், இந்தச் சமாதான காலத்தில் ஊர்வந்த பெண், ‘தோழர்’ போராளியோடு உரையாடுவது உச்சக் கட்டம். அந்தத் தோழர் தனது தலைமை திருமணமே செய்யாது மக்களுக்காக வாழ்வது பற்றிப் பேசும்போது அவள் சொல்வாள், நான் மட்டும் அப்போது அபோஸன் செய்யாதுபோனால் உன் தலைவரின் வாரிசு என் வயிற்றில் வளர்ந்திருக்கும் என்று. கால ஓட்டத்தில் போராட்டப் போக்கு மாற்றங்களின் நிதர்சனத்தை உள்ளவாறே சொல்லிச் செல்வதற்கு அப்பால், அரசியலற்று எரிந்த கட்சி – எரியாத கட்சி என்கிற மனப்பாங்கில் புலிகளால் விரட்டப்பட்டு அரசோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்ட இயக்கத்தை ‘ஒட்டுக்குழு’ என அடையாளப்படுத்த முற்படுகிறவர்களிலிருந்து வேறுபடுகிற அதேவேளை, அவர்களின் புனிதப்படுத்தல் முயற்சியையும் இவ்வகையில் அம்பலப்படுத்துகிறார் இக்கதைசொல்லி.
அதேவேளை போராட்டத்தின் அனைத்தையுமே புனிதப்படுத்தும் தூய தமிழீழத் தேசியர்களின் மாயக்கற்பனைகளையும் தகர்த்து யதார்த்த இருப்பை உள்ளது உள்ளபடி, இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறார். சேறும் சகதியும், வேர்வையும் வெறுப்புகளும், வாழத்துடிக்கும் அவதிகளும் மரண ஓலங்களும், இலட்சிய உந்துதலும் காட்டிக்கொடுப்புகளும் என அனைத்துப் பக்கங்களையும் உண்மை மனிதர்களின் முகங்கள் வாயிலாகவே காட்டிச் செல்கிறது “சேகுவேரா இருந்த வீடு”. மேற்குறித்த இரு கதைகளையும் அடுத்ததும், இறுதிக்கதையுமான “இரண்டாவது தலைவர்” எனும் சிறுகதை இது தொடர்பில் கவனிப்புக்குரியது. இயக்கத்தில் இரண்டாவது தலைவர் யார் என நச்சரித்த இளம் போராளி, அரசியல் ‘மாஸ்ட்டரால்’ கடுமையாக எச்சரிக்கப்படுவான். அவன் கடற்போராளியாகி உயர்நிலை அடைந்தபோதும் இரண்டாம் தலைவர் பற்றிய கேள்விகளோடுதான் தாய்லாந்து ஆயுதக்கொள்வனவுக்குச் சென்ற காலத்தில் சர்வதேசத்தொடர்பில் இயங்கும் கே.பி. என்ற இரண்டாம் தலைவரைச் சந்திக்கிறான். எல்லாம் முடிந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியேறிய நாளில் வந்து வாழ்த்துத் தெரிவித்த அடையாளம் மறந்த அதே இரண்டாம் தலைவரை அறியும்போது அவன் மட்டுமன்றி வாசக உள்ளங்களும் அதிர்ச்சிக்குள்ளாகும்.
ஆதிக்கவாத தமிழ்த் தேசியத்தின் இன்னொரு முகம் இது. கே.பி. என்கிற தனியாளின் ‘துரோகம்’, அல்லது அதை அம்பலப்படுத்த அவசியமற்ற காலப்பொருத்தமற்ற கதைசொல்லியின் முயற்சி என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசியலற்ற வெறும் யுத்த சன்னதத்தின் அவல முடிவு இது என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு விருப்பமற்று, நாம் விரும்பாத விடயம் உண்மையேயாயினும் நாம் கவனங்கொள்ளப்போவதில்லை என்கிற எமது பொதுப்புத்தி பட்டும் தெளியாத மனப்பாங்கைக் காட்டுவது. ஈழப்போராட்டம் முழுமையிலுமே இத்தகைய தீக்கோழி மனோபாவம் எம்மிடம் செயற்பட்டதன் பேறு இன்றைய அவல முடிவுக்குக் காரணம் என்பதை உணர்வது அவசியம். இந்த மனக்கோளாறுடன் கர்ணனின் கதைகளைப் படிப்பவர்கள் அசூசைக்குள்ளாவது தவிர்க்க இயலாததே. உண்மையைக் காண அச்சமற்று, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான மார்க்கத்தைக் கண்டறிய முயல்கிறவர்களுக்கு இக்கதைத் தொகுதி மிகப் பெரும் பொக்கிசமாய்த் தெரியும். சிறிய நிலப்பரப்பில் சிக்குண்டு கொடுக்குப்பிடிக்குளிருந்து மீழத்துடித்த இறுதிக்கணத்தில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் தவிப்புகளும், மனிதம் பேண முயலும் கணங்களும், இலட்சியப்பற்றும் எனப் பல்வேறு தருணங்கள் இங்கு பேசுபொருளாகியுள்ளன.
