Monday, March 26, 2012

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - ந. இரவீந்திரன் 

                                                                                         
                                                                  பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.எமது சமூக உருவாக்கம் எத்தகைய பிரத்தியேகத் தன்மையுடையது,அதற்கு ஏற்புடையதாக மார்க்சியத்தை எவ்வாறு பிரயோகிப்பது,இங்கு சமூக மாற்றங்கள் ஏற்கனவே எவ்வாறு நிகழ்ந்தேறின என்பன குறித்த புரிதல் அவசியம்; அவ்வாறன்றி, வேறுபட்ட வரலாற்று செல்னெறியுடையதான ஐரோப்பியப் புரட்சிகளை மாதிரிகளாகக்கொள்ளமுயன்றதவறே பாரதூரமான பின்னடைவுகளுக்கு எம்மை ஆட்படுத்தின.

நமது சமூகக் கட்டமைப்பின் வேறுபட்ட பிரத்தியேகத் தன்மை காரனமாக, முதலாளித்துவம் முன்னதாகத் தோன்றிய ஐரோப்பியாவில் எழுச்சியுறுத்திய தேசிய வடிவம் போல எமது தேசியக் கட்டமைப்பு இங்கு உருவாகவில்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் குடியேற்ற நாடுகளாக உருவாகிய செயற்கையான தேசியத் தன்மை இலங்கை, இந்தியத் தேசியங்களுக்கு இருந்தது என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை புரிந்துகொண்டோம். இவ்வகையில் புறனிலைக் காரணி மட்டுமன்றி அகனிலை ரீதியாக அடிப்படையான வேறுபாடு உண்டு என்பது பற்றிய தேடல் இன்று வலுவடைந்து வருகிறது.

வர்க்கப் பிளவினாலன்றி, மருதத் திணை மேலாதிக்கம் சமூக ஒடுக்குமுறையை ஏனைய திணைச் சமூகங்கள் மீது ஏற்படுத்திக்கொண்டு சாதி வாழ்முறையை ஏற்படுத்திக்கொண்டதன் ஊடாக எமக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம்பெற்றது. இன மரபுக் குழுக்கள் தகர்க்கப்பட்டு உருவான ஆண்டான்- அடிமைச் சமூகம் கிரேக்க,ரோம் புரட்சிகள் வாயிலாக தகர்க்கப்பட்டு நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு ஐரோப்பாவில் கட்டமைக்கப்பட்டது. அதனைத் தகர்த்து நவீன ஐரோப்பா முதலாளித்துவ அமைப்புக்கான தேசங்களைக் கட்டமைத்தது. இன்றைய இந்த அமைப்பில் நிலப்பிரபுத்துவ வர்க்கம்-பண்ணை அடிமை வர்க்கம் என்பன முற்றாகவே அற்றுப்போகும் வகையில் துடைத்தழிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிலப்பிரபுத்துவம் ஆண்டான் - அடிமை வர்க்கங்களை இல்லாது அழித்துவிட்டதனால், அவையும் இன்றில்லை.இன்றைய ஐரோப்பிய சமூகம் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கம் எனும் புதிய சக்திகளையே கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் அவ்வாறன்றி ஏற்றத்தாழ்வு தோற்றம் பெற்ற காலத்திலிருந்த ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள்,இடைனிலைச் சாதிகள் என்பன தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இங்கும் உற்பத்திமுறை மாற்றங்கள் ஏற்ப்பட்ட போதிலும் உற்பத்தி சாதனங்கள் எந்தச் சாதிகள் வசப்படுகின்றன என்ற வகையில் ஆதிக்க சாதிகளிடையே உடமை மாற்றமும் அதிகார மாற்றமும் ஏற்படுகிறதே அன்றி, சமூக சக்திகள் என்றவகையில் பழையன முற்றாக அழிந்து புதியன உருவாகவில்லை; புதியன புகும் போது பழையன இன்னுமொரு வடிவில் தொடர்வதையே காண்கிறோம்.

இவ்வகையில் நீடித்துதொடர்ந்து இருக்கும் ஆதிக்கசாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற 'நிரந்தரப்பட்ட' [ஏற்றத்தாழ்வு அமைப்பு உள்ளவரை என்ற எல்லைப்பாட்டுக்குரிய] பேதம் காரனமாக எமது தேசியம் பிளவுபட்டுப்போனது. ஐரப்பாவில் ஏனைய வர்க்கங்களை ஐக்கியப்படுத்தியவாறு முதலாளித்துவம் தேசியத்தைக் கட்டமைக்க முடிந்தது போல இங்கு இயலவில்லை;ஆதிக்கசாதித் தேசியத்துக்கும் ஒடுக்கப்பட்டோர் [தலித்] தேசியத்துக்கும் இடையே அடிப்படை நலங்களில் வேறுபாடு வலுவானதாய் உள்ள காரனத்தால் இரட்டைத் தேசியம் ஒவ்வொரு தேசிய இனங்களினுள்ளும் செயற்படக் காண்கிறோம். 

ஏற்றத்தாழ்வு அமைப்பு உருவாக்கத்துக்கு முந்திய இன மரபுக்குழுக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் தொடர்ந்து நீடிப்பன.இரட்டைத் தேசியத்துக்குரிய இரு சக்திகளிடமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான வேறுபட்ட பண்பாடுகள் உண்டு. சுரண்டலுக்கான மாற்றங்கள் ஏற்பட்டு அமைப்பு வேறுபாடுகள் அவ்வப்போது சாத்தியமாகி வந்த எல்லாக்கட்டங்களிலும் ஆதிக்கசாதிகளிடையே பிரதான ஆளும் சாதி எது என்பதில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் , ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்கான நீடித்த பண்பாட்டு தொடர்ச்சியுடன் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாயே இருந்து வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இரு தேசங்களை அடையாளப்படுத்துவதில் வேறுபடுத்த்ம் பிரதான அம்சமாக பண்பாடு திகழ்வதை அறிவோம். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற பேதப்பட்ட இரு சக்திகளது பண்பாட்டு வேறுபாடு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இரு தரப்பையும் இரு தேசங்கள் போன்றே கட்டமைத்து வந்திருக்கிறது.

அந்தவகையில், இரட்டைத் தேசியப் பிளவுடன் உள்ள எமது சமூகத்தைக் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனனாயகப் பண்புடைய ஒரு தேசிய இனம் என்று மாற்றம்கொள்வதற்கு - நவீன சமூக உருவாக்கத்துக்கு - பண்பாட்டுப் புரட்சி இங்கே அத்தியாவசியமானதாயாகியுள்ளது. தவிர, முந்திய ஃஷமூக அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புறட்சிவாயிலாகவே இங்கு நடந்தேறியுள்ளன. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் மற்றங்கள் அரசியல் புரட்சிகள் ஊடாக நடந்தேறின என்றால், சமூக ஒடுக்குமுறையுடைய எமக்கான மாற்றம் பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே நிகழ்ந்தேறின.

ஏற்கனவே ஒரு தசாப்தத்துக்கு மேலாக இதுகுறித்து எழுதிவந்த போதிலும் , இன்று அதற்கான தேடல் வலுத்துள்ள நிலைகாரனமாகத் தொகுப்புரை போன்று 'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்டசியும்'பற்றி இங்கு எழுத எண்ணியுள்ளேன். முன்னதாக இதன் தவையை அவசியப்படுத்திய 2012 மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஏற்படுத்திய சூழலைப் பார்த்து, இரண்டாம் பகுதியில் இரட்டைத் தேசியம் பற்றிய கோட்பாட்டு புரிதல் எமது வரலாறு எழுதுமுறையில் ஏற்படுத்த வலியுறுத்தும் அம்சம் குறித்து பார்க்க இயலும். மூன்றாம் பகுதி, சமூக மாற்ற வடிவம் தனித்துவமிக்கதாய்ப் பன்பாட்டுப் புரட்சி வகைப்பட்டதாய் இருக்க, மற்றவர் ஓடிய வழி வேறு தடம் என அறியாமல் ஓடுதல் விரும்பிய திசைக்கு இட்டுச் செல்லாது என்பதைக் காட்டும். 

                                           

              1


மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஈழத்தமிழர்துயர்கள் முடிவுக்கு வரப்போவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகப் பலரும் நம்புவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் முயற்சிகளனைத்தும் தோற்கடிக்கப்பட்டு, யுத்த இறுதித் தருணத்தின் மனித உரிமை மீறல்கள் உலகின் முன் அம்பலமாகியுள்ளதால் சிங்களப் பேரினவாதிகள் பணிந்துபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏர்ப்படுத்தப் பட்டுவிட்டது; தீர்வுகளை இலங்கை அரசு நிரைவேற்றும்படியான நெருக்கடி இதன்வாயிலாக உருவாகிவிட்டது என்றே கரிதப்படுகிறது. உண்மையில் வெற்றிபெற்றது யார்? தோற்றுப்போவது எது?

