Wednesday, September 12, 2012

தேடலுடன் ... கூடங்குளமும்.கிழக்கும்,சுயநிர்ணயமும்


  பாரதியின் நினைவை வலியுறுத்திய செப்ரெம்பர் 11 கடந்த ஒரு நாளின் பின்னரே இந்தச் சமூக உரையாடலுக்குக் குந்தியிருக்கிறேன்; வேகமாகப் பல சங்கதிகள் கடந்து போய்க் கொண்டிருக்கையில் 'என்னத்தைப் பேசி, என்னத்தைக் கண்டோம்' என்ற வெறுப்பே மிஞ்சியிருந்ததால் ஆற இருந்து எதுவும் பேச வரவில்லை. வேளாங்கண்ணி- பூண்டி மாதா கோயில்களுக்கு யாத்திரை சென்ற சாதாரண சிங்கள மக்களைத் தாக்கியதை ஈழத்தமிழருக்கான மாபெரும் பிரதியுபகாரமாக தமிழக தமிழ்த் தேசியர்கள் மார்தட்டிக் கூறும்போது, அந்த இனவாதச் சங்காரத்தின் முன்னே கையறு நிலையில் வேதனையை மட்டும் பெருமூச்சாக்கி சில எதிர்ப்புக்குரல்களுடன் ஒதுங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட ஜனநாயக சக்திகளைக் குறைகூற எதுவுமில்லை என்று புரிந்தது. புரிதலின் மறுகரையாய், இலங்கைத் தமிழர் மீதான இனச்சங்கார யுத்த முன்னெடுப்பில் சிங்கள முற்போக்கு சக்திகள் போதிய எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை எனக்குற்றம் சுமத்துவது எத்தனை அபத்தம் எனப் புரிந்தது. உண்மையில் அத்தகைய நல்லெண்ணங்கொண்ட பல சிங்கள ஜனநாயகர்கள் பேரினவாத அரசுக்கு எதிரான ஆக்கிரோசமான பதிவுகளைப் பல்வேறு களங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழ்-சிங்கள பாசிச சக்திகள் கை மேலோங்கி இருப்பது மெய்யாயினும், தற்காலிகமானது. வெற்று நம்பிக்கை அலட்டலில்லை என்பதைக் கூடங்குளம் மக்கள் உணர்த்தி நிற்கின்றனர். ஜனனாயக சக்திகள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் எத்தனை கனதியானது என்பதற்கு அவர்கள் நேர் உதாரணம். தலைமை தாங்கிய உதயகுமார் தவிர்க்கவியலாத நிலையில் சரணடைய முற்பட்டபோது போராடும் மக்கள் அவரைச் சூழ்ந்து ஆர்ப்பரிப்போடு குண்டுக்கட்டாய்த் தூக்கித் தம்மோடு எடுத்துச் சென்று பாதுகாத்து, போராட்டத்தையும் தொடர்கின்றனர். தன்னைக் காக்க மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவிச் செல்ல ஒரு தலைவர் உருவாகிய துன்பியல் தொடரப் போவதில்லை; மக்களுக்கான சரியான கோட்பாடு கண்டறியப்பட்டு ஏற்ற போராட்ட மார்க்கம் வகுக்கப்பட்டு முன்னேறும் போது தலைமைக்கும் புத்தூக்கமூட்டும் மக்கள் எழுச்சி இந்த உலகமயமாதலிலும் சாத்தியம் என்பதை மெய்ப்பிப்பதற்காகவே கூடங்குளம் மக்களுக்கான புரட்சிகர வணக்கங்களைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.  