“திரும்பி வந்தவன்” என்கிற முதல் கதை, இயக்கத்துக்குப் போய், இறுதிக்கட்டத்தையும் கண்டு புனர்வாழ்வுபெற்றுத்திரும்பிய போராளிக்கு திருமணப் பேச்சின் சலனம் தனது ஆண்மைச் சாத்தியத்தைப் பயிற்சிபெற வழிப்படுத்துவதைக் கூறுகிறது. வவுனியாவில் அதன்பொருட்டுவந்த பாலியல் தொழிலாளிப் பெண், தனது தாயை அத்தொழில் காரணமாக இயக்கப் போராளியாக இருந்தபோது அவன் மரணதண்டனைக்குள்ளாக்கியதைக் கூறி, விட்டுவிடுபடி கேட்டுக்கொண்டதில் அதிர்ச்சிக்குள்ளாவதைக் காட்டும். மூன்றாவது கதை, “திரும்பி வந்தவள்”. ஆணாதிக்க சமூகத்தில் அந்தப் போராளிக்கு இருந்த வாய்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது திரும்பி வந்தவளின் கதை. அவளைக் காதலித்தவன், லண்டனில் புலிக்கொடி ஏந்திச் சர்வதேசங்களுக்கு எல்லாம் காட்டும் போராட்டத்தை முன்னணியில் நின்று நிகழ்த்தியபோதிலும், இயக்கத்திலும் இராணுவ முகாமிலும் இருந்தவளைத் திருமணம் செய்ய முன்வராததைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதைக் காட்டும். அவளது கண்ணீர், லண்டன் போராட்டத்தின் பத்திரிகைப் படத்திலுள்ள புலிக்கொடியைக் கரைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேப்பருடனுள்ள அவளது உணர்வுகளை முழுதாகப் புரிந்து கொள்ளும் சிறுவன் பார்வையில் நகரும் கதை, அண்ணன் அவளை ஏற்க மறுக்கும் நிதர்சனம் குறித்த விளக்கம் முழுமை பெறாத தவிப்பைக் காட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் ஒடுக்குமுறையின் அடிப்படை தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருகதைகளும் அமைந்துள்ளன.
“தமிழ்க் கதை” அகதிமுகாம் அவலத்தை மட்டுமல்லாமல், இனக் குரோதத்துக்கு அப்பாலான தந்தையாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் பதிலடியைக் காட்டும்; தாயின் மரணம், தெரியாத சிறுமியின் மரணம் என்ற கொடூரங்களோடு இருப்பிடம் திரும்புகிறவனை “அரிசி” கிழையும் அக்காவின் இருப்பு நாட்டம் வாழ்க்கைக்கு அழைப்பதாக அமையும். “கதைகதையாம் காரணமாம்” விசாரணையாளரிடம் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் போராளியைக் காட்டும். “வேதாளத்திற்குச் சொன்ன கதை” அத்தகைய விசாரணையில் புதைக்கப்பட்ட இயக்கப் பணத்தைப் பங்குபோடக் கேட்கும் தேசபக்த விசாரணையாளனைக் காட்டுவது. “சீட்டாட்டம்” அரசியலற்ற இயக்க வங்குரோத்தைப் பொதுமகன் பார்வையில் காட்டும். “சோசலிசம்” அதை இன்னொரு வடிவில் பேசும். “பாவமன்னிப்பு” சகபோராளிகளைக் காக்கத் தன்னை அர்ப்பணித்த உயர் பண்பாளனைக் காட்டும். “பாலையடிச் சித்தர்” வாய்ச் சவடால் வீரரின் சரணடைவையும், போராளியின் நிதர்சனத்துக்கு திரும்பும் நிர்ப்பந்தங்களையும் பேசும்.
பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன. வறட்டுத்தனமான தந்தையை வஞ்சிக்கும் வகையில் இயக்கமெனக் கணவன் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெண் சிங்களப் படையினரோடு உறவாடுவது வெறும் அதிர்ச்சிப் பாத்திரம் மட்டுமல்ல, அவதிவாழ்வின் இன்னொரு மறுபாதி.
எரிந்த கட்சி – எரியாத கட்சி (போலியான மக்கள் ஆதரவைப் பெற புலிப் புகழ் பாடுவது, வஞ்சிக்கப்பட்டோமே என்ற கோபத்தில் புலி எதிர்ப்பை மட்டும் பேசுவது) என்ற ஏதாயினும் ஓர் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது, வரலாற்றுச் செல்நெறியின் மிகப்பிரதான கணத்துக்கான பல்வேறு தருணங்களைக் கர்ணன் அற்புதமாகக் கலைத்துவப் படுத்தியுள்ளார். இவை சிறுகதைகள் என்ற போதிலும், பல்வேறு பாத்திரங்கள், வேறுபட்ட குணாம்சங்கள், எதிர்-எதிர் நலன் என்பன பேசு பொருளாக அமைகையில், குறித்த களமும் காலமும் காட்டப்படும் வகையில் நாவலுக்குரிய வாசிப்பு அனுபவத்துக்கு நெருங்கிவர வாய்ப்பைத் தருகிறது. இருப்பினும் நாவல் ஒன்றில் இவை ஒருங்கமைக்கப் படும்போது விரிந்த அனுபவச் செழுமையும் தேடலும் தெளிவும் சாத்தியமாகும். கர்ணனின் கருத்தியல் தெளிவைக் காணும்போது அவரால் அத்தகைய நாவல் ஒன்றைத் தர இயலும் என்றே தோன்றுகிறது. தருவார் என்றே நம்புவோம். அதற்கான புறச் சூழலை எமது பண்பாட்டு நகர்வு ஏற்படுத்துமா, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் குறுகிய மனப்பாங்கால் எதிர்நிலையை ஏற்படுத்துவோமா என்ற கேள்வியும் எழாமலில்லை. எமது பங்குக்கு குறுங்குழு வாதங்களைத் தகர்த்துப் புதிய பண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்த இச்சவாலை முகங்கொடுக்க ஏற்ற களமாகவும் ஆக்கிக் கொள்ளலாமல்லவா? ஆக்குவோம்!
ந.இரவீந்திரன்
எதுவரை -இதழ் 08

Wednesday, January 2, 2013

கலந்துரையாடல் -இனி அவன்


கடந்த முழுமதி(போயா) தினமான 27.12.2012 இல் கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் காலை பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் இனி அவன் ( Him, Here After - 2012) போன்றன..அசோக்க ஹந்தகம இயக்கத்தில் வெளியாகியிருந்த "இனி அவன்" தமிழ்த் திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கான அமர்வு அது. ச.சிவகுருநாதன், அனோமா இராஜகருணா (சினிமா நெறியாளர்) ஆகியோர் ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி தமிழிலும் சிங்களத்திலும் உரைமாற்றம் செய்யப்படும் எனக்குறிப்பிட்டவாறே கணிசமாக இரு மொழியினரும் கலந்துகொண்டனர்(இந்நிகழ்வுக்குரிய கனதியில்). சமகாலத் தமிழின் கணிப்புக்குரிய மூத்த திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அசோக்க ஹந்தகம இத்திரைப்படத்தை எடுத்த சூழலை விளக்கினார். சிங்களத்தில் ஏற்கனவே தான் முன்னெடுத்த சினிமா-நாடக-தொலைக்காட்சித்தொடர் என்பன வாயிலாக எதிர்னோக்கிய கண்டன விமர்சனங்களைக் கூறினார். இலங்கை சிங்களவர்களுக்கு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் பணிக்கப்பட்ட புண்ணியபூமி என்ற ஐதீகத்தைப் பாலூட்டும் பருவம் முதல் ஊட்டி, சமகால அரசியல் முன்னெடுப்புகளினூடே ஏனைய இனத்தவர்களால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என வளர்க்கப்பட்டு வருகிறவர்களிடம், மாற்று உரையாடலை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய இடர்ப்பாடே இது. இது பல்லின-பல்கலாசார நாடு என்பதை உணர்த்த முற்படுகிறவர்களே ஓரங்கட்டப்படுகையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயம் பற்றிப்பேச முனைவது தற்கொலைக்கு சமன் என்பதைச் சொல்லத்தேவையில்லை. அதன்பேறாக காத்திரமான முறையில் சுயநிர்ணயம் குறித்த உரையாடல் அங்கு இன்னமும் சாத்தியமற்றுள்ளது. அதனை ஏற்படுத்துவதற்கு முன் தேவையாக ஏனைய சிறு தேசிய இனங்களோடு உரையாடுவது அவசியமே.