வெற்றிபெற்ற தரப்பில் ஈழத் தமிழத் தேசியத்தையோ, அது காணவிழையும் தீர்வுத் திட்டங்கள் எதனையுமோ காணவியலவில்லை. இலங்கை தோற்றுப்போன ஒருதோற்றம், அது பலமான அடிவாங்கியிருப்பதால் வெளிப்பட்டுள்ளதாயினும், நிச்சயமாக சிங்களப் பேரினவாதம் தோற்றுபோகவில்லை; அது இன்னும் வலுமையுடன் சிங்கள மக்களைத்தன்வசம் அரவனைக்கும் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. உள்ளூர்மட்டத்தில் ஆதிக்க சக்தி இவ்வகையில் ஆதாயம் பெற, உலகளவில் அமெரிக்க மேலாதிக்கவாதிகள் இதன் மூலம் பெற்ற வெற்றி ஈழத் தமிழ்த் தேசியம் இதன்வாயிலாக ஆதாயத்துக்கு உரிமைகோரும் வாயப்பைத் தட்டிப்பறித்துள்ளது.

சிங்களப் பேரினவாத இராணுவம் புரிந்த கோரக் கொலைகள் இதன்வாயிலாக உலகுக்கு வெள்ளிச்சமாகி, தமிழ்த்தேசியம் ஒடுக்கப்பட்டமை அம்பலமாகியிருக்கிறதுதானே எனக்கூறலாம். இராணுவம் எதுவாயினும், அதைக் கையாளும் ஆதிக்கவாதிகள் எவ்வளவுதான் புனிதம் கற்பித்து துப்பாக்கி ஏந்திய கை தவிர்ந்து மற்றக்கையில் தம்மபிடகம், பைபிள், பகவத்கீதை, குர்ரான் ஆகியவற்றில் ஏதாயினும் ஒன்றுடன் சென்றிருப்பர் என உலக மக்களெவரும் நம்பிவிடுவதில்லை. யுத்தம் முடிவுக்கு வருகையில் கொலைகளுக்கு இருக்கும் பங்கு குறித்து இன்றைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நிகழும் சகாப்ததில் அனைத்து இனத்தவர்களுக்கும் ஏதோவொருவகையிலான அனுபவம் உண்டு.

என்ன, தமது இனம் அந்த யுத்தத்தை தொடுத்தது எனும்போது மட்டும் பழிபாவம் அனைத்தும் மறு தரப்புக்கே - தர்ம யுத்தத்தைப் புனிதமான பூரண நியாயங்களுடன் தமது தரப்பு முன்னெடுத்தது என ஒவ்வொரு இனத்தவர்களும் சொல்வர்; அவ்வளவே! சிங்கள மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு புனித யாத்திரை போகும்போது, அங்கு சாந்த சொரூபியாக முளைதுள்ள புத்தரே வெற்றியை ஈட்டித்தந்ததாய் நம்ப விரும்புவரேயன்றிதமது புதல்வர்களின் துப்பாக்கி கொடூரம் எதையும் புரிந்ததாய்க் கருத ஒருப்படமாட்டார்கள். துப்பாக்கி ஏந்திய தேச வீரர்களின் சிலைமுன் கண்ணீருகுக்கும்போது கோரக் கொலைகள் புரிந்த புலிகளை வீழ்த்திய சாகசங்கள் தெரியும்; அந்தக் கொடியவர்களின் துப்பாக்கிகள் பறிக்கப்பட்டது பளிச்சிடும்.   

எமக்கு மட்டும் வேறு மாதிரியா? புலியால் மேற்கொள்ளப்பட்ட பாசிசக் கொலைகள்பற்றி பேச்சுவந்தால் காந்தியின் மூன்று குரங்குகளின்சிலைபோல நாமும் உறைனிலைக்கு ஆளவோம். பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் புனிதமான விடுதலை யுத்தத்தையே புலிகள்முன்னெடுத்ததாயும் ,அதன் மேலாதிக்கப் பாசிசப் பண்பு என்ற பேச்செல்லாம் துரோகிகளும் எதிரிகளும் இட்டுக்கட்டிய பொய்களே என்றுந்தான் நம்ப விரும்புகிறார்கள்.சிங்கள - தமிழ் மக்கள் தத்தம் தரப்புக் குறித்து இவ்வாறு நம்ப 'விரும்புகிறார்கள்' எனஸ் சொல்லக் காரனம், அடி மனதில் தமது ஆட்களும் 'தவிர்க்க முடியாத சில கொடூரங்களை' செய்திருக்க இடமுண்டு என்ற புரிதல் உடையவர்கள் என்பதால் ஆகும்.

ஆக,யுத்தக் கொடூரங்கள் அம்பலமாக்கப்பட்டுள்ளது என்பதில் பெரிதாக வெற்றி எதுவுமில்லை. இந்த அம்பலப்படுத்தும் புனித காரியத்தை செய்த அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பண்ணிய கொலைகள் பற்றி உலக மக்கள் அறிய இயலாதவர்களா? எமக்கான தீர்மானம் எனப்பசப்பிய அதே நாளில் பலஸ்தீனர்களுக்கு தீங்கிழைக்கும் இஸ்ரவேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனியொரு நாடாக எதிர்த்து கொலை வெறிபிடித்த இஸ்ரவேலை காவாந்து பண்ண அமெரிக்கா முயலவில்லையா? இப்போது எமது விவகாரத்தில் தலை வைப்பதும் எமக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கா? இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவிட்ட இந்திய - சீன செல்வாக்கை மட்டுப்படுத்தித் தனது மேலாதிக்கத்தை மீளவலியுறுத்த அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த ஜெனீவாத் தீர்மானம்; அமெரிக்காவின் இந்தக் கபட நாடகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களும், பக்கவிளைவாகத் தமிழருக்கு சில தீர்வுச்சாத்தியங்கள் இதனால் எட்டப்படலாம் தானே என்று கூறுவர்.

அப்படி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்ற இலங்கை அர்சுக்கு இது பெரும் அடியாக இருந்த போதிலும் சிங்களப் பேரினவாதம் இதன் வாயிலாக வெற்றி பெற்றிருக்கிறது என மேலே குறிப்பிடப்பட்டிருந்தது. மனித உரிமை மீறலுடனான யுத்தக்கொடூரங்கள் நடந்தமையை இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது, அது குறித்த நியாயமான விசாரணையும் தீர்ப்பும் அவசியம் என்பதோடு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்த தீர்வுத்திட்டங்களைக் காலதாமதம் இன்றி உடன் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட்ட அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் தோற்றுப்போய் இலங்கைக்கு ஆதரவு கூடுதலாகியிருந்தால் இலங்கை அரசுக்கும் அது பிரதினிதித்துவப் படுத்தும் சிங்களப் பேரினவாதத்துக்கும் பாரிய வெற்றியாக இருந்திருக்கும். இப்போதுங்கூட ஒரு வாக்கினாலேயே தீர்மானம் வெற்றிபெற்றது; அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோன நாடுகளின் கோழைத்தனத்தின் பேறு எனக்கூறி தனது வீராவேசத்தையே அரசு தரப்பு மெச்சிக்கொண்டிருக்கிறது [24 நாடுகள் ஆதரித்தும் 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தபோது 8 நாடுகள் நடுனிலை வகித்தன. எவருக்கும் வாக்களிக்காத எட்டையும் தனக்கானது என அடாத்துப்பண்ணும் இந்தப் பேரினவாதிகள் மட்டும் மேலாதிக்க எண்ணம் கொண்டவர்கள் இல்லை, அமெரிக்க மேலாதிக்கம் மட்டும்தான் அடாத்துப் பண்ணி தனக்கு சார்பாக வாக்களிக்கப்பண்ணியுள்ளது!]