 சரியான கோட்பாடு என்பதில் சுயநிர்ணயத்தை இன்று எவ்வாரு வரையறைப்படுத்துவது என்ற சங்கதி பிரதான இடத்தை எடுத்துள்ளது. முன்னர் இலங்கைத் தேசியம் மட்டுமே உ ள்பொருளென்று ஈழத்தமிழ்த் தேசியம் அதற்குட்பட்டிருப்பது சாத்தியம் என்பதை மறுதலித்தது உண்மையேயாயினும் விரைவில் தவறைத் திருத்தி தமிழ்த் தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் இலங்கைக் கொம்யூனிஸ்ட்டுகள் ஏற்பவராயினர். இன்றும் அதில் மாற்றமில்லை. பல கொம்யூனிஸ்ட்டுகள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை நூறு வருடங்களின் முன்னர் ஏகாதிபத்திய நேராட்சியில் குடியேற்ற நாடுகளாக நாம் இருந்த காலத்தில் பேசப்பட்ட அந்த வரையறை பெயரளவிலான சுதந்திரத்தை ஈட்டி, அதைப் பொருளுள்ளதாக்கப் போரடும் இன்றைய சூழலில் மாற்றத்துக்குரியது எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இடியப்பச் சிக்கலாக (பிட்டும் தேங்காய்ப்பூவும் போல) கலந்தே வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களை எப்படிக் கூறு போட்டுப் பிரிந்து செல்லும் உரிமை பேசப்போகிறோம்? நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உணர்த்தும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டாமா? இதன் பிரதிநிதித்துவம் கறாரான உண்மை எனக்கொள்ளத்தக்கது இல்லை என்றபோதும் முழுதாகப் புறக்கணிக்கத்தக்கதுமல்ல என்பதறிவோம். முஸ்லிம் 15, தமிழ் 12, சிங்களம் 8 எனும்வகையில் அமையும் பிரதிநிதித்துவம் கிழக்கில் தமிழ்ப் பெரும்பான்மை என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் முஸ்லிம் பெரும்பான்மை என்பதும் காணாமல்போய், கிழக்கு சிங்களமயப்படவுள்ள வாய்ப்பை முஸ்லிம் மக்கள் உணர்ந்த அளவுக்கு தமிழ்த் தேசியர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை(சம்பந்தர் கேட்டும் ஹக்கீம் வரவில்லை என்ற தலைகீழ் யதார்த்தம் சந்தர்ப்பவாத அரசியலாளர் விவகாரம்; இதில் சம்பந்தர் சரி ஹக்கீம் தவறிழைக்கிறார் என்பதும் பொருளல்ல. இரு சிறு தேசிய இனத் தலைவர்களைக் கடந்து கிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு நிதர்சனமாகாது தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், எது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அக்கறைக்குரியது). செய்யக்கூடாததைச் செய்வதும், செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பதும் கேடு விளைப்பதாகும் என்பது குறளில் வலியுறுத்தப்பட்டிருந்த ஓர் உண்மை. சிங்கள மக்கள் தத்தமது வாழிடங்களில் தமது வாழ்வாதாரங்களை வென்றெடுக்கப் போராடும் வகையில் நாம் உதவ இயலும். எமது நடைமுறையில் செய்ய வேண்டியதையும்-தவிர்க்க வேண்டியதையும் இனங்காண நாம் முயல்வதில் அது தங்கியுள்ளது. பிரிவினையால் தமக்கு கேடு நேரும் என்ற சிங்கள மக்களது அச்சத்தைப் போக்கி, அதேவேளை வடக்கு-கிழக்கில் எமது சுயநிர்ணயத்தை வென்றெடுக்க சிங்கள மக்களையும் ஏற்புக்கொள்ளவைப்பதற்கு பிரிவினையற்ற சுயநிர்ணயக் கோட்பாடு குறித்த விவாதமே இன்று அவசியமாகிறது. வடக்கை மட்டும் பிரிப்பதா, கிழக்கின் தமிழ்ப் பகுதியை சேர்த்துக்கொண்டு பிரிவதா(ஊடறுத்து நிற்கும் முஸ்லிம்-சிங்களக் கிராமங்களை என்ன செய்வது), தென் கிழக்கு முஸ்லிம் மக்களை பிரிந்துபோக அனுமதிப்பதாயின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களின் நிலை என்னாவது எனக்கேள்விகள் ஆயிரமுண்டு. சுயநிர்ணய விவாதத்தை சிங்கள-முஸ்லிம் முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுப்பதிலேயே இவற்றுக்கான தீர்வுகள் தங்கியுள்ளன. இல்லாமல் யூக்கோஸ்லவாக்கியா, திமோர், சூடான் போல ஏகாதிபத்திய வேட்டைக்காடாக இந்த இலங்கை மண்ணை ஆக்கப்போகிறோமா? தொடரும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனவாத சக்திகளின் முன்னே முற்போக்கு சக்திகள் கையறுநிலையில் இருப்பது நீடிப்பின் அந்த அச்சுறுத்தலின் படிப்பினையையும் கண்டுதான் திருந்துவோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறாகினும், இன்று முன்னெடுக்கும் ஆரோக்கியமான விவாதமும் அதுசார்ந்த ஒன்றுபடலும் அழிவின் கொடூரத்தையாவது குறைக்க ஏதுவாகும். அந்த நம்பிக்கை இல்லாமல் இல்லை. சில சிங்களக் கட்சிகள் வெளியிட்டுள்ள "மக்களைப் பிளவுபடுத்தும் இனவாதத்தை தோற்கடிப்போம்" என்ற துண்டுப்பிரசுரம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவுள்ளது; தெற்கில் முஸ்லிம் பள்ளிவாசல்கள்மீது சிங்கள இனவாத சக்திகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை  வன்மையாகக் கண்டித்து அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அறைகூவல்விடுத்துள்ளது.  இனவாதத்தைக் கடக்க எத்தனிக்கும் நேசசக்திகள்  நாம் கோரும் சுயநிர்ணயம் குறித்த விவாதத்தில் இணைவர் என நம்ப இடமுண்டு. "ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி, சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி".


No comments:

Post a Comment