எம்மிடம் உள்ள இனவாதம் அங்குள்ள இனவாதிகளை வலுப்படுத்தி, சிங்கள மக்களுக்கு நிதர்சன நிலையை விளக்க எந்த முயற்சியையும் எடுக்க இயலாத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தமிழர் மத்தியிலுள்ள இன்றைய சமூகப் பிரச்சனைகளில் எமக்குள்ளேயான ஏமாற்றும் சுரண்டலும் கபடங்களும் இனங்காட்டப்பட்டு, அவை மோதித் தகர்க்கப்படுவது ஊடாகவே ஏனைய அரசியல் நகர்வை நாட இயலும் என உணர்த்த முற்படுவதாக இந்தப் படைப்பாக்கம் அமைந்துள்ளது. முன்னாள் போராளி இயல்பு வாழ்வை அவாவியபோதிலும், அயல்சமூகமும் சமூகவிரோத சக்திகளும் அதற்கு இடம்தராத நெருக்கடி பேசுபொருள். அவனது முன்னாள் காதலி இயக்கத்துக்கு உள்வாங்கப்படாதிருக்க படுகிளவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்; அவசர மணாளன் ஒருநாள் உறவில் பிள்ளையைக் கையில் கொடுத்துவிட்டு மரணித்ததால், இப்போது அவனால் ஏற்கக்கூடிய நிலையில். அவனைத் தனது கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தமுனையும் சமூகவிரோதக் கனவான், பாதிப்புகள் பலவற்றைக் கண்ட பெண், போராட்டத்தை வைத்து வெளிநாட்டு வாழ்க்கைச் சுகபோகங்களையும் கண்டு இங்குள்ள வாய்ப்புகளையும் பெற முயலும் பச்சோந்தியாயுள்ள முன்னாள்போரளியின் பழைய சகபாடி என்போர் கதையின் ஏனைய பிரதான பாத்திரங்கள்.
நாயகனின் மனைவியாகிய பெண் இயல்பு வாழ்வுக்கு மாறுவதில் பெரிதாக எந்தப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை; கொடுமைகளுக்காளான மற்றப் பெண் இன்னமும் வறுமையோடு. அவளது கணவனின் செக்குறுட்டி வேலைதான் இவனுக்கு கைமாறியது. அதனாலே தன் வாழ்வுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும் என இவனை நெருக்க, இவனோடு சமூக விரோதக் கும்பலின் அனைத்துவகைச் சுரண்டலுக்கும் உள்ளாகிறாள். மேற்படி கருத்தாடலில், இப்பெண்ணைக் காட்டுவது வாயிலாக தமிழ்ப் பெண்களெல்லாம் சோரம்போய் வாழ முற்படுபவர்கள் எனக் காட்ட முற்படுகிறீர்களா எனக் கேட்கப்பட்டமை ஆச்சரியமாக இருந்தது. வகைமாதிரிப் பாத்திரங்களில் உள்ள அளவில் இது காட்டப்பட்டதில் எந்தத் தப்புமில்லை.