மேலாதிக்கம்புரியும் வாய்ப்புள்ளவர் அதனை எவ்வகையிலும் செய்ய ஏற்றதாக அமைந்த சகாப்தம் இது. ஏகாதிபத்தியமாய் முதலாளித்துவம் வடிவம் கொண்டபோது பிற தேசங்களை ஆக்கிரமித்து அவர்களது வளங்களையும் உழைப்பையும் சூறையாடினர். இரு உலக யுத்தங்களின் பின் குடியேற்ற நாடுகளில் பெரும்பாலானவை விடுதலைபெற்றன;அதுவரை முதல்னிலை வகித்த பிரித்தானியாவை முந்திக்கொண்டு சுதந்திரத்தை மதிப்பதாக கூறியவாறு தலைமை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மேலாதிக்கவாத அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் வாயிலாக உலகைச் சூறையாடுகிறது. சுதந்திரம் பெற்ற நாடுகள் ஒவ்வொன்றினுள்ளும் பெரும்பான்மையினங்கள் சிறு தேசிய இனங்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவதாகவே இன்றைய சமூக பொருளாதார முறை அமைந்துள்ளது. அமெரிக்க மேலாதிக்கம் பாரதூரமான தவறையுடையது என்பதற்காக ஏனைய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் சிங்களப் பேரினவாதம் புரிந்த ஆக்கிரமிப்புகளும் முறைகேடுகளும் சரியென்று ஆகிவிடாது (மறுதலையாக, ஜெனீவாத் தீர்மானத்தின் வாயிலாக சிங்களப் பேரினவாதிகளது மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பையும் ருசுப்படுத்திவிட்டதால் அமெரிக்க மேலாதிக்கவாதத்தின் இரத்தக் கறைகள் கழுவப்பட்டுவிடப்போவதில்லை).

பிரச்சினை, மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுவதிலிருந்து தேசிய இனங்கள் விடுதலைபெற்று சுய நிர்ணயத்தை வென்றெடுப்பதும் தொடர்ந்து சமத்துவம்மிக்க எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதும் எவ்வகையில் சாத்தியப்படுத்தப்பட இயலும் என்பதுதான். இலங்கை நிலவரத்தில் மேற்படி ஜெனீவா தீர்மானம் இந்த நோக்கத்துக்கு பாதக நிலையையே ஏற்படுத்தியுள்ளது. புத்த தம்மத்துடன் புனித யுத்தம் புரிந்த தம்மை உலக மேலாதிக்கத்தை வைத்து அமெரிக்கா அவமானப்படுத்த முயல்கிறயது இரு வாரங்களுக்கு முன்னே ஆரவாரமாக முழக்கமிட்ட படியே தான் உணவுப்பொருள் - எரிபொருள் - போக்குவரத்துக் கட்டண விலையேற்றங்களை சிங்களப் பேரினவாத அரசு நிறைவேற்றியது. 'மண்ணெண்ணையும் பாணும் அல்ல, அமெரிக்கா பறிக்க நினைக்கும் தன்மானத்தை மீட்பதே உடனடிப் பணி' எனச் சிங்கள மக்களை அணிதிரட்டி வீதிகள் தோறும் அரச தரப்பால் ஆர்ப்பாட்டம் நடாத்த முடிந்திருக்கிறது. அமெரிக்கபிரேரனைக்கு எதிர்ப்பு வலுத்து பேரினவாதத்தின் 'தன்மானம்' காக்கப்பட்டிருந்தால் கடிக்கும் வயிறும், மண்ணெண்ணையின்றி வாட்டும் இருளும் வீதியில் இறங்க சிங்கள மக்களைத் தூண்டியிருக்கலாம். இல்லாமல், தம்மை ஏமாற்றி சுகபோகங்களைப் பெருக்கும் சிங்களப் பேரினவாதக் கேடிகளின்பின்னால் உழைக்கும் சிங்கள மக்கள் தாம் ஒட்டாண்டிகளாக்கப் படுவதனைக் கண்டுகொள்ளாமலே போகவேண்டி வைத்துவிட்டதுஜெனீவாத் தீர்மானம்(இந்த வேடிக்கை வினோதங்களின் போது ஒரு அமைச்சர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார், சிறிய குடும்பமொன்றுக்கு மாதம் 7,500 ரூபாய் இலங்கையில் தாராளமாய்ப் போதுமாம்! தனது ஒரு மனி நேரச் செலவைச் சொல்லியிருப்பாரோ?)

தமது வாழ்வாதாரங்களைப் பறித்து ஒட்டாண்டிகளாக்கிக் கொண்டு, பாரிய சம்பள ஏற்றத்தாழ்வுகளுடன் தமது வளத்தைப் பெருக்கும் பேரினவாதக் கபடர்களின் பின்னே எதற்கு இந்தச் சிங்கள மக்கள் போக வேண்டும்? இங்கே தான் நாடு கடந்த ஈழ வாதிகள் பேரினவாதிகளின் கூட்டாளிகளாகிறார்கள். முப்பது வருட கால இரத்தம் சிந்தும் அரசியலாக இருந்த யுத்தத்தின் போது நேரடியாக பல மரணங்களையும் வாழ்வாதார இழப்புகளையும் அவர்கள் கண்டனர். இன்று இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் முன்னெடுப்பு வாயிலாக தமிழக ஈழ ஆத்ரவாளை மற்றும் நாடுகடந்த ஈழவாதிகள் அமெரிக்க அமெரிக்க மேலாதிக்கத் தலமையிலான மேலைத் தேசங்களுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதாக காண்கிறார்கள். முப்பது வருட யுத்தம் உண்மையில் இந்தியாவினால் நாடாத்தி மிடிக்கப்பட்ட ஒன்றே; இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தை பின்னின்று இயக்கியது இந்தியா என்பதில் எவ்வளவு உண்மை உண்டோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியத்தின் பேரில் பிரிவினைக் கோரிக்கையை வென்றெடுக்க செயற்பட்டபோது இந்த்ய மேலாதிக்க சக்திகளது கதை, வசனம், இயக்கத்துக்கு ஆட்பட்டு இயங்கி 'சிங்கள அரசின்' சுயாதிபத்தியத்தை இந்தியாவிடம் தாரைவார்க்க யாழ் வெள்ளாளத் தேசியம் வழியேற்படுத்திக் கொடுத்தது என்பதும் மெய்.

இலங்கையினுள் தனது மேலாதிக்கத்தை வென்றெடுப்பதற்கான முயற்சியில் சிங்களத் தேசியம் வெற்றியீட்டியுள்ளது. தனது ஆட்சிப் பரப்பினுள் கிழக்கும் - வடக்கும் இணைந்த தமிழர் தாயகக் கோரிக்கையுடன் சுயாட்சி கோரிப் போராடும் தமிழ்த் தேசியம் இந்திய அல்லது அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து தனது சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை தோற்கடிக்க முயல்கிறது என சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. அந்தவகையில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள் என்ற புரிதலைச் சிங்கள மக்கள் வதடைவதற்கு சிங்களப் பேரினவாதம் அனுமதிப்பதில்லை. பேரினவாதிகள் அந்தச் சதியில் வெல்லும் வகையிலேயே பிரிவினை நாட்டத்தை முன்வைக்கும் ஈழவாதத் தமிழ்த் தேசியர்கள் செயற்படுகிறார்கள்.

ஈழத் தமிழ்த் தேசியம் பிரிவினையின் அவசியமின்றியே தனது சுய நிர்ணயத்துக்காகப் போராடுவதற்கான அடிப்படை தேவைகள் நிறைந்திருக்கும் வாய்ப்பை யாழ் வீள்ளாளத் தேசியம் ஈழத் தமிழர் மீது தன் மேலாதிக்கத்தை நிலைனிறுத்துவதற்கு உரியதாக ஆக்கும்வகையில் முன்னெடுக்க விருப்புக்கொள்ளும் போது, தமிழ் மக்களை அணிதிரட்டிப் போராடுவதை விடவும் இந்திய - அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து செயற்படுவதன் வாயிலாக நிரைவு செய்ய உல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவே முயல்வர்.நாடு மேலாதிக்க சக்திகளிடம் இறைமையை இழப்பது பற்றி அவர்களுக்கு சலனங்கள் எதுவுமில்லை; ஈழமண்ணில் தமது மேலாதிக்கம் நிலவ வாய்ப்பளிக்கும் உலக மேலாதிக்கங்கள் இங்கு கோலோச்சுவது பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. தம்ழ் -சிங்கள ஆதிக்க சாதித் தேசியங்கள் தத்தமது மக்களை ஆளும்போது இன்றைய உலக நியதியாக உள்ள உலகமய மேலாதிக்க சக்தியின் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டியதுதான் என்பது யாழ் வெள்ளாளத் தேசியக் கணிப்பு.

