Wednesday, May 2, 2012

மே தினம்



 மே தினம்: முதலாளி வர்க்கத்தின் மூடு திரையல்ல!

இன்று மே தினம்; ஊர் சுற்றி ஓடி தோழர்களை அணி திரட்டியவாறு யாழ் நகரின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் கோசங்களை முழக்கும் அந்த நாட்களுக்கு ஏங்க வேண்டும் என்பதற்கு இல்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகளும் முதலாளி வர்க்கமும் மேதினம் கொண்டாடும் வேடிக்கைக்காக வருந்த ஒன்றும் இல்லை. இன்றைய பத்திரிகைகளின் கருத்துப்படங்கள் எல்லாமே அனேகமாய் முதலாளிகள் அரிவாளையும் சுத்தியலையும் கையுக்கொன்றாய் அபகரித்து வைத்துக்கொண்டு வேடிக்கை வினோதம் காட்டுவதாயே உள்ளன.

அவற்றில் ஒன்றில், சஜித் பிரேமதாசும் ரணிலும் ஒருவர் கழுத்தில் மற்றவரது அரிவாளும், அவரின் தலையில் இவரது சுத்தியலும் மோதத் தயார் நிலையில் இருப்பதாக சித்திரிக்கப்பட்டிருந்தது. மேதினத்தை தமது உட்கட்சி பிளவுக்கு வெளிப்பாடானதாக அவர்கள் ஆக்கும் கோளாறு மட்டும் இதில் இல்லை. பாட்டாளி வர்க்க மற்றும் ஒடுக்கப்படும் இன அரசியல் முன்னெடுப்பை ஆதிக்க வர்க்கப் பிரதிநிதிகள் எவ்வகையில் கையாள்கிறார்கள் என்பதையும் இதுகாட்டுகிறது.

மேதினத்தை நினைவு கூர அனுமதிக்க மறுத்த கட்சி ஐ.தே.க. ; பண்டாரநாயக்க அரசு அதனை விடுமுறை நாளாக்கி தொழிலாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கிய பின்னர், அந்நாளில் இரத்தம் சிந்தவைத்த வரலாறு ஐ.தே.க.வினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று தவிர்க்க இயலாமல் 'விடுதலைக்கான போராடும்' நாளாய் இத்தினத்தை நினைவு கூருகிறார்களென்றால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் மகத்தான வெற்றியின் வெளிப்பாடு இதுவென்பதை அழுத்தி வலியுறுத்துவது அவசியம். 

யாழ்ப்பாணத்தில் ரணில் மேதினத்தை கொண்டாடும்போது ஒடுக்கப்பட்ட இனமொன்று விடுதலை கொள்ள வாய்ப்பிருப்பதாக மயங்க இடமுண்டு. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் வாக்கு அங்கீகாரத்தைப் பெற்ற கூட்டமைப்பு இதனோடு ஐக்கியப்பட்டு மேதினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துகிறது. இறுதி யுத்தத்துக்கு தலைமையேற்று கொலை பாதகங்களைப் புரிந்ததோடு முள்ளு வேலிக்குள் தப்பிவந்த மக்களை அடைத்துவைத்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்த கூட்டமைப்பு, தமிழினத்துக்கு எதிராக யுத்தமென்றால் யுத்தமென்று பிரகடனம் செய்து இன்றுவரை அரசியல் தீர்வுக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் கட்சியொன்றோடு சேர்ந்து மேதினம் கொண்டாடுவதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை; இவர்கள் மக்கள் விரோத சக்திகள் என்ற புரிதலை ஏராளமான தமிழ் மக்கள் வந்தடைய இயலாதிருக்கிறது என்பதே வியப்புக்குரியது.

சஜித் பிரேமதாச கொழும்பில் நடாத்தும் 'பிரேமதாச நினைவு நாள்' கொண்டாட்டம் கூட்டுக்குழப்பமேளா! இதை அவர் கட்சியுணர்வோடு ஐ.தே.க.வின் யாழ் மேடையிலேயே இணைத்திருப்பின் குறைந்தபட்ச அரசியல் நேர்மையாளராகக் கணிக்கப்பட இடமேட்படுத்தியிருப்பார். வெறும் உட்கட்சிப் போட்டியாக இதனைக் கணிக்க இயலவில்லை; அவரது மோசமான இனவாத உணர்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது. பிரேமதாச 19 ஆண்டுகளின் முன்னே தனது கட்சி மேதின ஊர்வலத்துக்காக நின்ற களத்தைக் கொலைவெறிக்குதேர்வு செய்தமை புலிகள் இழைத்த பல்வேறு அயோக்கியத்தனமான உழைக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலேயே அதியுச்சமானது. அதற்கு சஜித் இந்த வடிவில் பழி தீர்ப்பது புலியும் யானையும் வேறுவேறு வகை மிருகங்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவது. 

இன்றைய ஆதிக்கவாத அரசியல் அமைப்பை அரங்கேற்றிய ஐ.தே. க., தனது குதிரையை சக்கடத்தார் மேலும் கொலைவெறி வேகத்தில் வலுவேற்றுவதில் மகிழும் கொண்டாட்டமாயும் இவற்றைக் காணலாம். இவர்கள் இரண்டுபட்டு தமிழிலும் சிங்களத்திலும் பிற்போக்கான இந்த மாயத்தினத்தைக் கொண்டாடும்போது 'ஒரே நாடு' எனும் தொனிப் பொருள் எதிர்காலத்தில் தமது ஆதிக்கவாத-பேரினவாதக் கொலைவெறி ஆட்சிக்கு மேலும் வலுவான அத்திவாரத்தை இட்டுத்தருவதாக மகிழ்வோடு இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

இதுபோன்ற பாதகங்களைக் கண்டு துவண்டு போக பாட்டாளி வர்க்க இயக்கம் ஒன்றும் அத்தனை பலவீனமான ஒன்றல்ல; அனைத்துவகை கபடச் சூழ்ச்சிகளையும் புறங்காணச் செய்து, முதலாளித்துவத்தின் புதிய மூடு திரைகளையும் கிழித்தெறிந்து, தன்னைச் சூழ்ந்த சாம்பல் மூட்டத்தையும் ஊதித் தள்ளி கொழுந்துவிட்டெரியும் போர்ச் சுவாலையில் உலகைப் புதிதாய்ப் புனையும் தன் வரலாற்றுப் பணியை மீண்டும் பாட்டாளி வர்க்க இயக்கம் கையேற்கும்! அதற்கென ஒன்றுபட்டு உழைக்க இந்த உழைப்பாளர் தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்!!

"உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட  மக்களே ஒன்று சேருங்கள்'"

No comments:

Post a Comment