அவ்வாறே முன்னாள் போராளியான நாயகன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியூடாக, சிங்களப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தும் மீண்டும் புலி அச்சுறுத்தல் வரலாம் என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்களா என்றெழுப்பப்பட்ட கேள்வியும் நியாயமானதாய்ப்படவில்லை. கூடியவரை இயல்பு வாழ்வை அவாவி, அதற்கு சொந்தச் சமூகமே தடையாகும்போது அந்தத் துப்பாக்கியைத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க முற்படுவது மட்டுமே காட்டப்பட்டது. சமூக விரோத நடத்தைக்கு உள்ளாக்கப்படுகையிலும் அதனை அவன் நினைவுகொள்ளவில்லை. வேறு எந்த அரசியல் உரையாடல்களும் பேசப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த அரசியல் பிரச்சனையை முற்றாகக் கைவிட்டு இயல்பு வாழ்வை முழு அளவில் விரும்புகையில் எதிர்நோக்கும் பிரச்சனையே பேசப்படுகிறது. ஒருவகையில் இனப்பிரச்சனையின் இருப்புக்கான அடிப்படையைச் சிங்கள முற்போக்கு சக்திகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்ற குறைபாடுதான் இங்கே வெளிப்படுகிறதே அல்லாமல், மீண்டும் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதம் எழலாம் என்ற எந்த அடையாளமும் காட்சிப்பட்டிருக்கவில்லை.
தமிழ் முற்போக்கு சக்திகளும் இப்பிரச்சனைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகுவதையே இது காட்டியுள்ளது. நாம் எம்மத்தியிலான பிற்போக்கு வலதுசாரி பாசிச இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை மீட்டு, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுகுறித்த முழுமையான புரிதல் கொள்ளாதபோதிலும் அதனைப் புரிந்துகொண்டு அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகள் மேற்கிளம்பிவருகின்றமையை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் தமிழ்-முஸ்லிம்-சிங்கள கருத்தியலாளர்கள் கொண்டிருந்தபோதும், ஆரோக்கியமான கருத்தாடலில் பொதுநோக்கில் ஒன்றுபடக் களம் உள்ளது என்பதை இந்தக்கருத்தாடல் எடுத்துக்காட்டியிருந்தது. தலைமையேற்ற கே.எஸ்.சிவகுமாரன் இதுகுறித்து நியாயமான பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். அவரும் ஏற்பாட்டளரான சிவகுருநாதனும் இதன்பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நடிகர்கள் : இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான நிரஞ்சனி சண்முகராஜா, ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன், சுபாஷின் பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இயக்கம் - திரைக்கதை : அசோகா ஹந்தகமா. ஒளிப்பதிவு : சன்னா தேசப்ரியா இசை : கபிலா பூகாலராச்சி.
இந்தப் புதிய வருடம் இனவாதங்களைக் கடந்து தீர்வை எட்ட முயலும் சக்திகளுக்கான களத்தைத் திறந்துவைத்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வாக இதனைக் கருதலாம். புதிய தொடக்கமாக, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புத்தூக்கத்துடன் இந்தக் களத்தில், புதிய வருடத்தில் முன்னேறுவோம்.
                                                                                                                                                                            