அதற்கு ஆயுதமேந்தித் தலைமை தாங்கிய பிரபாகரன் ஐந்து வருடங்களின் முன் கூறிய வார்த்தைகள் இவ்விடயத்தில் கவனிப்புக்குரியது. வெரித்தாஸ் வானொலிப் பிரமுகர் ஒருவர் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த தொடரில் இதனைப் பதிவு செய்துள்ளார். இந்திய அதிகாரத் தரப்பு தன்னை புரிந்துகொள்ளாமல் நிராகரிப்பதாக அந்த நக்கீரன் தொடர் கட்டுரையாளரிடம் பிரபாகரன் விசனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ்த் தேசியத்துடன் பகைமை பாராட்டாமல் இந்திய அதிகாரத் தரப்பு தமிழீழம் அமைய அனுசரணையாக அமைந்தால், உருவாகும் தமிழீழம் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு உதவிகரமாய் எப்படி இஸ்ரேல் அமைந்துள்ளதோ அவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குரிய வலுவான தளமாக இருக்குமெனக் கூறியிருந்தார்.

இவ்வகையில் உலக மேலாதிக்கத்துக்குப் பணிந்தபடியே கிழக்கு - வடக்கு தமிழர் தவிர்த்து ஏனைய பகுதி சிங்கள மக்களையும் ஏனைய தேசிய இனங்களையும்  ஆதிக்க சாதிச் சிங்கள தேசியம் தனது ஒடுக்குமுறைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்பது யாழ் வெள்ளாளத் தேசிய்ம் முன்னிறுத்தும் வாய்ப்பு. கிழக்கு - வடக்கு தமிழர் தாயகத்தையும் தானே ஆளவேண்டும் என மேலாதிக்க வாய்ப்பை இராணுவ பலம் கொண்டு சிங்களப் பேரினவாதம் ஒடுக்குதலைத் தொடரும்போது விடுதலையை நேசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள், யாழ் வெள்ளாளத் தேசியம் (அதனை இன்று பிரதினிதித்துவப்படுத்தும் நாடுகடந்த ஈழவாதிகள்) தமது நலங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்ற புரிதல் கொள்ளாமலே, தமிழ்த் தேசிய மீட்சிக்காக யாழ் வெள்ளாளத் தேசியம் போராடுவதாக எண்ணிக்கொண்டு அதன் பின்னால் அணி திரளத் தூண்டப்படுகிறார்கள்.

ஆக, சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை வழங்குவதை விடவும் அவற்றின் மேல் அதிகாரம் செலுத்தும் பொருட்டு உலக மேலாதிக்கத்திடம் நாட்டின் இறைமையைத் தாரை வார்த்து விடலாம் என்பதாக பேரினவாதம்; தனது மக்களின் மீது அதிகாரம் தானே செலுத்தவேண்டும் என்பதற்கான வாய்ப்புக்காக பிற மேலாதிக்க சக்தியின் வேட்டைக் காடாகவும் நாட்டை மாற்றும் துடிப்பில் சிறு தேசிய இனம். இரு தரப்புக்கும் தமது சொந்த மக்களி அடிப்படை நலங்களில் அக்கறை இல்லை என்பது வெளிப்படை.ஆளும் சாதித் தேசியங்கள் சொந்த மக்களின் நலங்களுக்குத் துரோகமிழைத்து உலக மேலாதிக்கங்களுடன் கூடிக்குலாவும். ஏனைய சாதித் தேசியங்கள் தத்தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டுமாயின் தமது இனத்தின் ஆதிக்க சாதித் தேசியங்களுடன் முரண்பட்டவாறு தமக்குள் ஐக்கியமுறவுள்ள வாய்ப்பை தேடுவது உடனடி அவசிய வரலாற்றுப் பணியாகும்.



Wednesday, March 21, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன் / இது தொடர்பாக சில கருத்துப் பரிமாற்றங்கள் .....

"பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை " என்ற கட்டுரையை தமது இணைய இதழ்களில் வெளியிட்டு அதற்கான எதிர்வினைகளை நான் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து இணைய இதலாழர்களுக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்குமான பதிலை தனித்தனியாக தர இயலாமைக்கு மன்னிக்கவும்.. குறிப்புக்களாக பதில்களைத் தருகிறேன்.


ஒட்டுமொத்தமாக புலப்பெயர்வாளர்கள் தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டுவதாக கட்டுரை அமைக்கப் படவில்லை;மீறி அந்த தொனி ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.சில நண்பர்கள் எனது முகப்புப் புத்தகத்தில்  ஏற்றுக் கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.மேற்படி இரு தரப்பிலும் மூன்று பிரிவினர் உண்டு.அடைந்தால் ஈழம், இல்லையேல் தமிழருக்கும் கெடுதியே வந்தாலும் இலங்கை முழுதையும் ஆக்கிரமிப்பாளர் வசம் ஆக்குவோம் என்கிற நாடு கடந்த ஈழவாதிகள்.சுய நிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் வென்றெடுக்க முன்முடிவுகளைக் கடந்து ஆழமான தேடல்களை மேற்கொள்பவர்கள் இரண்டாம் பிரிவினர்.இரண்டிலும் சேராமல் அவ்வப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு தரப்பை தற்காலிகமாக ஆதரிக்கும் நடுநிலைச் சக்தி மூன்றாம் தரப்பினர்.

முதல் தரப்பினர் இங்கு சுயநிர்ணயத்துக்காகப் போராடக் கூடிய சக்திகளுடன் இணைந்து செயலில் முன்னேற ஏற்ற நடவடிக்கைகளில் செயர்ப்படுகிறார்கள்.கட்டுரையை ஏற்று கருத்துக் கூறிய நண்பர்கள் அத்தரப்பினர்.அவர்கள் எல்லோரும் கட்டுரையுடன் பூரண உடன்பாடு கொண்டிருப்பார் என்பதற்கில்லை.பிரதான அம்சம் இவ்வகையில் தேடல் அவசியம் என்பதால் ஆதரவை வெளிப்படுத்தினர்.நானும் முடிந்த முடிவு எதனையும் சொல்லிவிடவில்லை.அனைவரது சுதந்திரமானதும் சமத்துவமானதுமான கருத்தாடல்களின் வாயிலாகவே எமது விடுதலைக்கான பாதையைக் கண்டறியப் போகிறோம்.

ஈழவாதிகள் ஆதிக்கச் சாதித் தேசியத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் இந்தியாவின் ஐந்தாம் படையாகவும் இருப்பர்;அமெரிக்காவின் ஐந்தாம்படையினராகவும் இருப்பர்.ஆர்குத்தியும் அரிசியாக்கி,ஆண்டபரம்பரையினரான தம்மிடம் ஈழத்தைத் தந்துவிட்டால் சரி என்று இருப்பர்.இலங்கையில் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்துசிறு பான்மையினருடன் தமிழருக்கான சயநிர்ணய உரிமையை வடிவப்படுத்துவது என்ற தேடலில் ஈடுபடும் தமிழ் தேசியர்கள் ஈழ வாதிகள் எனப் பொருள் கொள்ளப்படவில்லை என்பதையும் ,அவர்கள் மேலே குறித்த முதல் பிரிவினர் என்பதால் ஈழவாதத் தொப்பியைப் போட்டுப் பார்த்து இடர்ப்பட வேண்டாம் என்பதையும் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கிறேன். 

தமிழக தமிழ்த் தேசியர்களிலும் இரு பிரிவினர் உண்டு.பௌசர்குறிப்பிட்டதைப் போல,இந்தியாவில் தமக்குப் பிரிவினை பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் பிரிய வாய்ப்பற்ற ஈழத்தை பிரிக்கிறோம் பேர்வழிகள் எனக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கிற சுரண்டலாளர்கள் ஒரு பிரிவினர்.மக்கள் விடுதலையின் பகுதியாக ஈழத்தமிழர் சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த முன் வருகிறவர்கள் அடுத்தபிரிவினர்.

தமிழகத்தின் ஈழப் பிரிவினர் இந்தியாவில் பிரிவினை பற்றி அக்கரைகொள்ளாமல் இருக்கக் காரணம் தமது சுரண்டல் நலனை முழு இந்தியாவிலும் கடைவிரித்திருப்பதுடன் இந்தியா மேலாதிக்க ஆக்கிரமிப்புக்குரிய வாய்ப்பை பிற நாடுகளுடன் ஏற்ப்படுத்தித்தருவதனையும் பயன்படுத்தி கொள்வதற்காகவே.எமது பிரச்சனையில் தீர்வுக்கான தேடலை இடையூறு செய்து வேண்டாத உணர்ச்சி முறுக்கேற்றல்களை அவர்களது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் நலனுக்காக முன்னெடுக்கிறார்கள் என்பதில் இரகசியம் எதுவுமில்லை.

தமிழக ஈழ ஆதரவாளர்கள் பட்டியலில் சீமான்,தங்கர்பச்சான் வகையறாக்கள் முன்னிலை வகிப்பதில் சினிமாக் கைத்தொழில் தமிழகத்தின் பிரதான அன்னியசெலாவனியாக இருக்கிறது என்பதுடன் தொடர்பானதே அன்றி தற்செயலானது அல்ல.இவர்களும் ஈழ வாதப் புலம் பெயர்வாளர்கள் ஜெனிவாவில் முன்னெடுக்கிற செயற்பபாடுகளும் சிங்கள மக்களை சிங்களப் பேரினவாதிகள் ஏமாற்றி அரவணைக்கவும் வாய்ப்பேர்ப்படுத்திக் கொடுத்துள்ளனர்.இரு தரப்பு இனவாதிகளும் தமிழ் சிங்கள மக்களை பிளவுபடுத்தியுள்ளனர்.அது அவர்களுக்கு ஆதாயமானது.மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகள் மக்கள் இவ்வகையில் பிளவுபடுத்தப்படுவதை எவ்வகையிலும் விரும்பமுடியாது.

இவ்வாறு சொல்வதனால் இன்றைய நிதர்சனத்தில் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள் என்ற உண்மையைக் காணத் தவறுகிறோம் என்று பொருள் இல்லை.இந்தநிளைமையை இரு தரப்பு இனவாதிகளே ஏற்ப்படுத்தியுள்ளனர் என்பதையே வற்புறுத்துகிறோம்..சிங்கள முற்போக்கு சக்திகள் பேரினவாத அரசுக்கு எதிராக விட்டுக்கொடுக்காத கருத்தியல் போராட்டத்தை நடாத்திய போது ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு இவர்கள் இடைஞ்சல் செய்கின்றனர் ,புலிகளுக்கு உதவுகின்றனர் என்ற பேரினவாத அரசின் சூழ்ச்சி பலிக்கும் யதார்த்தம் எவ்வகையில் ஏற்ப்படுத்தப் பட்டதென்பதை அறிய மாட்டோமா?

இந்த புற நிலைமையால் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் பாரதூரமான வரலாற்றுத்தவரைச் செய்கிறார்கள் என்பது உண்மையே.கடைசி நேர யுத்தத்தில் புத்தரின் தம்மபிடகத்தொடு தேச ஹீரோக்கள் தர்ம யுத்தம் செய்தனரே அன்றி பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது புலிகளாலேயே அன்றி பேரினவாத இராணுவத்தால் அல்ல என்று போலித்தனமான நம்பிக்கை கொள்ள சிங்கள மக்கள் விரும்புவது அபத்தமானது.இத்தகைய அபத்தம் சிங்கள மக்களுக்குக் குறையாத அளவில் தமிழ் மக்களிடமும் உண்டு.புலிகளின் பல தவறுகளை ஊக்கப்படுத்தும்வகையில் புலிகளை எப்போதும் நியாயப் படுத்தி வந்த மக்களின் பொறுப்பற்ற ஆதரவே புலிகள் தறிகெட்டு செயற்ப்பட்டு அழிவைத்தேட நேர்ந்தது.

இன்றைய மோசமான தவறுக்கு சிங்கள மக்கள் ஆட்பட்டுள்ளமையால் பிறரோடு இணக்கமாக வாழ்வதில் ஒருசில இனங்களில் ஒன்றாக சிங்கள இனம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.நிச்சயமாக யாழ்ப்பாணத் தலைமையிலான ஈழத்தேசிய சக்தி உன்னத இனத்தின் பக்கத்துக்குரியதல்ல.மட்டுமன்றி ஆக்கிரமிப்புக் குணாம்சம் என்ற பண்பில் இஸ்ற்றவேல் யூதர்களுடன் முதலிடத்துக்காகப் போட்டியிடுகிறவர்களாக நாம் இருக்கிறோம்.இந்தப் பண்புள்ள ஆதிக்க சாதித் தேசியத்திலிருந்து உழைக்கும் மக்களின் சார்பான தமிழ் தேசிய வெற்றிக்காக எப்படி முயல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

அதை விடவும் சிங்கள முற்போக்கு சக்திகளின் சவாலும் கடினமானதே.எண்பதாம் ஆண்டுகளில் இருந்தே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பக்கம் வருகிற முற்போக்காளர்கள் வேட்டையாடப்பட்டு வரப்பட்டுள்ளனர்.இன்றும் அதுவே நிலை.தவிர சிங்களவர் இலங்கையில் மட்டுமே வாழும் போது,இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களும் மத்தியகிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களும் பிறருக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாயே உள்ளனர்  எனக்கூறி  சிங்கள மக்கள் சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கிற நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.

வர்க்க ஒடுக்குமுறை ஊடாக மட்டுமன்றி சாதி ஏற்றத்தாழ்வு சார்ந்த சமூக ஒடுக்கு முறையூடாகவும் வரலாறு இயங்கி வருகிறது.இன்றைய முதலாளித்துவ அமைப்பில் சமூக ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையாக வடிவம் கொண்டுள்ளது.சின்ன மீன் ,பெரிய மீன் ,பென்னாம்பெரிய மீன் விழுங்குவது தேசிய ஒடுக்கலிலும் நடக்கிறது.சிங்களப் பேரினம்  பெரிய மீன் என்றால் இந்தியா பென்னாம் பெரிய மீனாக சிங்கலத்தேசியத்தையும் ஆக்கிரமித்துள்ளது.இதற்கு மீனவர் பிரச்சனையை கட்டுரையில் உதாரனமாக்கியிருந்தேன் .கட்டுரையிலேயே மீனவர் எதிர் நோக்கும் சிக்கல் பற்றி எழுத்யுல்லேன்;அதுபற்றி தமிழ்த் தேசியர்கள் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற அதிர்ப்தியைத் தெரிவித்திருந்தேன்.

இலங்கையின் மீனவர்களை தலித்கள் என்று கூறமுடியுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.வேறுபட்ட சாதியினர் இங்கு மீனவர்கள்;அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாயிருந்து அதற்கு எதிராக போராடி வெற்றி ஈட்டியுள்ளனர்.இருபதாம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் முன்னோடி அமைப்பான மாணவர் சங்கம் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.அப்போரட்டப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்ந்த போது அணைத்து சாதி முட்போக்காளர்களது ஆதரவுடன் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் முன்நேரிவன்தனர்.நாற்பதுகளில் தோன்றிய கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளைச் சந்தித்த போதிலும் அனைத்துப் பிரிவினரும் தத்தமது கருத்தியல் நிலை நின்று ஒடுக்கப்பட்டவர்களின் சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்தனர்.அந்தவகையில் தலித்தியத் தேவை இங்கு இல்லை எனும் பொருளில் மீனவர்கள் இந்தியா அர்த்தப்படுத்தும் வகையில் தலித் அல்ல;அதேவேளை தாழ்த்தப்பட்டவர்கள் என்று மட்டுமன்றி ஒடுக்கப்பட்டவர்கள் என்ர்கூடச் சொல்லக்கூடாது ,தலித்துக்கள் என்பதே போர்க்குணம் மிக்கது என்பதால் அவ்வாரே அழைக்கவேண்டும் என்ற குரலையும் கவனம் கொள்வது அவசியம்.

இறுதியாக ,சீனா பற்றிய கேள்வி.சீனா எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவும் இல்லை,மேலாதிக்கம் புரியும் நடவடிக்கைகளில் இறங்கவும் இல்லை.இன்றைய நிலையில் அமெரிக்காவும்,இந்தியாவுமே எமது நாட்டையும் எமது தேசிய இனப் பிரச்சனையையும் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேட முனைகின்றன.சீனா அவ்வாறு செய்ய முனைந்தால் கண்டிப்போம்.