*** படைப்பு தன்னளவில் எதை வெளிப்பட்டுத்துகிறது என்பதே முக்கியத்துவமுடையது; அதை எந்த நோக்கத்துக்காக வெளிப்படுத்த முயன்றார் படைப்பாளி என்பதைவிடவும். அவரது நோக்கத்தை மீறி தவறான வெளிப்பாட்டுக்கு இடமுண்டு. இதனை அக்கருத்தாடலின் போது எனது கருத்தாகக் கூறியிருந்தேன். எத்தனை அழிவுகளையும் கடந்து எம்முன் உள்ள சவால்களை முகம்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கருப்பொருள், தெரியப்பட்ட திரைக்கதையின் தவறுகளால் பார்வையாளரிடம் வெற்றிபெற இயலாது போகும் என்பதற்கு "இனி அவன்" எடுத்துக்காட்டாகியுள்ளது. அந்தத் தவறை மீறித் தமிழ்த் தேசியவாத உணர்வு ஏற்படுத்தும்(அல்லது சிங்களப் பார்வையில் தவறாக சித்திரிக்கப் படுகிறது என்ற புரிதலில்) விமர்சனமாக முன்வைக்கப்பட்ட இரு கருத்து நிலைகள் (ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பன குறித்தவை) பொருத்தமற்றன என்பதை மேலே குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள இனவாத சக்திகள் சம அளவான தவறுகளை விதைத்து முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளோம். அழிவும் மூன்று (சம்பந்தமற்றிருந்த மலையக மற்றும் சிறுபான்மை) இனங்கள் அனைத்துக்கும் சம அளவில் ஏற்பட்டுள்ளன. தவறுக்கு ஒரு இனத்தை மட்டும் குற்றம் கூற முடியாதது போன்றே, பாதிப்பும் எமக்கு மட்டுமே அதிகம் என்றும் எந்த இனத்தவரும் சொல்லிவிட இயலாது. இனவாதத்தைக் கடத்தல் தொடர்பிலான படைப்பாக்கத்தில் ஒரே வடிவம் பொருத்தமற்றது. இதுகுறித்து அன்றைய கருத்தாடலில் நான் கூறிய கருத்து சரியாக வெளிப்படாமல் போயுள்ளது. அங்கே பின்னர் வெளிப்பட்ட கருத்திலிருந்தும், இங்கே ரஞ்சகுமார் கருத்தும் இதனை உணர்த்துகிறது. சிங்கள இனவாதத்தை எதிர்க்கையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் குற்றம்காண இடமிராது. அதுவே தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்துகையில், பேரினவாதத்தால் ஒடுக்கப்படுவதைக் கவனம் கொள்ளாமல் தனித்துத் தமிழ் இனவாதத் தவறை மட்டும் சித்திரித்தால் பாரதூரமான தவறேற்பட இடமுண்டு. இதுவே "இனி அவனில்" ஏற்பட்டது. இதனைச் சிங்களப் படைப்பாளி என்றில்லாமல் தமிழ்ப் படைப்பாளி செய்திருப்பினும் குறைபாடக இனங்காணப்பட்டிருக்கும். இதுவே முஸ்லிம்கள் குறித்துப் பேசும்போது அவர்கள் இரு பேரினவாதங்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பின்னணி இல்லாது காட்டின் மிகப்பெரும் தவறாகும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். புள்ளி ஒன்றாக இருப்பினும் வந்தடையும் திசைகள் வேறாக உள்ளதைக் கவனம்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறேன். அன்று மட்டுமில்லாமல், இங்கே நீங்கள் உற்சாகமாக வெளிப்படுத்தும் உணர்வுநிலையும் இனவாதங்கள் கடந்து விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேற எம்மத்தியில் ஆர்வம் வலுத்துவருவதைக் காட்டுகிறது. புதிய தளத்தில் சந்திப்போம்.

*** இன்றைய பொதுப்போக்கில் வெற்றிபெற்ற பேரினவாதம் தனது ஆதிக்க மேலாண்மையை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே. ஆயினும் அதனை ஏற்கமறுத்து, அதற்கெதிராக தனது படைப்புகளை வெளிப்படுத்தும் அசோக்க ஹந்தகம தமிழில் பேசிய (கமரா வாயிலாக காட்டிய) காட்சிப்படிமங்களில் இருந்த தவறுக்கு அப்பால்போய், அனைத்தையும் பேரினவாத நோக்கு என வாசிப்பது தவறல்லவா? அன்றைய கருத்துப்பரிமாறலில் இந்தக் குறைபாட்டுடனான பார்வை வெளிப்பாடு இருந்தபோதிலும், உணர்ச்சிவசப்பட்ட இனவாத வக்கிரம் இருக்கவில்லை. அதற்கான அடிப்படைக் காரணமே, ஹந்தகம பேரினவாதத்துக்கு எதிராக உள்ள படைப்பாளி என்பதுதான். அவர்மீதான சந்தேகம்(படைப்பாக்கம் பற்றிய எதிர் விமர்சனம்) எல்லை கடந்து போகவில்லை என்றவகையில், அந்தப்பொருளே அதிகம் பேசப்பட்டாலும், இனவாதம் கடந்த உரையாடல் களம் அது என்பது முதன்மை பெறுகிறது. Ranjakumar Somapala S ரஞ்சகுமார், ஏனைய பேரினவாதிகளோடு ஹந்தகமவை ஒரே வரிசையில் வைக்கும்படி உங்களைத் தூண்டும் விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டுள்ளீர்கள்; என்வரையில் இத்திரைப்படத்தில் சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் நிராகரிக்கக்கூடாதது என்பதற்காகவே இப்பதிவுகள். ஏதோ ஒருவடிவில் ஏதோ ஒருவடிவில் நீங்களே படத்தைப் பார்த்தால் என் கருத்தை ஏற்பீர்கள்.