மீண்டும் ,சுதந்திரமான கருத்தாடலை வலியுறுத்தி தற்காலிகமாய் விடை பெறுகிறேன் நன்றி. தொடர்வேன்,,, 
-- 

Thursday, March 15, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன்


 பிரிந்து செல்வதை மறுக்கும்
சுய நிர்ணய உரிமை
                                                     -ந.இரவீந்திரன்

மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதன் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயுள்ளது.
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கில் பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் பிதாமகனான ஜே.ஆர் கையாண்ட தந்திரோபாயம் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளதுளூ மக்கள் விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.
இவர்களது கூட்டு தமிழகத் தமிழுணர்வாளர்களுடனானது. இவ்விரு சக்திகளும் எமக்கு உதவுபவர்களா? பிரிவினை இல்லாத சுயநிர்ணய உரிமையை ஏன் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது? எமது வடபிரதேசக் கடல் வளம் தொடர்பான சர்ச்சையிலிருந்து எமது விவாதத்தை முன்னெடுப்போம்.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடல் எல்லைகளை மீறுவதனால் எமது மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தடைசெய்யப்பட்ட வலைகளை அவர்கள் பாவிப்பதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளின் பிரவேசம் மன்னார், யாழ்ப்பாணம் எனப் பரந்து விரிந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அப்பாலும் சென்றுவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 2011.12.14 அன்று தினக்குரல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற செய்தியின் ஒரு பகுதி. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பட்ஜெட் விவாதத்தின்போது அவையில் ஆற்றிய உரையாக அச்செய்தி அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்ததும் எமது மீனவர்கள் கடற்றொழிலுக்காக அனுமதிபெறும் பாஸ் நடைமுறை இன்னமும் தொடர்வது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சந்தைப்படுத்துவதற்கு முயலும்போது எதிர்கொள்ளும் பாதுகாப்புப் படையின் கெடுபிடிகளையும் அவ்வுரையில் குறிப்பிட அவர் தவறவில்லை.
படையினர் வடபகுதி மீனவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேவேளை, தென்பகுதிச் சிங்கள மீனவர்கள் வடபிரதேசக் கடல் வளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாராளமாக இடமளிப்பதாக அவ்வப்போது செய்திகள் அடிபடுவதையும் அவதானித்து வருகிறோம். ஆயினும், வடபகுதித் தமிழ் மீனவர்கள் தம்மளவில் சிங்கள மீனவர்களிடமிருந்து பெறும் நெருக்கடிகளை விடவும் இந்தியத் தமிழக இழுவைப் படகுகளின் பிரசன்னம் ஏற்படுத்தும் கடல்வள அபகரிப்பால் எதிர்நோக்கும் இடர்பாட்டையே தாங்கவியலாததாகக் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடே பாராளுமன்றத்தில் எழுந்த குரல்.
தமிழக – வடபிரதேச – தெற்கு மீனவர்கள் எனும் முத்தரப்பு நெருக்கடி குறித்து மீனவர் சங்கங்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசியுள்ளனர். கடல்வளப் பயன்பாட்டின் கள நிலவரங்களில் அவர்களிடையே கை கலப்புகள் இடம்பெற்ற போதிலும், ஒரே வர்க்க உணர்வு, மேற்கிளர்ந்து தமக்குள் சுமூகத் தீர்வை எட்டியதோடு, அவ்வப்போது நீடித்த தீர்வுக்காக மீனவர் சங்கங்களின் இத்தகைய சந்திப்புகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது வரவேற்புக்குரியது. அவை திருப்திகரமான முடிவுகளை எட்ட இயலா வகையில் அவர்களது பிரச்சினைகளையும் கடந்த வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளை வளர்ப்பனவாய் உள்ளன.
இன்று பாராளுமன்றத்தினுள் யாழ்- மன்னார் மீனவர்களின் உரிமைக் குரலை எழுப்பும்போது தமிழக மீனவர்கள் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள்ளூ இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத சக்திகளால் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாவதைக் கண்டித்துத் தமிழுணர்வாளர்கள் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வேளைகளில் தமிழக மீனவர்கள் அவர்களோடு கைகோர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். 'சிங்களக் கடற்படை எம்மைத் தாக்குகிறது -  உடைமைகளை அபகரிக்கிறது -  கொலை செய்கிறது' எனத் தமிழக மீனவர்கள் போராடும் எந்தச் சந்தர்ப்பங்களிலும், அங்குள்ள தமிழுணர்வாளர்கள் தம்மை ஆதரித்து எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கியதில்லை எனத் தமிழக மீனவர்கள் தமிழுணர்வாளர்கள்மேல் குற்றச்சாட்டு முன்வைப்பதையும் கண்டுள்ளோம்.
இலங்கை வடபிரதேச மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் கெடுதி செய்கிறார்கள் என்பதாலேதான் அவ்வாறு தமிழகத் தமிழுணர்வாளர்கள் தமிழக மீனவர்களுக்கு எந்த ஆதரவையும் காட்டாது இருக்கிறார்களோ? அப்படி ஒரு குற்றச்சாட்டை தமிழுணர்வாளர்கள் முன்வைத்ததில்லை. அவர்களுக்கு உண்மையில் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ, அவர்களைச் சிங்களப் படையினர் கொல்வது பற்றியோ உணர்வு கொள்ள இயலுவதில்லை. அங்கே தமிழுக்கு என்ன அவலம் வந்துவிட்டது? அன்றாட, வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடுகிறவர்களது அற்பப் பிரச்சினைக்கு எல்லாம் தமிழுணர்வைக் கிளர்ந்தெழச் செய்தால் தமிழுக்கு ஓர் அச்சுறுத்தல் நேரும்போது பெரிதாக எதுவும் பண்ணவியலாமல் போய்விடுமே!
வயிற்றுப்பாடுகள் என்ற அற்ப விவகாரங்களுக்கு ஆட்படாத புனிதமான இந்தத் தமிழுணர்வாளர்களில் இரு பிரிவினர் உள்ளனர். எங்கேயும் இருக்க முடிவதைப்போல! தமிழுக்கு அவலம் எனக் கருதி அவசர கோலமாய்த் தீப்பாயும் நிலைவரை செல்கிற உண்மையான உணர்வாளர்கள் - இதனைத் தமது பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களுக்காக முதலீடுகளாக ஆக்கிக்கொள்ளும் போலிகள் என்பன அத்தகைய இரு பிரிவுகள். ஆரம்பத்தில் உண்மை உணர்வாளர்களாய் இருந்து, கால ஓட்டத்தில் போலிகளாய் ஆனவர்களும் உண்டுளூ ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆதாயமே குறியென இருப்பவர்களும் குறையவில்லை. முதல் உந்துதல் போலவே மடியும் வரை உண்மை உணர்வோடு வாழ்ந்தவர்களும் உண்டுளூ போலிகளே பயன்பெறும் அர்த்தமற்ற விவகாரம் இது என விழிப்படைந்து அனுபவ முதிர்ச்சியில் விரக்தியுற்று ஓதுங்குவோரே ஏராளம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நலனின் உந்துதலுடன் செயற்படும் போலிகளின் கஜானாவைப் பெருக்கவும் - அரசியல் வியாபாரிகளின் வாக்கு வங்கியை ஊதிப் பெருக்க வைக்கவுமே தமிழுணர்வு தூண்டப்பட்டுவரக் காண்கிறோம். மீனவர்களின் பிரச்சினையில் தமிழக மீனவர்களை ஆதரிக்க முனைந்தால் இலங்கை வடபிரதேச மீனவர்களைப் பகைக்க நேரும். அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைளூ புலம்பெயர் ஈழப்பற்றாளர்கள் தவறாகக் கருதிவிட்டால்தான் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு கஜானாவும் வற்றிப்போக நேரும்.
இந்தத் தமிழுணர்வாளர்கள் மீனவர்களின் உயிர்ப்பான போராட்டங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல், போலியான தமிழ்ப் பாதுகாப்பு முழக்கங்களுக்காய் இளம் இரத்தங்களைச் சூடேற்ற முயல்வது இத்தகைய குறுகிய மனப்பாங்கில் ஆதாயம் தேடுவதற்கானது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அத்தகையவர்களின் போலித்தனங்களை விளங்கிக் கொண்டு தமக்கான விளம்பரத்துக்காக அவர்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேற்றுக் களிபேருவகை கொள்ளச்செய்யும் புலம்பெயர் கனவான்கள் - சீமாட்டிகளின் ஆசைகளும் மறைபொருள்கள் அல்ல. இத்தகையவர்களது பணப் பரிமாற்ற – புகழ்வெறி என்பவற்றுக்கு அப்பால் உயிர்ப்பான வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தத் தெற்காசியப் பிரச்சினை என்பதை சரியாகப் புரிந்து கொள்வதென்பது வேறொரு தளத்துக்கானது.
ஐஐ
இலங்கைத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் சிங்களப் பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு சற்றும் குறைவற்றதாய்த் தமிழகத்தின் சூறையாடலுக்கான மேலாதிக்கம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளமையை வெளிப்படுத்துவதாக இந்த மீனவர் பிரச்சினை அமைந்துள்ளது. வாழ்க்கைப் போராட்ட நிதர்சனம் பட்டவர்த்தனமாய் உணர்த்தும் இந்த உண்மையைக் கனக்கப் படித்த யாழ்ப்பாண மூளை வீங்கிகள் விளங்கிக்கொள்ள முடியல்வதில்லை. வேறு தளங்களில் தமிழகம் எம்மை அபகரிப்பது பற்றிய உணர்வுகொள்ளாமலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
வேறெதையும்விட எமக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே எமது விடுதலையின் முதல் எதிரிகள்! எமது பொருளியல் வளத்தைச் சுரண்டுவதை விடவும், எம்மீது கருத்தியல் மேலாதிக்கம் செய்து எமது மண்ணில் நட்புறவு கொள்ளவேண்டிய சொந்தச் சகோதரர்களிடையே மோதலை வளர்ப்பவர்களாய்த் தமிழகத் தமிழுணர்வாளர்கள் உள்ளனர். அவர்களது பிரதான வேட்டைக்காடாக புலம்பெயர் தமிழர்களது வளங்களும், மனங்களும் இருக்கின்றனளூ தமிழகப் பெரு முதலாளிகளின் ஏனைய சூறையாடல் களங்கள் இங்கே ஒட்டுமொத்தமான இலங்கை மண்ணையும் அபகரிப்பதற்கான மன இசைவையும் அவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கே பேரினவாதச் சக்திகள் மிகுந்த சுயாதிபத்தியத்துடன் பல்வெறு நாடுகளோடு உறவாட இயலுவதாகத் தோற்றம் காட்டியபோதிலும், உண்மையில் இந்தியாவிடம் இலங்கை தனது சுயநிர்ணயத்தை இழந்து போயுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆக, சிங்கள மக்கள் ஏனைய சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க மறுத்து, இறுதியில் தம்மிடம் இருந்ததையும் கைநழுவ விட்டுள்ளனர்.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் வெற்றி கொள்ளப்பட்டதில் அதிக ஆதாயத்தைப் பெற்றவர்கள் தமிழகப் பெரு முதலாளிகளே. இங்கே தமிழக மீனவர்களின் மேலாதிக்கச் சூறையாடலைப் பேசுகிற எமது தமிழபிமான அரசியல் கனவான்கள் இத்தகைய தமிழக - இந்தியப் பெருமுதலாளிகளது மேலாதிக்கத்தையோ, சூறையாடலையோ பற்றிப் பேசுவதில்லை. உண்மையில் தமிழக மீனவர்கள் எமது மீனவர்களைப் பாதிக்கும் சூறையாடலைச் செய்தபோதிலும், கடின உழைப்புக்கான அர்ப்பணிப்பையும் உடையவர்கள். அவர்களது தவறை உணர்த்தும் அதேவேளை, அதை விடவும் கொடிய சுரண்டலாளர்களான தமிழக - இந்தியப் பெரு முதலாளிகளையும், அவர்களது கருத்தியல் அடிவருடிகளான தமிழுணர்வாளர்களது கபடத் தனங்களையம் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் இத்தகைய பெரு முதலாளிகளுக்கும், தமிழுணர்வுக் கபட வேடதாரிகளுக்கும் எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்காகப் போராடும் தமிழக முற்போது சக்திகள் மட்டுமே அவர்களுடன் தோள் சேர்ந்து எமக்குமான நியாயத் தீர்வுகள் குறித்த அக்கறையுடையவர்களாய் இயங்கி வருகின்றனர். அந்த முற்போக்கு சக்திகள் தமிழுணர்வைப் போலிக் கபடதாரிகளிடம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களும் அனந்தம்.
ஐஐஐ
இலங்கையினுள் ஆளும் சிங்கள இனம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி மேலாதிக்கம் புரிகிறது. அந்த ஆளும் இனமும் இந்திய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறது. இந்த மேலாதிக்கம் செய்யும் சக்திகளுக்குள்ளும் ஒடுக்கப்படுவோர் உண்டு. தமிழகம் உழைக்கும் மீனவர்களை ஒடுக்கப்பட்டோராயே நடாத்துகிறது. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா முழுமையிலும் தலித் மக்கள் போராடுவதை நிறுத்த முடிவதில்லை.
இத்தகைய அனைத்துச் சமூக சக்திகளிடையேயும் சுரண்டுவோர் - உழைப்போர் என்கிற வர்க்க பேதங்களும் உள்ளன. முன்னர், இந்த உழைக்கும் மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும் (இன – மத – சாதி பேதங்களை) கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதனை அதிகமாய் வலியுறுத்தியுள்ளோம். அது சாத்தியப்படாத வண்ணம் மேலாதிக்க சக்தி – ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு எனும் பேதம் இன்று வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம்.
ஆயினும், இன்றுங்கூட இன, மத, சாதி பேதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதன் அவசியம் இன்னும் அதிக கவனிப்பைப் பெறும் வகையில் வலியுறுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை மேலாதிக்க சக்தி – சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படும் பிரிவினர் என்ற பேதம் நிதர்சனமாயுள்ள உண்மையையும் கவனங் கொள்வது அவசியமாகும். மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், தம்மவரால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுத்துத் தனக்கான ஐக்கியப்படும் சக்தியை அணிதிரட்டுவதன் வாயிலாக மட்டுமே தமக்கான விடுதலையை வென்றெடுக்க இயலும். அதேபொல ஒடுக்கப்படும் சமூகப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் தம்மைச் சுரண்டும் தமது சமூக பெருந்தனக்காரர்களோடு தவிர்க்கவியலாமல் ஐக்கியப்பட நேர்ந்தபோதிலும் இனவாத – மதவாத – சாதியவாத மனப்பாங்குக்கு ஆட்படாமல், அனைத்து உழைக்கும் மக்களோடு ஐக்கியமுறுவதற்கு முதன்மை கொடுப்பது அவசியம். இவை குறித்துப் பேசுவது இன்னொரு அரசியல் பரிமாணமாக விரியத்தக்கது.
ஐஏ
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் - சுரண்டலையும் தகர்க்கப் போராடும் மார்க்கத்துக்கான கருத்தியலையும், கோட்பாடுகளையும், போராட்ட வழிமுறைகளையும் வழங்கும் மார்க்சியம் - லெனினியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற சிந்தனையை எம்மிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிந்தனைமுறை கால – தேச நிலவரங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிற ஒன்றாயிலும் உலகளவிலான மார்க்சிய அணியினரே போதிய சிரத்தையுடன் அதனை விருத்தியுறச் செய்வதற்குத் தவறியுள்ளனர்ளூ அவ்வாறு விருத்தியுறுத்த நெறிப்படுத்தும் முன்னுதாரணங்கள் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இருக்கவே செய்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கொதிநிலை நீடித்த ஐரோப்பிய மண்ணில் ஊற்றெடுத்த மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என முழக்கமிட்டபோது பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாகவே ஐரோப்பா முழுமையும் முதலில் சோஷலிஸத்தை வெற்றி கொண்டு, அதனால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கும் அதனை யதார்த்தமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தவகையிலான உலகப் புரட்சியின் சாத்தியம் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலேயே தகர்ந்து போயிருந்தது.
அப்போது ஏகாதிபத்தியக் கட்டத்துக்கு முதலாளித்துவமும் பரிணமித்திருந்ததுளூ இன்னமும் ஐரோப்பிய மண்ணில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கொந்தளிப்பு நீடித்திருந்தது. புரட்சியின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்து ருஷ்யாவில் தீவிரம் பெற்றிருந்தது. ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பல்வேறு வர்க்கங்களும் - ஜாரிஸ ருஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங்களும் ஐக்கியப்பட்டுப் போராடும் விருப்புடையனவாய் இருந்தன. இத்தகைய ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலகப் புரட்சியின் சாத்தியமின்மையை வலியுறுத்திய லெனின், சமனற்ற வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவம் பலவீனமுற்றிருக்கும் தனியொரு நாட்டில் சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலும் எனக் காட்டினார். தனியே பாட்டாளி வர்க்கம் என்றில்லாமல் விவசாயிகளோடான ஐக்கியத்திலான புரட்சியைக் கையேற்க வேண்டுமென அழுத்தினார்ளூ ஒடுக்கப்பட்ட தேசங்களை அந்தப் புரட்சியில் ஐக்கியப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும், ஏகாதிபத்தியக் கட்டத்தினதும் வளர்ச்சி நிலைக்குரிய மார்க்சியத்தின் விருத்தியான லெனினியம் 'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்' என வளர்ச்சி பெற்ற சுலோகத்தை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோஷலிஸம் வென்றெடுக்கப்படுவது நடைமுறையில் நிகழவில்லை. முதலாளித்துவம் தனது தந்திரோபாயங்களில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பின்னடைவுகளுக்கு உள்ளானது. ஆயினும் புரட்சியின் மையம் இன்னும் கிழக்கு நோக்கி நகர்ந்து குடியேற்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை புதிய வடிவப் பரிமாணத்தைப் பெற்றிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி வர்க்கத்தைப் பிரதான சக்தியாக அணி திரட்டி பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது மா ஓசேதுங் சிந்தனை என்ற புதிய வடிவத்தை மார்க்சிய – லெனினியம் பெற்றிருந்தது. ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த சீனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை பலவீனத்தை ஏற்படுத்திவிடும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. மார்க்சிய – லெனினியம் வசனங்களில் முடங்கியதாயில்லாத விஞ்ஞானபூர்வ சிந்தனை முறை என்பதால், ஏகாதிபத்திய நாடாக இருந்த ருஷ்ய நிலைக்குரியதாக லெனின் வலியுறத்திய சுயநரிணய உரிமை இலக்கணத்தில் சீ.க.க. மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரிந்து செல்லும் உரிமை அற்ற சுயநிர்ணய உரிமையைச் சீ.க.க சோஷலிஸ சீனத்தில் வெற்றிகரமாய்ப் பிரயோகித்து உலகின் முதல்நிலை நாடாக இன்று சீனா வளர்ச்சிபெறும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையை வழிகாட்டு நெறியாக வரித்துக்கொண்ட தேசிய விடுதலபை; போரட்டமூடாகவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்துச் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினையையும் சுயநிர்ணயப் பிரயோகத்தையும் மேலும் வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலவரத்துக்கு அமைவாக மார்க்சியர்கள் விருத்தி செய்துள்ளனர்.
            பிரதானமாய், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்ற லெனின் பார்வையிலிருந்து விடுபட்டு அனைத்து வர்க்கங்களிடமும் தேசிய உணர்வு உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் தேசியம் சீன – சோவியத் பிளவில் வகித்த பாத்திரம் இன்றைய மீளவாசிப்பில் வெளிப்பட்டுவரக் காணலாம்ளூ கோட்பாட்டு விவாதத்தை இரு பாட்டாளி வர்க்க அரசியல் அணிகளும் தமக்கான தேசிய உணர்வு இல்லாதிருந்திருப்பின் சுமுகநிலையில் அணுகி, பாட்டாளி வர்க்க இயக்கம் இன்றைய பின்னடைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்திருக்கவியலும்.
     எவ்வாறாயினும், எமது தேசியப் பிரச்சினையை எமது வரலாற்று செல்நெறியூடு மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையைப் பிரயோகித்துப் புதிய அணுகுமுறையில் கண்டறிய வழிப்படுத்துவதாய் இந்த வரலாற்று உண்மை அமைந்துள்ளமை தெளிவு. வர்க்கப் பிளவுறாமல் விவசாய வாய்ப்புப் பெற்ற இனமரபுக் குழு ஆளும் சாதியாக மாறி ஏனைய இனமரபுக் குழுக்களை ஒடுக்கப்படும் மற்றும் இடைச்சாதிகளாக மாற்றி சமூக வர்க்கங்களாய் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதாக எமது ஏற்றத்தாழ்வு சமூக வரலாறு அமைந்துள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் ஏகாதிபத்திய நாட்டினால் சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுவது போன்ற ஒடுக்கப்படும் சாதிகளும் சமூக வர்க்கங்களாய்ச் சுரண்டப்படுகின்றன.
     அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் தலித் மக்கள் தமது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாயுள்ளனர். அதேவேளை, தலித் பிரிவினரான தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தின்மீது மேலாதிக்கம் புரிய அவாப்படுகின்றனர். அவர்களும் எம்மைப் போன்ற தமிழர்களே ஆயினும் அவர்கள் இந்திய தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்துக்குரியவர்கள். (அதனுள் மூன்றாவது தேசிய வடிவமாய் அவர்களுக்கான தலித் தேசியத்தையும் உடையவர்கள்.) எமது மீனவர்கள் தலித் தேசியமாய் யாழ் வெள்ளாளத் தேசிய மேலாதிக்கத்துக்கு அடங்கிப் போகாத சுயநிர்ணயத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணயத்தையும் வலியுறத்த வேண்டியவர்களாயுள்ளனர்.
     எமது கடல்வளம் இந்திய மேலாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்படும்போது, தவிர்க்கவியலாமல் எமது தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்தின் பகுதி என்பதை ஏற்கும் நிர்ப்பந்தத்தையுடையவர்களாய் உள்ளோம். இந்தியத் தேசியம் - தமிழகத் தமிழ்த் தேசியம் - தலித் தேசியம் என்பவற்றை போராடட்ங்களினூடே அவர்கள் பேணும் அதேவேளை எம்மை இவ்வகையில் இயங்கவியலாவகையில் மிக மோசமாய்ப் பிளவுபடுத்தியுள்ளனர். இந்தச் சதிக்கு நாம் தொடர்ந்து பலியாக வேண்டுமா? இந்தியாவினுள் தலித் தேசியம் - இனத் தேசியம் என்பன பிரிவினை உணர்வின்றி ஒன்றுபட்ட இந்தியத் தேசியத்தினுள் தமது சுயநிர்ணய உரிமையை விரிவுபடுத்த ஏற்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளதைப் போல எம்மால் இயலாதா?
     நாம் அவ்வகையில் இயங்காற்றல் கொள்ள இயலாத வகையில் தமிழக - இந்திய மேலாதிக்கவாதச் சக்திகளின் கருத்தியல் ஆக்கிரமிப்புப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே உலக மேலததிக்கவாதத்தின் ஐந்தாம் படையாக இருந்து புலம்பெயர் தமிழுணர்வாளர்களும் எமது விடுதலைக்கு கேடு செய்கிறவர்களாயுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் இனியும் இலங்கை அல்லது ஈழத்தமிழ்த் தேசியத்துக்குரியவர்களல்லளூ தத்தமது நாட்டு தேசியத்துக்கு உட்பட்ட தமிழ்த் தேசியத்தை வேண்டுமாயின் பெற்றுக் கொள்க - இந்திய தமிழ்த் தேசியம், இலங்கையின் ஈழத்தமிழ்த் தேசியம் என இங்கே வேறுபட்டு இருப்பதுபோல, இரத்தபந்தத்தால் எம்மீது உண்மைப் பற்று இருப்பின், நாம் எமக்கான விவாதங்கள் வாயிலாக வந்தடையும் தீர்வுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் உங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
     அதேவேளை புலம்பெயர் இனவாதிகளைக் காரணமாயக் காட்டி எமது சுயநிர்ணய உரிமையைச் சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் நாம் பிரிவினையற்ற சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகிறோம் என அழுத்தியுரைப்போம். ஏனைய இனங்களோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்புகளுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதிகளுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது இந்தப் பிரிவினை அச்சத்தினாலேயே. கடந்தகால வரலாற்றில் புலிக்கொடி ஏந்திய சோழர்களின் படையெடுப்பினால் சிங்கள பண்பாட்டின் அநுராதபுர – பொலனறுவ நகரங்கள் அழிக்கப்பட்டமை பற்றிய அச்சம் அவர்களிடம் எப்போதும் மீள் வலியுறுத்தப்படுவதுண்டு. பிரிந்து செல்லும் ஈழம் தமக்கு மீள இயலாத அழிவு என அவர்கள் அச்சங் கொள்வதை நியாயமற்றதெனக் கூறவியலாது.
     அந்தவகையில் எமது பிரத்தியேக இருப்பையும், வரலாற்றுக் கட்டத்தையும் கவனங் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்போம். பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் குறித்து அழுத்தி வலியுறுத்தி உழைக்கும் சிங்கள மக்களது போராட்டங்களுடன் இணைந்து செயற்பட்டு எமது தேசிய இனத் தீர்வுக்கு வழிசமைப்போம். அனைத்துச் சிறு தேசிய இனங்களது சுயநிர்ணய அமைப்பாக்கங்களைச் சரியான முறையில் வடிவமைப்போம்ளூ சிக்கலான இந்த விவகாரத்தில் ஈடுபடாமல் பொதுப்படப் பேசிக் காலங்கழிப்பது தொடர்ந்தும் எமது அடிமைத்தனத்தை நீடிக்கவே வழிகோலும். புதிய தலைமுறை அதனைத் தகர்த்து வரலாற்றைக் கையேற்று மக்கள் விடுதலையை வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம்.
'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்று சேருங்கள்'

நன்றி மல்லிகை  47 வது ஆண்டுமலர்